Published : 13 Aug 2022 06:15 AM
Last Updated : 13 Aug 2022 06:15 AM

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் எல்ஐசியின் லாபம் ரூ.682 கோடியாக உயர்வு

சென்னை: நடப்பு நிதி ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் எல்ஐசியின் நிகர லாபம் ரூ.682 கோடியாக உயர்ந்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 23,127 சதவீதம் உயர்வு ஆகும். சென்ற நிதி ஆண்டில் முதல் காலாண்டில் அதன் நிகர லாபம் ரூ.2.94 கோடியாக இருந்தது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பிரீமியம் மூலமான வருவாய் ரூ.98,352 கோடியாக உள்ளது. சென்ற நிதி ஆண்டின் முதல் காலாண்டில் அது ரூ.81,721 கோடியாக இருந்தது. இது 20 சதவீத உயர்வு ஆகும்.

இது குறித்து எல்ஐசியின் தலைவர் குமார் கூறுகையில், ‘‘கரோனா இரண்டாம் அலைதீவிரத்தினால் சென்ற நிதி ஆண்டு முதலாம் காலாண் டில் எங்கள் வருவாய் பாதிக்கப்பட்டது. தற்போது கரோனா நெருக்கடியிலிருந்து இயல்புக்குவந்துள்ள நிலையில் எங்களால்மீண்டும் வாடிக்கையாளர்களை நேரில் அணுக முடிகிறது.தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.

கடந்த மே மாதத்தில் எல்ஐசி பங்குச் சந்தையில் பட்டியலானது. அதையடுத்து ‘ஃபார்ச்சூன் 500’ பட்டியலில் 98-வது இடத்தை எல்ஐசி பிடித்தது. அமெரிக்காவைச் சேர்ந்த இதழான ‘ஃபார்ச்சூன்’ ஆண்டுதோறும் உலகின் 500 பெரிய நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. பங்குச் சந்தையில் பட்டியலானதை அடுத்து, முதன் முறையாக எல்ஐசி இந்தப் பட்டியலில் இடத்தைப் பிடித்தது.

கடந்த மார்ச் மாதத்தோடு முடிந்த 2021-22 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் எல்ஐசி ரூ.2,371 கோடி லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x