Published : 03 May 2022 06:04 AM
Last Updated : 03 May 2022 06:04 AM

ராணிப்பேட்டையில் மகன் இறந்த துக்கம் தாளாமல் பெற்றோரும் தூக்கிட்டு தற்கொலை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் மனநலம் பாதித்த மகன் தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்து துக்கம் தாளாமல் பெற்றோரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை அடுத்த காரை புதுத்தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (62). இவர், அதே பகுதியில் சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடை வைத்திருந்தார். இவரது மனைவி குணசுந்தரி (50). வீட்டின் ஒரு பகுதியில் சிறிய மிஷின் வைத்து மாவு அரைத்து கொடுக்கும் வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கு விக்னேஷ், ரமேஷ் (30) என்ற இரண்டு மகன்கள். விக்னேஷ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இளைய மகன் ரமேஷ் சில மாதங்களுக்கு முன்பு தலையில் அடிபட்டு சற்று மனநிலை பாதிக்கப்பட்டார். இதற்காக, வேலூர் பாகாயத்தில் உள்ள சிஎம்சி மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மனநலன் பாதித்த நிலையில் அவர் பெற்றோருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ரமேஷின் நிலையைப் பார்த்து அவரது மனைவி காயத்ரி 2 வயது குழந்தையை அழைத் துக்கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், ரமேஷ் மற்றும் அவரது பெற்றோர் அடுத்தடுத்த அறைகளில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது நேற்று காலை தெரியவந்தது. இது தொடர்பாக அவரது உறவினர்கள் அளித்த தகவலின்பேரில், ராணிப்பேட்டை காவல் துறையினர் விரைந்து சென்று மூவரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோத னைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் துறையினர் நடத்திய தொடர் விசாரணையில், ‘குடும்ப தகராறு காரணமாக மூவரும் தற்கொலை செய்திருக்கலாம்' என தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி உயிரிழந்தவர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களது உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x