Published : 07 Mar 2024 05:02 AM
Last Updated : 07 Mar 2024 05:02 AM

ஹூக்ளி நதிக்கு அடியில் மெட்ரோ ரயில்: ரூ.15,400 கோடி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கினார்

கொல்கத்தாவில் நீருக்கு அடியில் செல்லும் நாட்டின் முதல் மெட்ரோ ரயில் சேவையை நேற்று தொடங்கி வைத்த பிரதமர் மோடி, மாணவர்களுடன் கலந்துரையாடியபடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.படம்: பிடிஐ

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ரூ.15,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நீருக்கு அடியில் செல்லும் நாட்டின்முதல் மெட்ரோ ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார்.

மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவையும், ஹவுரா நகரையும் ஹூக்ளி நதி பிரிக்கிறது. இந்த இரண்டு நகரங்களையும் இணைக்கும் வகையில் ஹூக்ளி நதியில் நீர் மட்டத்துக்கு கீழே 32 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. ஹவுராமைதானத்தில் இருந்து எஸ்பிளேனேடு வரை 4.8 கி.மீ தூரத்துக்கு ரூ.4,965 கோடி செலவில் இந்தசுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் மெட்ரோரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.ரூ.15,400 கோடி மதிப்பிலான திட்டங்களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மெட்ரோ ரயிலில் பயணம் செய்த அவர், கொல்கத்தா பள்ளிமாணவர்கள், மெட்ரோ ரயில் ஊழியர்களுடன் கலந்துரையாடினார். பாஜக தலைவர்கள் சுகந்தா மஜூம்தார், சுவேந்து அதிகாரி ஆகியோரும் உடன் சென்றனர்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தளபதிவில், ‘ஹூக்ளி நதிக்கு கீழேஅமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதையில், மெட்ரோ ரயிலில் இத்திட்டத்தில் பணியாற்றியவர்களோடு பயணம் செய்தேன். இது கொல்கத்தா மக்களுக்கு மிகவும் சிறப்பான நாள். ஹவுரா மைதானம் - எஸ்பிளேடு மெட்ரோ வழித்தடம், நீருக்கு அடியில் அமைக்கப்பட்ட நாட்டின் முதல் மெட்ரோ சுரங்கப்பாதை. இதில் பயணம் செய்ததை மறக்க முடியாது. மக்கள்சக்திக்கு தலை வணங்குகிறேன். அவர்களுக்காக உத்வேகத்துடன் தொடர்ந்து பணியாற்றுவேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காலி கிராமத்தில், திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பழங்குடியின பெண்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடூரம் பற்றி பிரதமரிடம் விளக்கினர். அதை பொறுமையுடன் கேட்ட பிரதமர், தங்களின் வேதனையை புரிந்து கொண்டதாக, பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.

ஒடிசாவின் சண்டிகோல் பகுதியில் ரூ.19,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டினார். அவருக்கு பரிசளிக்க பலகுழந்தைகள் தாங்கள் வரைந்தஓவியங்களை கொண்டு வந்தனர்.

பிரதமர் பேசும்போது, அவர்கள்அந்த படத்தை அடிக்கடி தூக்கி காண்பித்தனர். அப்போது பேச்சை பாதியில் நிறுத்திய பிரதமர் மோடி,அந்த படங்களின் பின்னால் தங்கள் முகவரியை எழுதுமாறு கூறினார். பின்னர் அந்த படங்களை சேகரிக்குமாறு எஸ்பிஜி கமாண்டோக்களிடம் கூறிய பிரதமர், அவர்களுக்கு கடிதம் எழுதுவதாக உறுதியளித்தார். இதை கேட்டு குழந்தைகள் மகிழ்ச்சியடைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x