Published : 25 Mar 2023 02:59 PM
Last Updated : 25 Mar 2023 02:59 PM

பாடகர் பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலையில் முன்னேற்றம் - குடும்பத்தினர் ட்விட்டரில் தகவல்

பிரபல பின்னணி பாடகர் பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை சீராக உள்ளதாகவும், சில நாட்கள் ஓய்வு தேவைப்படுவதாகவும் அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் ஏராளமான மனம் மயக்கும் பாடல்களை பாடி தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கியவர் பாம்பே ஜெயஸ்ரீ. மெல்லிசை பாடல்களுக்காக தனித்து அறியப்படும் அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்தது. ‘லைஃப் ஆஃப் பை’ படத்தில் இவர் பாடிய ‘Pi's Lullaby’ என்ற பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் நாமினேஷன் செய்யப்பட்டது. மேலும் மாநில அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார் பாம்பே ஜெயஸ்ரீ.

இந்நிலையில், இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக லண்டன் சென்ற பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை பாதிக்கப்பட்டு அங்கிருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருதாக தகவல் வெளியானது. தற்போது அவரது உடல்நிலை குறித்து பாம்பே ஜெயஸ்ரீயின் ட்விட்டர் பக்கத்தில் அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். அதில், “இங்கிலாந்தில் பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. வேகமாக குணமடைந்து வருகிறார். இன்னும் 2 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பாம்பே ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு உங்களின் ஆதரவும், ப்ரைவசியும் தேவை” என பதிவிடபட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x