Published : 19 Feb 2018 06:46 PM
Last Updated : 19 Feb 2018 06:46 PM

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம்; அருண்ராஜா காமராஜ் இயக்குநர் ஆகிறார்

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் என்னும் கம்பெனியின் மூலம் தயாரிப்பு துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதன் முதல் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.

கிரிக்கெட் பின்னணியில் உருவாகும் இந்தப் படம் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் மகளுக்கும், ஆதரவான அப்பாவுக்கும் இடையில் நடக்கும் கதையை மையப்படுத்தியது.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறியதாவது:

''திரைத்துறை தான் எனக்கு பெயரும், புகழும் கொடுத்தது. இந்தத் துறைக்கு நான் நிறைய கடமைப்பட்டிருக்கிறேன். சாதிக்கும் கனவில் நாங்கள் சுற்றிய போது எல்லா நிலைகளிலும் என்னுடம் இருந்த, என் நண்பர்களின் கனவையும் புரிந்து கொள்வது என் கடமையாக உணர்கிறேன்.

அந்த வகையில் இந்தப் படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் மிகவும் திறமையானவர் என்பதை ஏற்கெனவே நிரூபித்திருக்கிறார். நானும் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவன்தான் என்பதால் அருண் கதையை என்னிடம் சொன்னபோது என்னால் அந்தக் கதையை என்னோடு பொருத்திப் பார்க்க முடிந்தது.

சத்யராஜ் சார் அப்பாவாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் மகளாகவும் நடிக்கிறார்கள். இளவரசு, ரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, மிகவும் அழகான இளைஞர் தேவைப்பட்டார். அந்த தேடலில் எங்களுக்கு கிடைத்தவர் தான் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் தர்ஷன்.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், திபு நினன் தாமஸ் இசையில், இளையராஜா கலையில் உருவாகும் இந்தப் படத்தை ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். பல்லவி சிங் ஆடை வடிவமைப்பாளராகவும், வின்சி ராஜ் டிசைனராகவும் பணிபுரிகிறார்கள். இப்படிப்பட்ட திறமையான கலைஞர்களின் கலவையான குழுவின் மூலம், சிறப்பான ஒரு படத்தை கொடுக்க முடியும் என நம்புகிறேன்.

கதையிலும், உணர்விலும் இந்தப் படம் மிக பிரமாண்டமாக இருக்கும். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த லால்குடியில் பூஜையுடன் படத்தை தொடங்கியுள்ளோம்.

நான், அருண்ராஜா காமராஜ், இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் மூவரும் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். ஒரே ஊர்க்காரர்கள். அது தான் முதல் நாள் ஷூட்டிங்கை இங்கு நடத்தியதற்கு முக்கியக் காரணம். இந்த நேரத்தில் என் பயணத்தில் எனக்கு தொடர்ந்து பேராதரவை அளித்து வரும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய இந்தப் புதிய தொடக்கத்திற்கும் வழக்கம் போல நீங்கள் ஆதரவளிக்க வேண்டும்'' என்று சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x