

சென்னை: புறநகர் மின்சார ரயிலில் பயணி தவறவிட்ட 38 பவுன் நகைகள் அடங்கிய பையை போலீஸில் ஒப்படைக்காமல் எடுத்துச் சென்றவர் கைது செய்யப்பட்டார்.
டெல்லியின் மேற்கு சாகர்பூர் பகுதியில் வசிப்பவர் வெங்கடேசன் (54). இவர், மயிலாடுதுறையில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு செல்வதற்காக தனது மனைவி, 2 மகள்களுடன் டெல்லியில் இருந்து கடந்த 12-ம் தேதி சென்னைக்கு வந்தார். தாம்பரத்தில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்.
அவர்கள் 13-ம் தேதி காலை, தாம்பரத்தில் இருந்து மின்சார ரயிலில் எழும்பூர் வந்துள்ளனர். திருச்சி செல்லும் சோழன் விரைவுரயிலில் ஏறுவதற்காக காத்திருந்தனர். அப்போது, 38 பவுன் தங்க நகைகள், செல்போன், அடையாள அட்டை வைத்திருந்த பையை மின்சார ரயிலில் தவறவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து எழும்பூர் ரயில்வே போலீஸில் வெங்கடேசன் புகார் கொடுத்தார். ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்தனர். ரயில்வே எஸ்.பி. பொன்ராம் மேற்பார்வையில், டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் தனிப்படை போலீஸார், புறநகர் ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். ஒருநபர் அந்த பையை எடுத்து செல்வதை கண்டுபிடித்தனர்.
இந்நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்றிருந்த அவரைரயில்வே போலீஸார் நேற்று கைது செய்தனர். தாம்பரம் இரும்புலியூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தபாபு (46) என்ற அந்த நபர், செங்கல்பட்டு - கடற்கரை மின்சார ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையைஎடுத்துச் சென்றதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, அவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 38 பவுன் நகைகள், செல்போன், அடையாள அட்டை ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.