Published : 25 Dec 2021 12:47 PM
Last Updated : 25 Dec 2021 12:47 PM

தமிழகத்திற்கான தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளை கைவிடக் கூடாது: அன்புமணி கோரிக்கை

கோப்புப் படம்

சென்னை : தமிழகத்திற்கான தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளை நெடுஞ்சாலைகள் ஆணையம் கைவிடக் கூடாது என பாமக இளைஞரணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

"திருப்பெரும்புதூர் - வாலஜா தேசிய நெடுஞ்சாலையை 6 வழிப் பாதையாக மாற்றுவதற்கான இரு திட்டங்கள் மற்றும் கேரள எல்லை - கன்னியாகுமரி சாலையை 4 வழியாக மாற்றுவதற்கான இரு திட்டங்களை கைவிட நெடுஞ்சாலைகள் ஆணையம் தீர்மானித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது!

விக்கிரவாண்டி - சோழபுரம் 4 வழிச்சாலை உள்ளிட்ட 6 திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தாத இடங்களில் சாலை அமைக்காமல் மற்ற பகுதிகளில் மட்டும் பணிகளை முடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் ஆணையம் கூறியுள்ளது. இது இந்த சாலை விரிவாக்கத் திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விடும்.

தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு மாநில அரசின் ஒத்துழைப்பு கிடைக்காதது தான் இதற்கு காரணம் என்று ஆணையம் கூறியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுடன் பேசுவதற்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில் நெடுஞ்சாலைகள் ஆணையம் தன்னிச்சையாக இத்தகைய முடிவை எடுப்பது தவறு!

ஆணையத்தால் கைவிடப்படுவதாகவும், பாதியில் பணியை முடிக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள சாலைகள் முக்கியமானவை; தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவுபவை. அவற்றை கைவிட்டு விடாமல் மாநில அரசின் ஒத்துழைப்பைப் பெற்று பணிகளை ஆணையம் விரைந்து முடிக்க வேண்டும்!"

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x