Published : 27 Jul 2017 03:39 PM
Last Updated : 27 Jul 2017 03:39 PM
'விக்ரம் வேதா' பார்த்துவிட்டு, படக்குழுவினருக்கு தொலைபேசி வாயிலாக தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் ரஜினி.
'விக்ரம் வேதா' திரைப்படம் விமர்சன ரீதியில் மட்டுமன்றி, வசூல் ரீதியிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால் அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இப்படத்துக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களுக்கு, தங்களுடைய பாராட்டைத் தெரிவித்துள்ளார்கள்.
ரஜினிகாந்தும் இப்படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். "அற்புதம்... அற்புதம்! 'விக்ரம் வேதா' பார்த்துவிட்டு ரஜினி சார் கூறினார். அந்த இரண்டு வார்த்தைகள் நீண்ட நாட்களுக்குக் கேட்டுக் கொண்டே இருக்கும்" என தயாரிப்பாளர் சஷிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் புஷ்கர் - காயத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், "கிளாஸாக எடுக்கப்பட்ட மாஸ் படம் என்று சூப்பர் ஸ்டார் எங்களிடம் தெரிவித்துள்ளார். நன்றி ரஜினிகாந்த் சார்" என்று தெரிவித்துள்ளார்கள்.
மேலும், இப்படம் வெளியான முதல் வாரத்திலேயே 10 கோடி வசூலை கடந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமன்றி அமெரிக்காவிலும் பல்வேறு ல் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலெட்சுமி சரத்குமார், ஷ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம் வேதா'. சாம் இசையமைத்துள்ள படத்துக்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சஷிகாந்த் தயாரித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT