Published : 30 Apr 2022 06:00 AM
Last Updated : 30 Apr 2022 06:00 AM

திருவண்ணாமலை | தற்கொலை முயற்சியில் விபரீதம்; கிணற்றிலிருந்து 7 மாத குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்பு: தாய், மகள் உயிர் தப்பினர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே குடும்ப பிரச்சினையில் கிணற்றில் குதித்த தாய் மற்றும் சிறுமி மீட்கப்பட்ட நிலையில், 7 மாத ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் 2 குழந்தைகளுடன் பெண் ஒருவர் நேற்று முன் தினம் இரவு குதித்துள்ளார். இதையறிந்த கிராம மக்கள், கிணற்றில் இருந்து பெண் மற்றும் 4 வயது சிறுமியை மீட்டனர். அதேநேரத்தில் 7 மாத ஆண் குழந்தையை மீட்க முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறையினர், 7 மாத ஆண் குழந்தை ஸ்ரீதரை உயிரிழந்த நிலையில் மீட்டனர்.

இந்நிலையில் மீட்கப்பட்ட பெண்ணிடம், திருவண்ணாமலை கிழக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அந்த பெண்ணின் பெயர் கமலா(30) என்பதும், அவரது கணவர் பெயர் ஏழுமலை என்பதும், குடும்ப பிரச்சினை காரணமாக 4 வயது மகள் மற்றும் 7 மாதக் குழந்தையுடன் கிணற்றில் குதித்துள்ளதும், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x