Published : 11 May 2022 06:23 AM
Last Updated : 11 May 2022 06:23 AM

திருத்தணி | போலீஸ் விசாரணைக்கு பயந்து இளைஞர் தற்கொலை

திருத்தணி: திருவாலங்காடு அருகே மதுபோதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக போலீஸ் விசாரணைக்கு உள்ளாவோம் என, பயந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே சின்னம்மாபேட்டையை சேர்ந்தவர் சந்துரு(35). தொழுதாவூரை சேர்ந்தவர் ரஜினி (44). கூலி தொழிலாளிகளான இருவரும் நண்பர்கள்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சந்துருவும், ரஜினியும் சின்னம்மாபேட்டை டாஸ்மாக் மதுபானக் கடை அருகே மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, நண்பர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக வெடித்தது.

இதில், தலையில் படுகாயமடைந்த ரஜினி, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், போலீஸ் விசாரணைக்கு உள்ளாவோம் என பயந்த, சந்துரு நேற்று மாலை தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, திருவாலங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x