Published : 02 Dec 2016 10:26 AM
Last Updated : 02 Dec 2016 10:26 AM

இன்குலாப் | மூன்று கவிதைகள்





எழுதியதெல்லாம்

மொழிபெயர்ப்புத்தான்.

இளைஞர் விழிகளில்

எரியும் சுடர்களையும்,

போராடுவோரின்

நெற்றிச் சுழிப்புகளையும்

இதுவரை கவிதையென்று

மொழிபெயர்த்திருக்கிறேன்!



*******



உயிர்ப்பின் முதல்

நொடியை

உணர முயல்கிறேன்

மீண்டும்

பொருளில் உணர்வு

தோன்றிய கணம்

ஓடுவரா முட்டையின் முதல்

அசைவு

வித்தின் மண்தேடும்

ஆதி விழைவு

நரைத்து ஒரு முடி உதிர்ந்த

சமயம்

உணர்ந்தேன்

அது

என் மறதியின்

முதல் நொடி



******



மனுசங்கடா நாங்க மனுசங்கடா

உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள

மனுசங்கடா நாங்க மனுசங்கடா

எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா - உங்க

இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா

உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா

நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா

உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்

உங்க ஊர்வலத்துல தர்ம அடிய வாங்கிக் கட்டவும் - அட

எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் - நாங்க

இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்

குளப்பாடி கிணத்து தண்ணி புள்ளய சுட்டது

தண்ணியும் தீயாச் சுட்டது - இந்த

ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது

சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது - உங்க

சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது

எதை எதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க நாங்க

எரியும்போது எவன் மசுரப் புடுங்கப் போனீங்க - டேய்

மனுசங்கடா நாங்க மனுசங்கடா

உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள

மனுசங்கடா நாங்க மனுசங்கடா!



******

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x