Last Updated : 14 Dec, 2015 05:10 PM

 

Published : 14 Dec 2015 05:10 PM
Last Updated : 14 Dec 2015 05:10 PM

மழை முகங்கள்: ஏழைகளுக்காக களப்பணியில் என்ஜினீயர் பாண்டியன் கணேசன்

>'தி இந்து' நிவாரண முகாம் நெகிழ்ச்சிப் பதிவுகள்

பாண்டியன் கணேசன், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் என்ஜினீயரிங் முடித்துவிட்டு, பின்னர் தோல் தொழிற்சாலையில் மெயின்டெனென்ஸ் என்ஜினீயராக 2 வருடம் பணியாற்றியவர்.

ஸ்கின் பிரச்சனை வந்ததால் கடந்த எட்டு மாதங்களாக அவரால் வேலையைத் தொடர முடியவில்லை. ஒரு வருடமாக சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கும். பாண்டியன் கணேசனுக்கு நீர்நிரம்பிய மதுரவாயல் ஏரிக்கரை பின்புறம்தான் வீடு.

''எங்க வீட்டுக்குப் பின்புறமும் ஏரித்தண்ணீர் மேட்டுக் குப்பத்திலிருந்து நெற்குன்றம் செல்கிறது. அங்கிருந்து சின்மயா நகருக்கு போகிறது. சின்மயா நகரில்தான் கடைசியாக வடிகிறது. இடைப்பட்ட பகுதியான நெற்குன்றத்தில்தான் கடந்த செப்டம்பரில் அக்காவைக் கட்டிக் கொடுத்திருந்தோம். அங்குள்ள மாமா வீட்டுக்குள் தண்ணீர் நிரம்பிவிட்டது.

சீர்வரிசையாகக் கொடுத்த வாஷிங் மெஷினை படிக்கட்டில் வைத்ததால் தப்பித்தது. மீதியனைத்தும் தண்ணீரில் மிதந்தன. அக்கா மாமா இருவரும் எங்கள் வீட்டுவந்துவிட்டார்கள். ஆனால் அவருடைய மாமா, மாமி இருவரும் வீட்டைவிட்டு வரமாட்டோம் என்று வாடகைக்கு விட்டிருந்த மேல் வீட்டில் போய் இருந்துகொண்டார்கள். அதன்பின்னர் அருகே வந்து தேங்கிய நீரிலிருந்து அக்கா மாமியாருக்கு கொசுகடித்து அலர்ஜியில் முகமெல்லாம் கொப்புளம் ஆகிவிட்டது.

ரெண்டுமூனு நாள் கழிச்சப்புறம் டிவியில பாத்தப்புறம்தான் சென்னையோட நிலவரம் தெரிஞ்சது. இப்போ வேலையில்லாதததால் என்னால பணமா உதவிசெய்ய முடியாது. சரி நம்மால முடிஞ்சதை செய்வோம்னு நினைச்சேன்.

அப்புறம்தான் சேப்பாக்கத்துல நம்ம முகாம் பத்தி விஷயம் தெரியவந்தது. மதுரவாயலிலிருந்து விருகம்பாக்கம் வழியாக கேம்ப் வந்தேன். வர்ற வழியில விருகம்பாக்கத்தில் வேம்புலி அம்மன் கோவில் பக்கத்தில் சாலைமறியல் நடந்துகிட்டிருந்தது. சரி அவங்களுக்கு ஏதாவது உதவலாம்னு நெனச்சேன்.

இந்த நிவாரண முகாம்லருந்து ரஸ்க், பிஸ்கட், பாக்கெட், கொசுவத்தி கொண்டுபோய் கொடுத்தா இதெல்லாம் எங்ககிட்ட இருக்கு. இது தேவைப்பட்டவங்களுக்கு கொண்டுபோய் கொடுங்க என்றார்கள். அப்புறம்தான் வளசரவாக்கம் திருமலைநகர் கீழ்த்தட்டு நடுத்தர மக்கள் குடிசைப் பகுதி, சிமெண்ட் ரோடு எல்லாம் முழங்கால் தண்ணில நடந்து ஒவ்வொரு வீட்டுக்கும் வீடு வீடா போய் உடனடி தேவைக்கான பொருள்களைக் கொடுத்தோம். இது நடந்தது திங்கள்கிழமை.

மறுநாள் செவ்வாய்க்கிழமை இங்கேயிருந்து மணலி போனோம். அங்கே மாத்தூர் ஏரியை ஒட்டிய 3 தெருவில் உள்ள மூனு தெருவிலும் அங்க எட்டு அடி உயரத்துக்கு தண்ணீர் வந்துடுச்சி. எல்லாம் கூரை வீடுகள்தான். நாங்க போம்போது எல்லா வீடுக்குள்ளேயும் குட்டை மாதிரி தண்ணீர் தேங்கியிருந்தது.

அங்க யாரு வீட்லேயும் நம்ம வீட்ல எல்லாம் இருக்கற எந்த மாதிரியான அடுப்பும் கிடையாது. மரத்தூள் அடுப்புதான் யூஸ் பண்றாங்க. அந்த மாதிரி வீடுங்களுக்கு எல்லாம் பம்ப் ஸ்டவ் கொடுத்தோம். இன்னொரு வீட்டுக்குப் போனா சுவர் இடிந்து விழுந்துகிடந்தது. எனக்கு இதெல்லாம் புதிய அனுபவம்.

1 செட் துணி, 1 பேஸ்ட், ஒரு குளியல் சோப், 1 பிரஷ், 1 பால்பவுடர் பாக்கெட், 1 வாட்டர் பாட்டில் அடங்கியிருந்த கிட்ஸ் பைகளை அங்க இருக்கற 250 வீடுகளுக்கும் பிரிச்சி கொடுத்தோம். இது தவிர, கொண்டுபோயிருந்த 24 ஸ்டவ், 75 பாய், 75 பெட்ஷீட்டை யார்யாருக்கு எதெது தேவைப்படும்னு பாத்துப் பாத்துக் கொடுத்தோம்.

இதை யெல்லாம் ஜனங்க எந்த குளறுபடியும் இல்லாம ரொம்ப பொறுமையா காத்திருந்து வாங்கினாங்க. இவ்வளோ அக்கறையெடுத்து பாத்துப் பாத்து 'தி இந்து' செய்யற மாதிரி யாருமே செய்யலைன்னாங்க.

கர்ப்பிணி பெண்கள், வயதானவங்க, குழந்தை வச்சிருந்தவங்க எல்லாம் ஒரு ஸ்டவ் கூட இல்லாம என்ன குடுத்தனம் செய்யறாங்கனு தெரியல. எல்லாருடைய வாழ்க்கையும் முன்னேறிடுச்சின்னு நாம நெனச்சிகிட்டிருந்தோம். ஆனால் இன்னமும் இதுபோல நிறைய செய்யணும்ங்கறதை இந்த சென்னை திரும்புகிறது நிவாரண முகாம் எனக்கு உணத்திடுச்சி'' என்று உணர்ச்சிவசப்படுகிறார் பாண்டியன் கணேசன்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x