Published : 28 Aug 2018 01:17 PM
Last Updated : 28 Aug 2018 01:17 PM

3 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தனி ஒருவன் 2’: அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது

‘தனி ஒருவன் 2’ குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மோகன் ராஜா.

மோகன் ராஜா இயக்கத்தில் 2015-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘தனி ஒருவன்’. ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், அரவிந்த் சாமி வில்லனாக நடித்தார். ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்தார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதை, ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்தது.

ரீமேக் படங்களாக இயக்கிவந்த மோகன் ராஜா, இந்தப் படத்துக்கு சொந்தமாகக் கதை எழுதியிருந்தார். திரைக்கதையை, எழுத்தாளர்கள் சுபாவோடு இணைந்து எழுதினார். பலராலும் இந்தப் படம் வெகுவாகக் கொண்டாடப்பட்டது. குறிப்பாக, அரவிந்த் சாமியின் கேரக்டர் இன்றளவும் நினைவு கூரப்பட்டு வருகிறது.

‘தனி ஒருவன்’ ரிலீஸாகி இன்றுடன் (ஆகஸ்ட் 28) 3 வருடங்கள் ஆகின்றன. இதையொட்டி, ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மோகன் ராஜா. அதில், ‘தனி ஒருவன்’ படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கும் படக்குழுவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்ததாக ‘தனி ஒருவன் 2’ படத்தை இயக்கும் விஷயத்தையும் அந்த வீடியோவில் மோகன் ராஜா தெரிவித்துள்ளார். ஜெயம் ரவியே இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இது அமையுமா அல்லது அதே பாணியிலான வேறொரு கதையா என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து ‘வேலைக்காரன்’ என்ற படத்தை இயக்கினார் மோகன் ராஜா. கடந்த வருடம் டிசம்பர் மாதம் இந்தப் படம் வெளியானது. அதன்பிறகு வேறெந்தப் படத்தையும் இயக்காத மோகன் ராஜா, தற்போது ‘தனி ஒருவன் 2’ பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x