Last Updated : 14 Oct, 2017 05:23 PM

 

Published : 14 Oct 2017 05:23 PM
Last Updated : 14 Oct 2017 05:23 PM

கட்டளையிடுவது போல் விஷால் பேசியிருப்பது எந்த விதத்தில் நியாயம்? - அபிராமி ராமநாதன்

எங்களுக்கு கட்டளையிடுவது போல் விஷால் பேசியிருப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று அபிராமி ராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சில நாட்களாக கேளிக்கை வரி குறைப்பு, திரையரங்கு டிக்கெட் கட்டணம் தொடர்பாக தமிழக அரசுடன் தமிழ்த் திரையுலகினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதற்கு நேற்று(அக்டோபர் 13) சுமூக முடிவு எட்டப்பட்டு இருக்கிறது. ஆனால், அரசாங்கத்தின் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு என்பது வெளியாகவில்லை.

இந்நிலையில் இன்று (அக்டோபர் 14) சென்னை திரையரங்க உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர்கள் மத்தியில் அபிராமி ராமநாதன் பேசியதாவது:

கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசு திரையரங்க டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொடுத்திருப்பதற்கு முதலில் நன்றி. சிறு படங்கள் வரும் போது டிக்கெட் கட்டணத்தைக் குறைத்துக் கொள்வோம். சிறு படங்களுக்கும் அதே கட்டணத்தை வசூலிக்க மாட்டோம்.

கமிட்டி அமைத்து பார்க்கிங் மற்றும் கேண்டீன் வியாபாரத்தை கவனிப்போம் என்று விஷால் தெரிவித்திருக்கிறார். இதில் எங்களுக்கு என்ன வருத்தம் என்றால் அவர்களுக்கும் ஒரு சங்கம் இருக்கிறது. எங்களுக்கும் ஒரு சங்கம் இருக்கிறது. எங்களிடம் கலந்து ஆலோசித்திருக்கலாம். அதை விடுத்து கட்டளையிடுவது போல் விஷால் பேசியிருப்பது எந்த விதத்தில் நியாயம்?

யாருக்கும் யாரும் முதலாளி அல்ல. திரையரங்குகள் இல்லாமல் அவர்கள் படத்தை திரையிட முடியாது. அவர்கள் படம் கொடுக்காமல் நாங்களும் திரையரங்கம் நடத்த முடியாது. நாங்கள் எல்லாம் அண்ணன் - தம்பிகள் போல. திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோரை அழைத்து இப்பிரச்சினைகள் குறித்து எல்லாம் பேசியிருந்தால், சமுகமான தீர்வு வரும். குற்றம் கண்டுபிடிப்பது போல கமிட்டி அமைத்து புகார் அளிப்பேன் என்று விஷால் சொல்லியிருக்கிறார். அவர்கள் மீது பல குற்றங்கள் இருந்தாலும், அதைச் சொல்ல நாங்கள் தயாராக இல்லை. ஏனெனில் அவர்களிடம் பேசித் தான் தீர்வு காண வேண்டுமே தவிர பத்திரிகையாளர்களிடம் பேச மாட்டோம்.

பார்க்கிங் பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து நாங்கள் இப்போதைக்கு கருத்து கூற முடியாது. இணையதள கட்டணத்தைப் பொறுத்தவரை கலந்து ஆலோசித்து அதனையும் முறைப்படுத்துவோம். எந்த ஒரு திரையரங்க உரிமையாளரும் திருட்டு விசிடிக்கு துணை போக மாட்டார்கள். அப்படிச் செய்யும் போது எங்களுக்கு தகவல் அளித்தால், நாங்களே நடவடிக்கை எடுக்கிறோம்.

அம்மா தண்ணீர் பாட்டில் கொடுத்தால் நாங்கள் விற்கத் தயார். அதே போல ஒரு பொருளை தயாரிக்கும் உரிமையாளருக்கு, அதன் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையுண்டு. நியாயமற்ற விலையில் விற்கும் திரையரங்குகளுக்கு, அப்படிச் செய்யாதீர்கள் என்று சொல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x