Last Updated : 17 Dec, 2015 08:17 PM

 

Published : 17 Dec 2015 08:17 PM
Last Updated : 17 Dec 2015 08:17 PM

மழை முகங்கள்: ஆர்வலர்களை கனிவோடு வழிநடத்திய ப்ரியா

'தி இந்து' நிவாரண முகாம் நெகிழ்ச்சிப் பதிவுகள்

நிவாரண முகாமில் எதைப்பற்றி கேட்டாலும் 'ப்ரியா மேமைக் கேளுங்கள்' என்றார்கள். பிஸியான ப்ரியா மேமை கடைசிக்கு முன்தினம்வரை நெருங்கவே முடியவில்லை. களத்தில் பணிபுரிபவர்களை கையாளுவது என்பது இவருக்கு சர்வ சாதாரணம். கண்டிப்புமிக்க தோரணை. கடுகடுப்பு இல்லை. ஆனால் அணுகுமுறையில் ஒரு கனிவு.

மேலேயுள்ள படத்தில் போன்ற அளவுக்குக்கூட களப்பணியின்போது ஒருநாளும் இவரிடமிருந்து புன்சிரிப்பு வந்ததில்லை. (அதற்கான காரணம் என்னவென்று தெரிந்துகொள்ள அவசரப்படுகிறவர்கள் இக்கட்டுரையின் கடைசி வரியில்போய் தெரிந்துகொள்ளவும்.)

ப்ரியா கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஹியூமன் ரிசோர்ஸில் முனைவர் பட்டம் பெற்றவர். இவரது கணவர் ஜவஹர் பாபு ஏர்செல்லில் ஏஜிஎம்மாக இருக்கிறார். ஒரு பையன்தான் கிருத்திக் பாலாஜி. புராடெக்ட் சாஃப்ட்ஸ்கில்ஸ் டிரெயினர் மற்றும் கன்சல்டன்சிதான் இவருடைய ரெகுலர் பணி.

''கனமழை அன்னிக்கு மயிலாப்பூர் முதல்மாடி ஃப்ளாட்டில் குடும்பத்தோடு பத்திரமாகத்தான் இருந்தோம். ஆனால் நம்ம கோட்டூர்புரம், நம்ம சைதாப்பேட்டை, வளசரவாக்கம் தண்ணீர் வீடுகள்ல புகுந்தது வருத்தமாக ரொம்ப இருந்தது.

அன்னிக்கு தொடர்ந்து டிவி, நியூஸ் பேப்பர் செய்திகளைப் பார்த்ததால் வெளியே எங்கும் போகவில்லை. வீட்டுவாசல்ல தண்ணீர் வரலையே தவிர பயம் இல்லாம இல்ல. டிவி எல்லாம் சென்னையே மூழ்கப் போகுதுன்ற மாதிரி பீதியைக் கிளப்பிக்கிட்டிருந்தாங்க. அதனால எதுவும் செய்யமுடியாம வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்தோம்.

வெளியில என்ன நடக்குதுன்னு தெரியல. மழை எப்போ நிக்குன்னு தெரியல. மின்சாரம் இல்லாததால் தண்ணீரை ரொம்பரொம்பக் குறைவா பயன்படுத்த வேண்டியிருந்தது. பேப்பர்ல பாத்துட்டுதான் நிவாரண முகாம்ல வந்து சேர்ந்தேன். மழைவேகம் குறைஞ்ச உடனே நான் கணவர், குழந்தை மூணுபேரும் இங்கே வந்தோம்.

இங்கே வந்த உடனே நிறைய ஆள்பலம் கிடைச்சதால நம்பிக்கை வந்துடுச்சி. அவங்க தங்களோட வீட்டு வேலையக் கூட இப்படியெல்லாம் செய்வாங்களான்னு தெரியலை. இரவு 9 மணி வரைக்கும் கூட உக்காரம ஓடிகிட்டேயிருப்போம்.

வீட்டு வேலைகூட சில நேரத்துல ஃபீல் பண்ணுவோம். ஆனா இது அப்படியில்ல. ஒரு கட்டத்துல டயர்டா ஃபீல் வரத்தான் செய்யும். அதே நேரத்துல நம்ம மக்களுக்கு செய்யறோம் என்கிற உணர்வுதான் எல்லாரையும் இயக்கிக்கிட்டிருக்கற ஃபோர்ஸ்னு நெனக்கத் தோணுது.

சாதாரணமா இவ்வளவு வேலைகள் செய்வமோ... தினமும் வேலைக்குப் போனாலும் கூட வீடு திரும்பும்போது அப்பாடான்னு ஆயிடுது. ஆனா இந்த அளவுக்கு அவங்க வீட்டு வேலைகளையே செய்வாங்களான்னு தெரியல. தி இந்துங்கற பெரிய நம்பிக்கை, பெரிய ஃபோர்ஸ் எங்களுக்கு பின்னாடி இருக்கறதா நம்புறோம்.

ஸ்டாக் இன்வார்டு, அவுட்வேர்டு, டெலிவரி ஸ்டாக் எல்லாத்தைவும் பதிவுசெஞ்சிடுவோம். முதலில் பேப்பர்ல எழுதிக்கறோம். அப்புறம் லாப்டேப்ல ஏத்திக்கறோம். அதனால எவ்வளவு வந்தது.. எங்கெங்கே அனுப்பப்பட்டதுன்னு எல்லாத்துக்கும் என்ட்ரி உண்டு.

ஏழெட்டு வயசுல இருந்து 80 வயசு வரைக்கும் வந்து வேலை செய்யறதைப் பார்க்கிறோம். மழை நின்ன உடனே வந்து நிறைய வயசானவங்கள் எந்தவிதமான வேலைகளை செய்யத் தயார்னு வந்து நின்னாங்க. கீழ தரையில உக்காந்துகூட வேலைசெய்ய முன்வந்தாங்க.

வேலைக்குப் போறவங்க, வீட்ல இருக்கறவங்க, ஒரு நாள் வர்றவங்க, ரெண்டு நாள் வர்றவங்க, 10 நாள் வர்றவங்க அப்படிங்கறது விஷயம் இல்லை. நம்ம மக்களுக்கு செய்யணும்னு வந்தாங்க இல்லையா அதான் முக்கியம். நான் பத்து நாளாக இருக்கிறேன். ஏதாவது ஒண்ணு பண்ண முடியுதேன்னு ஆத்ம திருப்தியா இருந்தது. ரீடர்ஸ் விரும்பிப் படிக்கிற தி இந்து மூலமா இதை செய்ய முடிஞ்சது காட் கிரேஸ்.

என் கணவர் சுனாமி நேரத்துல டாடா டெலி சர்வீஸ் மூலமாக நாகப்பட்டினத்துக்குப் போய் 12 நாள் ரிலீஃப் வொர்க் பண்ண அனுபவம் இருக்கு. ஏற்கெனவே இதுமாதிரி அனுபவம் இல்லை.

இன்னொரு விஷயம், இந்த மாதிரி அனுபவம் போதும் சார். மழையே போதும்னு மக்கள் கதறும் நிலைமைன்னா பாத்துக்கோங்க. இந்த அனுபவம் திரும்பவும் வரக்கூடாதுன்னு நெனைக்கறேன் சார்'' எனும் ப்ரியா மேம்மிடம் பெருமழையின் அச்சம் உறைந்துள்ளது என்பதை புரிந்துகொள்ளமுடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x