Last Updated : 04 Jan, 2017 03:55 PM

 

Published : 04 Jan 2017 03:55 PM
Last Updated : 04 Jan 2017 03:55 PM

தயாரிப்பாளர் சங்க சர்ச்சை: உயர் நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார் விஷால்

தயாரிப்பாளர் சங்கம் பற்றி கூறிய கருத்துகளுக்கு, உயர் நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்து பிரமாண பத்திர நகல்களைத் தாக்கல் செய்தார் விஷால்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவில், "தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் வாரப் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தேன். அதில் என்னுடைய சில தனிப்பட்ட கருத்துகளை தெரிவித்து இருந்தேன். இதையடுத்து, என்னை தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து 3 மாதம் இடைநீக்கம் செய்து எஸ்.தாணு உத்தரவிட்டார். எனவே இந்த இடைநீக்க உத்த ரவை ரத்து செய்ய வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏஆர்எல்.சுந்தரேசன், 'மனுதாரர் விஷால், தான் தெரிவித்த கருத்து குறித்து வருத்தம் தெரிவித்தால், அவரது இடைநீக்க உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும்' என்றார்.

இதற்கு விஷால் தரப்பில் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அவரது வழக்கறிஞரிடம் தெரிவித்த நீதிபதி, விசாரணையை நேற்று (ஜன.3) தள்ளி வைத்தார்.

இந்நிலையில் இன்று(ஜனவரி 4) இவ்வழக்கில் விஷால் அளித்த பதில் மனுவில், "தமிழ் வார இதழில் படத் தயாரிப்பாளர் சங்க நடவடிக்கைகளை பற்றி எனது சொந்தக் கருத்தை தெரிவித்திருந்தேன். அதில், எனது கருத்துகளை, யாரையும் புண்படுத்தவோ, சர்ச்சையை உருவாக்கவோ கூறவில்லை. மேலும், அதே பேட்டியில் நான், தயாரிப்பாளர் சங்கத்தின் எந்தவொரு தனிப்பட்ட நிர்வாகிக்கு எதிராகவும் நான் செயல்படவில்லை எனவும் விளக்கமளித்திருந்தேன், இருப்பினும் சில நிர்வாகிகள், நான் அவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததாக கருதினர்.

இந்த சர்ச்சையை மென்மேலும் பெரிதாக்க விரும்பாததாலும், திரையுலகின் பல்வேறு சங்கங்களின் நட்புறவை நீட்டித்துக்கொள்ளவும், நான் இந்த பிரமான பத்திரத்தை தாக்கல் செய்கிறேன்.

நான் முன்பே குறிப்பிட்டது போல, நேர்மையானவனாகவும், பொறுப்பானவனாகவும், சட்ட திட்டங்களை மதித்தும் நடந்துகொள்கிற குடிமகன். இதழில் வெளியான பேட்டியில் நான் கூறிய கருத்துகள் எவரையேனும் புண்படுத்தியிருந்தால், எனது வருத்தங்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது நோக்கம் யாரையும் காயப்படுத்துவது அல்ல. மேலும், நான் படத் தயாரிப்பாளர் சங்க விதிமுறைகளை மிகவும் மதித்து நடக்கிறேன். என்னை தற்காலிகமாக, தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்கியதை திரும்பப் பெற வேண்டுமெனவும், என்னை சங்கத்தில் உறுப்பினராக மீண்டும் சேர்த்துக் கொள்ளவும் கோருகிறேன்.

உயர் நீதிமன்றம், எனது இந்த பிரமாண பத்திரத் தகவல்களைப் பதிவு செய்துகொண்டு, தீர்ப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,” என விஷால் குறிப்பிட்டுள்ளார்.

விஷால் வருத்தம் தெரிவித்துள்ளதால், மீண்டும் தயாரிப்பாளர் சங்கம் வரை உறுப்பினராக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x