Published : 20 Aug 2018 04:17 PM
Last Updated : 20 Aug 2018 04:17 PM

“தண்ணீரை எப்படி சேமிப்பதென யாருக்கும் தெரியவில்லை” - எஸ்.பி.பாலசுப்ரமணியம் வேதனை

‘தண்ணீரை எப்படி சேமிப்பதென யாருக்கும் தெரியவில்லை’ என பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகேயுள்ள கோணேட்டம்பேட்டை என்ற ஊரில் பிறந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அந்த ஊரில் உள்ள தொடக்கப்பள்ளியில் தான் அவர் படித்தார். பிரபலமான பின்பு சொந்த ஊரை மறந்துவிட்டு நகரத்திலேயே தங்கிவிடும் மனிதர்களுக்கு மத்தியில், எஸ்.பி.பி.யின் செயல் வியக்க வைத்துள்ளது.

தன்னுடைய சொந்தக் கிராமத்துக்கு ஏதாவது செய்ய விரும்பிய எஸ்.பி.பி., குடிநீர் சுத்திகரிப்பு மையம் ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளார். இதிலிருந்து அந்தக் கிராம மக்களுக்கும், அவர் படித்த பள்ளிக்கும் சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்பட இருக்கிறது.

அத்துடன், தான் படித்த பள்ளிக்கு 7 கழிப்பறைகளும் கட்டிக் கொடுத்துள்ளார் எஸ்.பி.பி. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பேசிய எஸ்.பி.பி., “நான் இந்தக் கிராமத்தில் பிறந்தவன். எத்தனை நாடுகளுக்குச் சென்றாலும், புகழ் உச்சிக்குச் சென்றாலும், இங்கு வரும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவில்லை.

இங்குள்ள ஒவ்வொரு தெருவுக்கும் 2 கழிப்பறைகள் கட்டித்தர விரும்பினேன். ஆனால், என் கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீரும், பள்ளிக்கு கழிப்பறைகளும் அதைவிட முக்கியம் என்பதால், அது நிறைவேற்றப்பட்டுள்ளது.

தண்ணீரை நாம் வீணாக்கக் கூடாது. தற்போது இரண்டு மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சமயங்களில் தண்ணீரை எப்படி சேமிப்பதென யாருக்கும் தெரியவில்லை. நான் இங்கு அரசியல் பேச வரவில்லை.

இங்கு நல்ல காரியங்கள் செய்யும் எஸ்.பி.பி. ஆந்திராவைச் சேர்ந்தவர் என்கிறார்கள். நான் ஆந்திராவையோ, தமிழ்நாட்டையோ சேர்ந்தவன் இல்லை. இந்த உலகத்தைச் சேர்ந்தவன். ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரையும் மக்கள் அமிர்தம் போல எண்ணிச் சேமிக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x