Published : 05 Apr 2022 03:10 PM
Last Updated : 05 Apr 2022 03:10 PM

என்எஸ்சி போஸ் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - அறிக்கை கோரும் உயர் நீதிமன்றம்

சென்னை: சென்னை என்எஸ்சி போஸ் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் அமைந்துள்ள என்எஸ்சி போஸ் சாலையில் நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி, மறைந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த 2016ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகக் கூறி புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், சாலையில் ஆக்கிரமித்து நடத்தப்படும் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டாலும், மீண்டும் முளைத்து விடுவதாக தெரிவித்தார்.அப்போது, நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்குவது தான் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எனவும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் கோரினார். வியாபாரிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகசைலா, 15 மாற்று இடங்களை அடையாளம் கண்டு தெரிவித்தும், அதன் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், என்எஸ்சி போஸ் சாலை, வியாபார பகுதி அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னர் அங்கு மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, நிரந்தர தீர்வு காண்பதற்கு அரசுக்கு 6 வாரம் கால அவகாசம் வழங்கி, விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x