Published : 01 Feb 2014 10:28 AM
Last Updated : 01 Feb 2014 10:28 AM

நிதிப் பற்றாக்குறை 95 சதவீதத்தை தாண்டியது

நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகரித்துள்ளது. ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் நிதிப் பற்றாக்குறை ரூ. 5,16,390 கோடியாகும். இது ஆண்டு முழுவதற்கும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் 95.2 சதவீதமாக உள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் (2013-14) நிதிப் பற்றாக்குறை ரூ. 5,42,499 கோடிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த அளவானது நிதி ஆண்டின் பட்ஜெட் தொகையில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதம் ஆகும். ஆனால் இப்போது பட்ஜெட் மதிப்பீட்டில் பற்றாக்குறை அளவு 95.2 சதவீதமாக உள்ளது.

இந்த நிதி ஆண்டு முடிய ஜனவரி, பிப்ரவரி, மார்ச் என மூன்று மாதங்கள் உள்ளன. எனவே நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த இயலுமா என்ற அச்சம் உருவாகியுள்ளது. முந்தைய நிதி ஆண்டின் (2012-13) இதே காலத்தில் நிதிப் பற்றாக்குறை அந்த ஆண்டின் பட்ஜெட் மதிப்பீட்டுத் தொகையில் 78.8 சதவீதமாக இருந்தது.

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) நிதிப் பற்றாக் குறையை 4.8 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்துவோம் என அரசு தொடர்ந்து கூறிவந்தது. நிதிப் பற்றாக்குறை அளவானது சிவப்புக் கோடு என்றும் அந்த கோட்டை ஒரு போதும் தாண்டமாட்டோம் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பல முறை கூறி வந்தார்.

நாட்டின் பொருளாதாரம் கடினமான பாதையிலிருந்து மீண்டு இப்போது முன்னேறி வருகிறது. இத்தகைய சூழலில் பற்றாக்குறை அளவு 4.8 சதவீதத்தைத் தாண்டாமல் பார்த்துக் கொள்வோம் என்று பொருளாதார விவகாரங் களுக்கான செயலர் அர்விந்த் மாயாராம் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

பொதுக் கணக்குக் குழு அளித்த அறிக்கையில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான வருமானம் ரூ. 6,33,933 கோடியாகும். இது பட்ஜெட் மதிப்பீட்டில் 60 சதவீதமாகும். பட்ஜெட் மதிப்பீட்டின்படி நடப்பு நிதி ஆண்டில் அரசு எதிர்பார்க்கும் வருவாய் ரூ. 10,56,331 கோடியாகும்.

திட்டச் செலவு மற்றும் திட்டம் சாரா செலவு ரூ. 11,63,791 கோடியாகும். இது பட்ஜெட் மதிப்பீட்டில் 69.9 சதவீதமாகும். இந்த நிதி ஆண்டுக்கான மொத்த செலவு ரூ. 16,65,297 கோடியாகும். டிசம்பர் வரையான காலத்தில் வருவாய் பற்றாக்குறை ரூ. 3,71,242 கோடியாகும். இது நடப்பு நிதி ஆண்டில் அரசு நிர்ணயித்த அளவை விட 97.7 சதவீதமாகும். நடப்பு நிதி ஆண்டு இறுதியில் பற்றாக்குறை ரூ. 3,79,838 கோடியாக இருக்கும் என அரசு மதிப்பீடு செய்துள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x