Last Updated : 25 Apr, 2024 06:36 PM

 

Published : 25 Apr 2024 06:36 PM
Last Updated : 25 Apr 2024 06:36 PM

சொத்துக் குவிப்பு வழக்கு: ஓய்வுபெற்ற சார்பதிவாளர், மனைவிக்கு 5 ஆண்டு சிறை @ திருச்சி

ஓய்வு பெற்ற சார்பதிவாளர் ஜானகிராமன், அவரது மனைவி வசந்தி

திருச்சி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஓய்வு பெற்ற சார்பதிவாளர் மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்களுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தாத்தையங்கார்பேட்டை பிள்ளாதுறை பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் மகன் ஜானகிராமன் (79). ஓய்வு பெற்ற சார்பதிவாளர். இவர், சார்பதிவாளராக 1989-1993 காலகட்டத்தில் துறையூர், உறையூர், முசிறி, அட்டுவம்பட்டி, வில்பட்டி, கொடைக்கானல் ஆகிய முக்கிய இடங்களில் சார்பதிவாளராக பொறுப்பு வகித்துள்ளார். இந்த காலகட்டத்தில் இவர் பணிபுரிந்த போது, அவரது வருமானத்துக்கு அதிகமாக சட்டவிரோதமான வகையில், இவரது பெயரிலும் மனைவி வசந்தி (65) பெயரிலும் வாங்கிக் குவித்த சொத்துகளின் அப்போதைய மதிப்பு ரூ.32,25,532 ஆகும்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக எழுந்த புகாரின் பேரில், கடந்த 17.08 2001-ம் தேதி அப்போதைய திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அம்பிகாபதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி கார்த்திகேயன் வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். அதில், குற்றவாளியான ஜானகிராமன் மற்றும் அவரது மனைவி வசந்தி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா பத்தாயிரம் அபராதமும், விதித்தார். மேலும் வருமானத்துக்கு அதிகமாக குற்றவாளிகளால் சேர்க்கப்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்து அரசுக்கு ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட ஜானகிராமன் திருச்சி மத்திய சிறையிலும், வசந்தி காந்திமார்கெட் மகளிர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

தண்டனை பெற்றுள்ள ஓய்வு பெற்ற சார்பதிவாளர் ஜானகிராமன் மற்றும் அவரது மனைவி வசந்தி பெயரில், வில்பட்டி மற்றும் கொடைக்கானல் பகுதியில் வாங்கிய சொத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர். இந்த வழக்கின் தொடர் விசாரணையை தற்போதைய காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர் சேவியர்ராணி, உதவி ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் நடத்தினர். அரசு தரப்பில் வழக்கறிஞர் சுரேஷ்குமார் ஆஜராகி வாதாடினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x