Published : 04 Jan 2024 01:18 PM
Last Updated : 04 Jan 2024 01:18 PM

ஈரானை உலுக்கிய இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம்: இந்தியா கண்டனம்

இந்தியா கண்டனம்

புதுடெல்லி: ஈரானில் நேற்று நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 103-க்கு மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஈரானில் நேற்று (ஜன.3) நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் (Randhir Jaiswal) தனது எக்ஸ் தளத்தில், "ஈரானின் கெர்மன் நகரில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து நாங்கள் அறிந்தபோது அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தோம். இந்த இக்கட்டான நேரத்தில், ஈரான் அரசுக்கும், மக்களுக்கும் எங்களது ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். எங்களின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடனும், காயமடைந்தவர்களுடனும் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

காசிம் சுலைமானி படுகொலையும்; சர்ச்சையும்: முன்னதாக, ஈரானின் ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானியை, 2020-ம் ஆண்டு அமெரிக்க ராணுவம் ட்ரோன் தாக்குதல் மூலம் படுகொலை செய்தது.

அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு ஈரானின் சக்திவாய்ந்த முக்கிய நபராக சுலைமானி இருந்தார். ஈரானின் புரட்சிகர படையின் தளபதியாக இருந்த அவர், ஈரானியக் கொள்கைகளை பிராந்தியம் முழுவதும் செயல்படுத்துவதில் முக்கிய பங்குவகித்தார். ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட ஆயுதக் குழுக்களுக்கு தளவாட உதவிகள் வழங்குவதற்கும் அவர் பொறுப்பு வகித்தார். இந்நிலையில், அவரை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உலகின் முதன்மையான தீவிரவாதி என்று குறிப்பிட்டு அவரைக் கொல்ல உத்தரவிட்டார்.

இராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்துக்கு சுலைமனி காரில் சென்று கொண்டிருந்தபோது தொடர்ந்து கண்காணித்து துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுலைமானி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையெடுத்து அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான விரிசல் தீவிரம் அடைந்தது நினைவுகூரத்தக்கது.

நினைவு நாளில் கோரம்: இந்நிலையில், நேற்று (ஜன.3) அவரது நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, நேற்றுஆயிரக்கணக்கான மக்கள் அவரதுநினைவிடத்தை நோக்கி ஊர்வலம்சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் இரண்டுமுறை குண்டுகள் வெடித்ததாகவும் இதில் 103-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 140-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. ஈரானின் தெற்கு நகரமான கெர்மனில் உள்ள சாஹேப் அல்-ஜமான் மசூதிக்கு அருகே நடந்த ஊர்வலத்தில் குண்டுகள் வெடித்துள்ளதாக அரசு செய்தி தொடர்பாளர் இரிப் தெரிவித்துள்ளார். 15 நிமிடத்துக்குள் இரண்டு முறை வெடித்ததாக கூறப்படுகிறது. குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையடுத்து மக்கள் சிதறி ஓடியுள்ளனர். இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. “இது ஒரு பயங்கரவாத தாக்குதல்” என்று கெர்மனின் துணை ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x