Published : 20 Dec 2018 01:33 PM
Last Updated : 20 Dec 2018 01:33 PM

நாலே மாசத்துல தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - முதல்வரிடம் கோரிக்கை

இன்னும் நான்கே மாதங்களில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என விஷாலுக்கு எதிர் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் நீயா நானா போட்டி வலுத்து வருகிறது. விஷாலுக்கு எதிராக ஒரு அணியினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டனர். இது இன்னும் பரபரப்பைக் கிளப்பியது.

இதனிடையே இன்று பூட்டை உடைக்க விஷால் தரப்பினர் வந்தார்கள். ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து விஷால் தரப்பினரை போலீசார் கைது செய்தார்கள்.

இந்த நிலையில், பாரதிராஜா தலைமையில் ஒரு குழுவினர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தனர்.

பிறகு தலைமைச் செயலகத்தில் தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்ததாவது:

தயாரிப்பாளர்களையும் தயாரிப்பாளர்கள் சங்கத்தையும் அழிக்கப் பார்க்கிறார் விஷால். தமிழ் ராக்கர்ஸுடன் சேர்ந்து கொண்டும் லைக்காவுடன் சேர்ந்துகொண்டும் அத்தனை முயற்சிகளையும் செய்துவருகிறார்.

இவர்களிடம் 33 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு இரும்புத்திரை படத்தை வெளியிட்டவர் விஷால். தயாரிப்பாளர் சங்கத்தை மீட்டெடுக்க வேண்டும். ஒரு நல்ல நிர்வாகம் தயாரிப்பாளர் சங்கத்தைச் செயல்படுத்தவேண்டும்.

இதைத்தான் கோரிக்கையாக வைத்திருக்கிறோம்.

இன்னும் நான்கு மாதத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும்.                    

இவ்வாறு தெரிவித்தார்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x