Published : 10 Jul 2016 11:12 AM
Last Updated : 10 Jul 2016 11:12 AM
தனியார் முதலீடுகள் வேகம் எடுக்காத சூழ்நிலையில் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு சேமிப்புத் திட்டங்களுக்கு அதிக வட்டி கொடுக்க முடியும். சேமிப்புத் திட்டங்களுக்கு அதிக வட்டி கொடுக்கும் பட்சத்தில் அதைவிட அதிக வட்டிக்கு கடன் கொடுக்க வேண்டி இருக்கும். இதன் காரணமாக பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படக் கூடும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
பிஎஸ்இ தொடங்கப்பட்டதன் 140 ஆண்டு விழாவை முன்னிட்டு தபால்தலை வெளியிட்டு பேசிய ஜேட்லி இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு அதிக வட்டி கொடுப்பதால் பொருளாதாரத்தில் தேக்கநிலை நிலவுகிறது. பண்ட்கள், பங்குகள், கடன் பத்திரங்கள் மூலம் அதிக வருமானத்தைப் பெறவேண்டும்.
இந்தியாவுக்கு நீண்ட காலத்துக்கு அதிக முதலீடுகள் தேவை இருக்கிறது. அப்போதுதான் கட்டுமான பிரிவில் முழுமை அடையமுடியும். பல ஆண்டுகளாக இந்த துறையில் முதலீடுகள் குறைவாகவே இருக்கிறது. இவை அனைத்தின் தொடக்கப்புள்ளியும் முதலீடுகள் ஆகும். தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் அரசு கூட்டு நிறுவனங்கள் (பிபிபி) இந்தப் பற்றாக்குறையை எப்படி சரி செய்ய முடியும்?.
கடந்த சில வருடங்களாக இந்தியாவின் வளர்ச்சி கணிசமாக வளர்ந்துள்ளது. ஆனால் அரசு மற்றும் அந்நிய நிறுவன முதலீடு காரணமாகவே வளர்ச்சி அடைந்துள்ளோம். தனியார் துறையின் சிறந்த பங்களிப்பு இனிமேல்தான் வரவேண்டும்.
தேவை குறைவாக இருப்பதினால் தனியார் துறை முதலீடு குறைந்துள்ளது. நகர்ப்புற தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பருவமழை சரியாக இருக்கும்பட்சத்தில் கிராமப்புற தேவை அதிகரிக்கும். இதனால் தனியார் துறையினர் முதலீடு செய்வற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
இதன் மூலம் பிஎஸ்இ உள்ளிட்ட பங்குச்சந்தையில் அதிக வர்த்தக நடவடிக்கைகள் உருவாகும். தற்போது இருக்கும் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகிய சந்தைகளின் சிறப்பான காலம் இனிதான் வரவேண்டும்.
அதற்காக இதுவரை இவர்கள் செய்ததை குறைத்து மதிப்பிட வில்லை. எதிர்கால சவால்களுக்கு தயாராக வேண்டும். எதிர்காலத் துக்கு பிஎஸ்இ தயராக இருப்ப தாகவே நான் நம்புகிறேன் என்று ஜேட்லி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT