Published : 23 Feb 2016 08:50 AM
Last Updated : 23 Feb 2016 08:50 AM

தேர்தல்.. கொள்கை.. கூட்டணி!- காங்கிரஸில் முதல் பிளவு!

முதல் தேர்தலில் நேரடியாகக் களமிறங்காத காங்கிரஸ் 1923 தேர்தலில் போட்டியிட்டே தீரவேண்டும் என்ற குரல் தேசிய அளவில் எழுந்தது. ஆனால், அது தீர்மான வடிவில் வந்தபோது தோற்கடிக்கப்பட்டது. விளைவு, காங்கிரஸின் முதல் அதிகாரபூர்வ பிளவு அரங்கேறியது. மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் தலைமையிலான பிரிவினர் 1 ஜனவரி 1923 அன்று காங்கிரஸ் கிலாபத் சுயராஜ்ஜியக் கட்சியைத் தொடங்கினர். சுருக்கமாக, சுயராஜ்ஜியக் கட்சி.

தேர்தலின்போது சென்னை உள்ளிட்ட அனைத்து மாகாணங்களிலும் சுயராஜ்ஜியக் கட்சி போட்டியிட்டது. நிலைமையை உணர்ந்துகொண்ட காங்கிரஸ் தலைமை, கட்சித் தொண்டர்கள் தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சியின் சார்பில் போட்டியிட அனுமதி கொடுத்தது. ஒத்துழையாமை என்று சொல்லிவந்த காங்கிரஸ் கட்சி சுயராஜ்ஜியக் கட்சியின் வழியாக மறைமுகமாகத் தேர்தலைச் சந்திக்கிறது என்ற விமர்சனம் எழுந்தது. விநோதம் என்னவென்றால், தேர்தலில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்காமல், சட்டமன்றத்தை முடக்குவோம் என்று சொல்லித் தேர்தலைச் சந்தித்தது சுயராஜ்ஜியக் கட்சி.

கல்வி, அரசுப் பணிகளில் வகுப்புவாரி உரிமை, பெண்களுக்கு வாக்குரிமை, பஞ்சமர், பறையர், பள்ளர் பெயர்களுக்குப் பதிலாக ஆதிதிராவிடர் என்ற பதத்தைப் பயன்படுத்த ஆணையிட்டது என்பன உள்ளிட்ட ஆட்சிக்காலச் சாதனைகளைச் சொல்லித் தேர்தலைச் சந்தித்தது நீதிக்கட்சி. ஆனாலும் கட்சிக்குள் நிலவிய உரசல்கள் தேர்தலின்போது சேதாரத்தை ஏற்படுத்தின. குறிப்பாக, பிராமணர் அல்லாதார் ஆட்சி என்ற பெயரில் ஆந்திரர்கள்/தெலுங்கர்களின் ஆட்சி நடப்பதாக உள்ளுக்குள் புகைச்சல்கள்.

இரண்டு கட்டங்களாகத் தேர்தல்கள் நடந்து முடிந்து, முடிவுகள் வெளியான போது ஆளுங்கட்சிக்கு லேசான அதிர்ச்சி. கடந்த தேர்தலைக் காட்டிலும் குறைவான இடங்களே கிடைத்திருந் தன. உபயம்: சுயராஜ்ஜியக் கட்சி. இடங்கள் குறைந்தாலும், ஆட்சியமைப்பதில் எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. 19 நவம்பர் 1923 அன்று நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவை பதவியேற்றது.

முதல் அமைச்சராகப் பனகல் அரசர் ராமராய நிங்கார் பதவியேற்றார். இரண்டாம் அமைச்சராக ஏ.பி.பாத்ரோவும் மூன்றாம் அமைச்சராக சிவஞானம் பிள்ளை என்கிற தமிழரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் மூலம் நீதிக்கட்சி அமைச்சரவை மீதான ‘ஆந்திரர்/தெலுங்கர் அமைச்சரவை’ என்ற விமர்சனம் தவிர்க்கப்பட்டது. அந்தத் தேர்தலின்போது சுயராஜ்ஜியக் கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்களுள் சத்தியமூர்த்தி முக்கியமானவர்.

நீதிக்கட்சிக்கு எதிராகப் பரபரப்பு அரசியலை நிகழ்த்திக் கொண்டிருந்த சுயராஜ்ஜியக் கட்சிக்கு முக்கியமான ஆலோசனை ஒன்றைக் கொடுத்தார் மூத்த காங்கிரஸ் தலைவர் ராஜாஜி. வருகின்ற தேர்தலின்போதும் வெற்றி பெற்றால் ஆட்சியமைக்க மாட்டோம் என்று சொல்வது காரிய சித்திக்கு உதவாது. மாறாக, ஆளுங்கட்சியான நீதிக்கட்சியே பலம் பெறும். ஆகவே, நீதிக்கட்சி யின் வெற்றியைத் தடுத்து, சுயராஜ்ஜியக் கட்சியை வெற்றி பெறச் செய்யவேண்டும். அதற்கு மக்களை நேரடியாகப் பாதிக்கின்ற பிரச்சினைகளைக் கையிலெடுத்துப் போராட வேண்டும் என்றார். அப்போது ராஜாஜி முன்வைத்த திட்டம், மதுவிலக்கு!

ஆர். முத்துக்குமார், எழுத்தாளர். ‘இந்தியத் தேர்தல் வரலாறு’ முதலான நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x