Published : 04 Jan 2024 03:38 PM
Last Updated : 04 Jan 2024 03:38 PM

துவரம் பருப்பு கொள்முதலுக்கான இணையதளத்தை தொடங்கி வைத்தார் அமித் ஷா

புதுடெல்லி: துவரம் பருப்பை கொள்முதல் செய்வதற்கான இணையதளத்தை அமித் ஷா தொடங்கி வைத்தார். பருப்பு வகைகள் உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெறுவதை ஊக்குவிக்கும் கருத்தரங்கு டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பருப்பு உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற வேண்டும். பருப்பு உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வது மிகவும் அவசியம். வரும் 2027-ம் ஆண்டு டிசம்பருக்குள் நாடு பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு என நான் உறுதி அளிக்கிறேன். நமது நாட்டில் விவசாயத்துறை மிகப் பெரிய மாற்றத்தை விவசாயிகளால் சந்தித்து வருகிறது.

தேசிய விவசாய கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் ஆகியவற்றில் நீங்கள் பதிவு செய்திருந்தால் உங்களிடம் இருந்து பருப்புகளை அரசு கொள்முதல் செய்யும். இது பிரதமர் நரேந்திர மோடியின் வாக்குறுதி. குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருப்புகளை கொள்முதல் செய்ய வேண்டிய பொறுப்பை இதன்மூலம் அரசு ஏற்கிறது.

2014-15ல் துவரம்பருப்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ. 4,350 ஆக இருந்தது. அது தற்போது ரூ. 7 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகளை மையமாகக் கொண்ட அரசின் நடவடிக்கைகள் காரணமாக துவரம் பருப்பு உற்பத்தியாளர்கள் நல்ல விலையை பெறுகிறார்கள். விவசாயிகளிடம் இருந்து துவரம் பருப்பு கொள்முதல் செய்வதை ஒழுங்குபடுத்துவதற்காகவே தற்போது இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை அல்லது சந்தை விலை இதில் எது அதிகமோ அந்த விலைக்கு விவசாயிகளிடம் இருந்து துவரம் பருப்பை அரசு கொள்முதல் செய்யும்.

இணையதளத்தில் விவசாயிகள் தாங்களாகவே பதிவு செய்து கொள்ள முடியும். அதோடு, துவக்க வேளாண் கடன் சங்கம், விவசாயிகள் உற்பத்தி அமைப்பு ஆகியவற்றின் மூலமாகவும் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்து துவரம் பருப்பை விற்கும்போது, அதற்குரிய பணம் நேரடியாக சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதில், இடைத்தரகர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

அந்த வகையில், விவசாயிகளை மையப்படுத்திய திட்டமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியா எனும் லட்சியத்தின் பரிசு இது. https://esamridhi.in எனும் இணையதளம், விவசாயிகள், தேசிய விவசாய கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு, சம்பந்தப்பட்ட அரசு துறைகள் ஆகியவற்றுக்கிடையே சிறப்பான இணைப்பை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை இது.

வழக்கமாக அரிசி, கோதுமை ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்யும். தற்போது பசுமை புரட்சியின் ஒருங்கிணைந்த நடவடிக்கையாக தற்போது துவரம் பருப்பு கொள்முதல் இணைக்கப்பட்டுள்ளது. இது இந்திய விவசாயத்துக்கும், கோடிக்கணக்கான விவசாயிகளுக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும். விவசாயிகளிடம் இருந்து 80 சதவீதம் அளவுக்கு துவரம் பருப்பு இந்த இணையதளத்தின் மூலம் கொள்முதல் செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. துவரம் பருப்பு இறக்குமதியைக் குறைக்கவும், நாட்டின் உணவு உற்பத்தியை பாதுகாக்கவும், எதிர்கால உணவு உற்பத்தியை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x