Last Updated : 05 Apr, 2022 04:00 PM

 

Published : 05 Apr 2022 04:00 PM
Last Updated : 05 Apr 2022 04:00 PM

அதிராம்பட்டினம் அருகே கடலில் மிதந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

மீட்கப்பட்ட கஞ்சா சாக்குகள்

தஞ்சாவூர்: அதிராம்பட்டினம் அருகே கடலில் மிதந்த 160 கிலோ எடையுள்ள, ரூ.25 லட்சம் மதிப்பிலான கஞ்சா மூட்டைகளை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு மற்றும் கடலோர காவல் படையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரையைச் சேர்ந்தவர் மீனவர் சோமசுந்தரம். இவர் தனக்கு சொந்தமான படகில், சக மீனவர்களுடன் இன்று (5-ம் தேதி)அதிகாலை, சுமார் 7 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது படகு அருகே 5 மூட்டைகள் தண்ணீரில் மிதந்து உள்ளது. இதையடுத்து அந்த மூட்டைகளை தனது படகில் ஏற்றிக்கொண்டு மீனவர் சோமசுந்தரம் இதுகுறித்து அதிராம்பட்டினம் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தார்.

கடலோர காவல் படை அறிவுறுத்தலின் பேரில், அந்த மூட்டைகளை மீனவர் சோமசுந்தரம் கரைக்கு கொண்டு வந்தார்.

உடனடியாக நாகப்பட்டினம் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பரத்சீனிவாசன், அதிராம்பட்டினம் கடலோர காவல்படை ஆய்வாளர் மஞ்சுளா, உதவி ஆய்வாளர் ஞானசேகரன், தலைமைக் காவலர் வெற்றிச்செல்வன் ஆகியோர், மீனவர்கள் படகில் ஏற்றி வந்த மூட்டையை கைப்பற்றி அதிராம்பட்டினம் கடலோர காவல்படை அலுவலகத்துக்கு கொண்டு வந்து சோதனை நடத்தினர்.

இதில் 5 மூட்டைகளில், சிறுசிறு பொட்டலங்களாக கட்டப்பட்ட நிலையில் 160 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 25 லட்சம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த கஞ்சா மூட்டைகள் கடலுக்குள் எவ்வாறு சென்றது, அதனை கடலுக்குள் சென்று போட்டு வந்தது யார், இந்தப் போதைப் பொருள் இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததா, இதில் ஈடுபட்டவர்கள் யார் என்பன குறித்து பல்வேறு கோணங்களில் கடலோர காவல்படையினர் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x