Published : 25 Oct 2013 12:25 PM
Last Updated : 25 Oct 2013 12:25 PM

காலாண்டு முடிவுகள்: அர்விந்த், இப்காலேப், கோடக் மஹிந்த்ரா, டாடா ஸ்பாஞ்ச்

அரவிந்த் நிகரலாபம் 39% உயர்வு

டெக்ஸ்டைல் துறையில் இருக்கும் முக்கியமான நிறுவனமான அர்விந்த நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 39 சதவிகிதம் உயர்ந்து ரூ.90.05 கோடியாக இருக்கிறது. கடந்த வருடத்தின் இதே காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 64.78 கோடியாக இருந்தது.

நிகர விற்பனையிலும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த வருடத்தில் இதே காலாண்டின் ரூ.1,347 கோடியாக இருந்தது. இப்போது ரூ. 1,762 கோடியாக உயர்ந்திருக்கிறது.

டெக்ஸ்டைல் மற்றும் ரிடெய்ல் இரண்டு பிரிவுகளிலும் நல்ல வளர்ச்சி இருந்ததாக இந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஜெயேஸ் ஷா தெரிவித்தார். குறிப்பாக ரிடெய்ல் பிஸினஸ் நல்ல வளர்ச்சி அடைந்திருப்பாகவும் கூறினார்.

வர்த்தகத்தின் முடிவில் இந்த பங்கு ஒரு சதவிகிதம் சரிந்து 101.65 ரூபாயில் முடிவடைந்தது.

இப்காலேப் லாபம் 3% உயர்வு

பார்மா துறையில் இருக்கும் நிறுவனமான இப்கா லேப் நிறுவனம் செப்டம்பர் காலாண்டின் நிகரலாபம் 3.48 சதவிகிதம் உயர்ந்து ரூ.129.45 கோடியாக இருக்கிறது. கடந்த வருடத்தின் இதே காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.125.09 கோடியாக இருந்தது.

கடந்த வருடம் செப்டம்பர் காலாண்டில் ரூ.752 கோடி நிகர விற்பனை செய்திருந்த இந்த நிறுவனம் இந்த வருடம் 834 கோடி ரூபாய் அளவுக்கு நிகர விற்பனை நடந்திருக்கிறது. முதல் ஆறு மாதத்துக்கான நிகர லாபமும் கூட, கடந்த வருடத்தின் நிகர லாபத்துடன் ஒப்பிடும் நன்றாக அதிகரித்திருக்கிறது.

வர்த்தகத்தின் முடிவில் 2 சதவிகிதம் உயர்ந்து 677.80 ரூபாயில் வர்த்தகம் முடிவடைந்தது.

கோடக் மஹிந்த்ரா லாபம் 26% உயர்வு

தனியார் வங்கியான கோடக் வங்கியின் செப்டம்பர் காலாண்டின் நிகர லாபம் 26 சதவிகிதம் அதிகரித்து ரூ. 353 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் இந்த வங்கியின் நிகரலாபம் ரூ. 280 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் வங்கியின் நிகர வாராக்கடன் கடந்த வருட செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது சிறிதளவு அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் 0.75 சதவிகிதமாக இருந்த நிகர வாராக்கடன், 2013-ம் ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் 0.96 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது.

வங்கிகளின் முக்கியமான குறியீடான நிகரவட்டி வரம்பு (என்.ஐ.எம்) 4.9 சதவிகிதம் என்ற நிலையில் இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 4.6%தான்.

வர்த்தகத்தின் முடிவில் சிறிதளவு (0.43%) சரிந்து 707 ரூபாயில் முடிவடைந்தது.

டாடா ஸ்பாஞ்ச் நிகரலாபம் 29% சரிவு

டாடா குழுமத்தை சேர்ந்த டாடா ஸ்பாஞ்ச் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகரலாபம் 29 சதவிகிதம் சரிந்து 18.33 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 25.77 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல நிறுவனத்தின் மொத்த வருமானமும் 6.5 சதவிகித அளவுக்கு சரிந் திருக்கிறது. நிறுவனத்தின் செலவுகள் கடந்த வருடத்தை ஒட்டியே இருந்தது.

திட்டங்கள் காலதாமதம் ஆவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒப்புதல் உள்ளிட்டவைகள்தான் காரணம் என்று டாடா ஸ்பாஞ்ச் நிறுவனம் சொல்லி இருக்கிறது.

வர்த்தகத்தின் முடிவில் சிறிதளவு சரிந்து 310 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x