Published : 25 Aug 2023 10:31 AM
Last Updated : 25 Aug 2023 10:31 AM

இசைத்துறையில் 5 ஆண்டுகள் ஆய்வு: ‘ஹிப்ஹாப்’ ஆதிக்கு டாக்டர் பட்டம்

கோவை: ‘இசைத் தொழில் முனைவோர்’ என்ற தலைப்பை மையமாகக் கொண்டு இசையமைப்பாளர் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த ஆராய்ச்சிப் படிப்புக்காக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி. ஆரம்பத்தில் சுயாதீன பாடல்களை இசையமைத்து பாடி வந்த இவர், பின்னர் பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்தார். ’ஆம்பள’, ‘இன்று நேற்று நாளை’, ‘தனி ஒருவன்’, ‘கதகளி’ உள்ளிட்ட படங்களின் பாடல்களும் பின்னணி இசையும் வரவேற்பை பெற்றன. இது தவிர ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’, ‘அன்பறிவு’, ‘வீரன்’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை பிரிவில் ‘இசைத் தொழில் முனைவோர்’ என்ற தலைப்பை மையமாகக் கொண்டு ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி கடந்த 5 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வந்தார். அவர் பிஹெச்டி ஆராய்ச்சி படிப்பை நிறைவு செய்ததை அடுத்து, பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 38வது பட்டமளிப்பு விழாவில் ஹிப்ஹாப் ஆதிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முனைவர் பட்டத்தை வழங்கினார். இசைத் தொழில் முனைவோர் என்ற ஆராய்ச்சிப் பிரிவில் ஒருவர் டாக்டர் பட்டம் பெறுவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாகும்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய ஆதி கூறியதாவது: “இசையில் தொழில்முனைவு பிரிவில் ஐந்து ஆண்டுகள் ஆய்வு செய்து, கடந்த ஆண்டு ஆய்வை நிறைவு செய்தேன். அந்த வகையில் பட்டமளிப்பு விழாவில் அதற்கான பட்டத்தை பெற்றுக் கொண்டேன். வேறு பணிகளை செய்து கொண்டே ஆய்வு செய்தது சற்று கடினமாக இருந்தது. அடுத்ததாக “பி.டி.சார்” என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வெளியாகும்” இவ்வாறு ஆதி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x