Last Updated : 04 May, 2024 06:21 PM

 

Published : 04 May 2024 06:21 PM
Last Updated : 04 May 2024 06:21 PM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 மாதங்களில் 22 கொலை வழக்குகள் பதிவு

கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தங்கதுரை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை குண்டர் சட்டத்தின் கீழ் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. தங்கதுரை கூறினார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை 22 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல 4 மாதங்களில் 153 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. அதில், 114 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களவு போன ரூ.2 கோடியே, 12 லட்சத்து, 69 ஆயிரத்து, 100 மதிப்பிலான பொருட்களில், ரூ.1 கோடியே, 33 லட்சத்து, 6 ஆயிரத்து, 425 மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க பட்டுள்ளது. கடந்த மாதம் குருபரப்பள்ளி ஏடிஎம் மையத்தில் கொள்ளை போன வழக்கில், 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர் நகைப் பறிப்பில் ஈடுபட்ட ராணிப்பேட்டை நவீன், போச்சம்பள்ளி சுரேஷ் ஆகியோரை கைது செய்து 28 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. கஞ்சா விற்ற வழக்கில், 40 பேர், புகையிலை பொருட்கள் விற்றதில், 138 பேர் கைது செய்யப்பட்டு, 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள், 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா தீவிர விசாரணை: போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்து கண்காணிக்க, 5 உட்கோட்டத்திலும் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்திலுள்ள 9 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போதைப் பொருட்களை சாதாரணமாக பையில் வைத்து எடுத்து சென்றுவிடுகின்றனர். இதனால் அவர்களை பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

தீவிர கண்காணிப்பு, ரகசிய தகவல் மூலமாகவே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தலை தடுத்து, கைது செய்கிறோம். சிறுகடைகளில் விற்கப்படும் போதைப் பொருட்கள் எவ்வாறு அங்கு வருகிறது என்பது குறித்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம். இது குறித்து தகவல் தெரிந்தவர்கள் கூறும் பட்சத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.

ரூ.8 கோடியே 4 லட்சத்து 50 ஆயிரம் மோசடி: இணையவழி குற்றங்களாக நமது மாவட்டத்தில் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தற்போது வரையில் இணைய வழி குற்றங்களில் ரூ.8 கோடியே 4 லட்சத்து 50 ஆயிரம் இழந்துள்ளனர். அதில் ரூ.5 கோடியே 80 லட்சம் முடக்கப்பட்டுள்ளது.

ரூ.47 லட்சத்து 65 ஆயிரம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 322 பேரின் செல்போன்கள் தொலைந்ததாக புகார் பெறப்பட்டு, 169 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இணையவழி குற்றங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் இலவச அழைப்பு எண் 1930 தொடர்பு கொள்ளலாம். மேலும் https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகார் செய்யலாம்.

விடுமுறையில் ஊருக்கு செல்லும் பொதுமக்கள் நகைகள், உடமைகளை பாதுகாப்பாக வைத்து செல்ல வேண்டும். அவ்வாறு செல்பவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கவும். மேலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த பொதுமக்களை கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x