Published : 08 May 2024 10:30 PM
Last Updated : 08 May 2024 10:30 PM

“பயணிகள் சிரமத்தை குறைப்பதில் உறுதி” - மாற்று ஏற்பாடுகள் குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விளக்கம்

மும்பை: ஊழியர்கள் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்த விவகாரத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், "எங்கள் ஊழியர்களில் சிறிய பகுதியினர், உடல்நிலையை காரணம் காட்டி நேற்றிரவு முதல் விமான செயல்பாடுகளில் தடை ஏற்படுத்தினர். இதனால், பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஏற்பட்ட சிரமத்தை குறைப்பது தொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உறுதியளிக்க விரும்புகிறது. வாடிக்கையாளர்கள் வசதியை மனதில் வைத்து, எங்களிடம் உள்ள திறனை கொண்டு எங்கள் விமானங்களின் அட்டவணையை மாற்றியுள்ளோம்.

பாதிக்கப்பட்ட பயணிகள் அவர்கள் இடங்களுக்கு செல்ல எங்கள் குழுமத்தின் மாற்று விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். எனினும், எங்கள் விமானங்களில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன், தங்களின் விமானம் இயக்கப்படுகிறதா என்பதைச் சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

விமானங்களின் நிலவரத்தை எங்கள் இணையதளத்தில் உள்ள பிளையிங் ஸ்டேட்ஸ் ஆப்சன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
பயணிகளின் விமானம் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது 3 மணிநேரத்திற்கு மேல் தாமதமாகினாலோ, அவர்கள் எந்தக் கட்டண பிடித்தமும் இல்லாமல் முழுப் பணத்தைத் திரும்பப் பெறலாம் அல்லது தங்கள் பயணத்தை வேறு தேதிக்கு மாற்றியமைத்து கொள்ளலாம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்த காரணத்தால் அந்த நிறுவனத்தின் விமான சேவை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடு என 79 விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என சொல்லி இந்த 300+ ஊழியர்கள் விடுப்பு எடுத்துள்ளனர். அதோடு தங்களது மொபைல் போன்களையும் ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளனர். இந்த ஊழியர்களை தொடர்பு கொள்ள ஏர் இந்தியா நிறுவனம் முயற்சித்தாக சொல்லப்பட்டது.

ஊழியர்களின் போராட்டத்துக்கு காரணம் என்ன?: நிறுவனம் ஊழியர்களை நடத்தும் முறையில் சமத்துவம் இல்லை ஊழியர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இழப்பீடு சார்ந்து முக்கிய தொகுப்பில் பெரிய மாற்றங்கள் செய்துள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கியமாக நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றும் அதற்குரிய பணிக்கான பொறுப்பில் தாங்கள் பணி அமர்த்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அதோடு ஏஐஎஸ் உடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸை இணைக்கும் முடிவில் டாடா குழுமம் இருப்பதாக தகவல்.

கடந்த மாதம் டாடாவின் விஸ்டாரா விமான நிறுவன சேவை, விமானிகள் (பைலட்) சார்பில் எழுந்த பிரச்சனை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதுவும் விஸ்டாராவை ஏர் இந்தியாவுடன் இணைப்பது மற்றும் ஊதியம் சார்ந்து நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x