Published : 02 Dec 2016 10:26 AM
Last Updated : 02 Dec 2016 10:26 AM
எழுதியதெல்லாம்
மொழிபெயர்ப்புத்தான்.
இளைஞர் விழிகளில்
எரியும் சுடர்களையும்,
போராடுவோரின்
நெற்றிச் சுழிப்புகளையும்
இதுவரை கவிதையென்று
மொழிபெயர்த்திருக்கிறேன்!
*******
உயிர்ப்பின் முதல்
நொடியை
உணர முயல்கிறேன்
மீண்டும்
பொருளில் உணர்வு
தோன்றிய கணம்
ஓடுவரா முட்டையின் முதல்
அசைவு
வித்தின் மண்தேடும்
ஆதி விழைவு
நரைத்து ஒரு முடி உதிர்ந்த
சமயம்
உணர்ந்தேன்
அது
என் மறதியின்
முதல் நொடி
******
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா - உங்க
இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா
உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா
நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா
உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்
உங்க ஊர்வலத்துல தர்ம அடிய வாங்கிக் கட்டவும் - அட
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் - நாங்க
இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்
குளப்பாடி கிணத்து தண்ணி புள்ளய சுட்டது
தண்ணியும் தீயாச் சுட்டது - இந்த
ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது
சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது - உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதை எதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க நாங்க
எரியும்போது எவன் மசுரப் புடுங்கப் போனீங்க - டேய்
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா!
******
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT