Last Updated : 10 Nov, 2018 05:58 PM

 

Published : 10 Nov 2018 05:58 PM
Last Updated : 10 Nov 2018 05:58 PM

#மீடூ; கண் விழிக்கும்போது என்னுடைய பெயரைக் கேட்க வேண்டி வருமா என்று பயத்தில் இருக்கிறேன்: விஷால் பேட்டி

#மீடூ இயக்கம் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் நடிகர் விஷால், கண் விழிக்கும்போது என்னுடைய பெயரைக் கேட்க வேண்டிவருமா என்ற பயத்துடன் இருக்க வேண்டிய நிலை வந்துவிட்டது என்கிறார்.

மீ டூ குறித்து ஐஏஎன்எஸ் செய்தி ஏஜென்சிக்கு விஷால் அளித்த பேட்டி:

''தமிழ் சினிமாவோ, தெலுங்கு, மலையாளம் அல்லது கன்னட சினிமாவோ, பணியிடத்தில் நடிகைகளின் பாதுகாப்பும் வசதியும் உறுதிப்படுத்தப் பட வேண்டும். வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் பாலியல் வற்புறுத்தல்களுக்குப் பலியாகக் கூடாது. இணங்காவிட்டால் வாய்ப்புகள் பறிபோய் விடும் என்ற பயம் நீங்க வேண்டும்.

இங்கு பாலியல் சுரண்டல்கள் அதிகம் இருக்கின்றன. பொழுதுபோக்குத் துறையில் பணியாற்றும் பெண்கள் பாதுகாப்பாக உணர வேண்டும். இதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து சினிமாத் துறைகளும் ஒன்றிணைந்து செட்டுக்கு வெளியேயும் உள்ளேயும் பெண்களுக்குப் பாதுகாப்பை வழங்க வேண்டும்.

பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை நோக்கிப் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில் வெளியான என்னுடைய 'சண்டக்கோழி 2' படத்தில் இரண்டு முக்கியமான பெண் கதாபாத்திரங்கள் இருந்தன. அவற்றில் கீர்த்தி சுரேஷும் வரலட்சுமி சரத்குமாரும் நடித்தனர். அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

என்னுடைய படங்களில் நடிக்கும் பெண்களுக்கான பாதுகாப்பை நான் பார்த்துக் கொள்கிறேன். அதே பாதுகாப்பை நாடு முழுவதும் உள்ள திரைத் துறையினர் அளிக்க வேண்டும்.

#மீடூ இயக்கம் பாலியல் இச்சைகளை வெளிப்படுத்தும் மிருகங்களை வெளிக்கொண்டு வரும் விதமாகத்தான் தொடங்கியது. ஆனால் எங்கோ ஓர் இடத்தில் சுய லாபத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க மறுத்தற்காக, ஒரு படம் குறித்து வாக்கு கொடுத்துவிட்டு நிறைவேற்ற முடியாததற்காக, இன்னும் பிற காரணங்களுக்கான பழிவாங்கும் நடவடிக்கையாக மீ டூ பயன்படுத்தப்படுகிறது.

கண் விழிக்கும்போது என்னுடைய பெயரைக் கேட்க வேண்டிவருமா என்ற பயத்துடன் இருக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. இந்த அவநம்பிக்கை, பயம், சந்தேகம் ஆகிய சூழல் நீக்கப்பட வேண்டும்.

தனிப்பட்ட காரணங்களுக்காக நடிகர்களின் பெயர்களைக் களங்கப்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.

வற்புறுத்தலுக்கும் இணங்கி உறவு கொள்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. திரைத்துறையில் நான் இரண்டு பெண்களுடன் 'டேட்டிங்' செய்திருக்கிறேன். அதற்காக அவர்களைப் பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்தி விட்டேன் என்று அர்த்தம் ஆகாது'' என்றார் விஷால்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x