Published : 07 Nov 2022 05:09 PM
Last Updated : 07 Nov 2022 05:09 PM

சினிமாவில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் இல்லை: ஆர்.கே.செல்வமணி வேதனை

சினிமாவில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதமில்லை என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி வேதனை தெரிவித்துள்ளார்.

நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘குருமூர்த்தி’. இந்தப் படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க மற்றும் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் கே.பி.தனசேகரன் இயக்கியுள்ளார். அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இயக்குநர் ஆர்.கே செல்வமணி பேசும்போது, “சினிமாத் துறையை பொறுத்தவரை முதலீடு செய்த பணத்திற்கு லாபம் கூட கிடைக்க வேண்டாம். ஆனால் முதலீடு செய்த பணமாவது திரும்ப வரவேண்டும் அல்லவா..? அரசு இந்தத் துறையை தொழில்துறையாக அறிவித்தது. ஆனால், அதற்கான எந்த உதவிகளும் சினிமாத் துறைக்கு வழங்கப்படவில்லை. வங்கியில் கடன் கேட்டால் சினிமாவிற்காகக் கொடுத்த ரூ.250 கோடி வாராக்கடன் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் மற்ற தொழில்களில் ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன் என்று அறிவிப்பு வெளியானதே, அவர்களுக்கு மட்டும் எப்படி கடன் கொடுக்க முடிந்தது? இந்தத் துறை 150 கோடி மக்களை சந்தோஷப்படுத்தும் ஒரு துறை.

இந்தத் துறையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அவர்கள் வாழ்வாதாரத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அவர்களது எதிர்காலத்துக்காக அவர்களது சம்பளத்தில் பிடிக்கப்படும் நலநிதி கூட அரசாங்கத்துக்குச் செலுத்தப்படுகிறது. ஆனால், அது வேறு துறைகளில் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதில் நிச்சயம் மாற்றம் வரவேண்டும்.. அதுவரை தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டு இருப்பது எங்கள் கடமை” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x