Last Updated : 20 Oct, 2023 02:17 PM

 

Published : 20 Oct 2023 02:17 PM
Last Updated : 20 Oct 2023 02:17 PM

Bigg Boss 7 Analysis:  வன்முறைக் களமான பிக்பாஸ் வீடு - ‘ஸ்டிரைக்’ கார்டு மட்டும்தான் தீர்வா?

சில தினங்களுக்கு முன்பு பிரதீப்பை நோக்கி வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக விஜய் வர்மாவுக்கு மஞ்சள் நிற ‘ஸ்டிரைக்’ கார்டு கொடுத்தார் கமல். இதை மூன்று முறை வாங்கினால் இப்படியே வீட்டுக்கு சென்றுவிடலாம் என்று எச்சரிக்கவும் செய்தார். ஆனால் 17-ஆம் நாளின் போது கொடுக்கப்பட்ட ஆக்சிஜன் டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒருபடிமேலே சென்று பிக்பாஸ் வீட்டையே மல்யுத்தக் களமாக மாற்றினர்.

வீட்டில் கன்டென்ட், எண்டர்டெய்ன்மென்ட் போன்ற ஆக்ஸிஜன் குறைவாக இருப்பதால் இரு வீடுகளில் எந்த வீடு அதிக ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சேகரிக்கிறார்களோ அவர்களுக்குதான் அடுத்த வாரத்துக்கான தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு என்று பிக்பாஸ் அறிவித்தார். போட்டி தொடங்கியதும் கையில் கிடைத்த சிலிண்டரை எடுத்துக் கொண்டு ஆளுக்கு ஒரு திசையில் தெறித்து ஓடினர். ஆனால், விஜய் வர்மாவோ சிலிண்டரை பிடிப்பதை விட விஷ்ணுவின் கழுத்தை பிடிப்பதில் ஆர்வம் காட்டினார். அவராக விடும்வரை விஜய்யின் உடும்பு பிடியிலிருந்து விஷ்ணுவால் விடுபடவே முடியவில்லை.

ஸ்மால் பாஸ் வீட்டாரிடமிருந்து சிலிண்டர்களை அபரிக்கும் நோக்கில் பாய்ந்தோடி வந்த நிக்சன், பழைய எம்ஜிஆர் படங்களில் வருவதை போல தோள்பட்டையாலேயே கண்ணாடிக் கதவை உந்தித் தள்ள அது சுக்குநூறாய் உடைந்து சிதறியது. கதவுக்கு இந்த பக்கம் நின்றுகொண்டிருந்த மாயா, பிரதீப் ஆகியோருக்கு லேசான ரத்தக்களறி ஏற்பட்டது. கடுப்பில் சில ‘பீப்’ வார்த்தைகளால் நிக்சனை அர்ச்சனை செய்தார் பிரதீப். விஜய் வர்மாவின் உடும்புப் பிடி குறித்து புலம்பித் தள்ளினார்.

சில மணிநேர இடைவெளிக்குப் பிறகு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போட்டி மீண்டும் தொடங்கியது. மீண்டும் அதே மல்யுத்தக் களம், அதே வன்முறை. போன முறை விஷ்ணுவின் கழுத்தை பிடித்த விஜய், இந்த முறை பிரதீப்பை அப்டியே அலேக்காக தூக்கி WWE ஜான் சீனா போல டமார் என்று தரையில் போட்டது போட்டியாளர்கள் மட்டுமின்றி நமக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. முதுகு தரையில் அடித்த வேகத்துக்கு சுருண்டு படுத்துவிட்டார் பிரதீப். அந்த அதிர்ச்சி, எபிசோடின் இறுதிவரை அவரது முகத்தில் இருந்து கொண்டே இருந்தது. அடுத்தடுத்த சுற்றுகளில் அவரால் போட்டியில் பங்கேற்க இயலவில்லை.

ஏற்கெனவே வன்முறையான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக இதே விஜய் வர்மாவுக்கு கமல்ஹாசன் மஞ்சள் நிற ஸ்டிரைக் கார்டை கொடுத்து எச்சரிக்கையும் விடுத்திருந்தார். ஆனால் டாஸ்க்கை டாஸ்க் ஆக ஆடாமல் கடும் வன்முறை போக்கை விஜய் வர்மா கடைபிடித்தது ஏற்கத்தக்கதல்ல. இதில் பிக்பாஸ் தவறு இருப்பதாகவே படுகிறது. முதல் முறை விஜய் வர்மா, விஷ்ணுவின் கழுத்தை கவ்வியபோதே அதை கண்டித்தோ அல்லது, போட்டியின் விதிமுறைகளை தெளிவாக எடுத்துக் கூறியோ இருக்க வேண்டும். பிரதீப்பை அப்படி தூக்கி அடித்த பிறகும் கூட அவரிடம் சென்று விஜய் வர்மா மன்னிப்பு கேட்டதாகவோ அல்லது அது குறித்து வருந்தியதாகவோ காட்டப்படவில்லை.

இன்னொருபுறம் ரவீனாவை வேண்டுமென்றே பூர்ணிமா கீழே பிடித்து தள்ளிவிட்டதாக புது பஞ்சாயத்தை கிளப்பிக் கொண்டிருந்தார் மணி சந்திரா. (இதுக்கு மட்டும் கத்துதா அந்த பல்லி?) தான் அப்படி தள்ளவே இல்லை என்று வாதிட்டுக் கொண்டிருந்த பூர்ணிமா, குறும்படத்துக்கான கன்டென்ட்டை வேறு பிக்பாஸ் குழுவுக்கு நினைவூட்டினார்.

மூன்றாவது முறையாக மீண்டும் சிலிண்டர் டாஸ்க் ஆரம்பித்தபோது, விஜய் மீண்டும் வேலையை காட்டினார், விஷ்ணுவை தடுக்கிறேன் என்ற பெயரில் குரல்வளையை பிடித்து நெரித்தபோது, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த விஷ்ணு, கோதாவில் இறங்கிவிட்டார். ’என்ன கேம் ஆடுகிறாய்?’ என்று சட்டைய பிடித்து கேட்ட விஷ்ணுவிடம் இருந்து நைஸாக எஸ்கேப் ஆகி, போகும்போது, ‘வாயை உடைத்துவிடுவேன்’ என்று சொல்லிவிட்டு சென்றார்.

இத்தனை நாட்கள் வாய் வார்த்தையில் வன்முறையை பயன்படுத்திக் கொண்டிருந்த போட்டியாளர்கல், முதல்முறையாக ஓர் உடல்ரீதியான டாஸ்க்கில் வன்முறைப் பாதையை தேர்வு செய்யத் தொடங்கியுள்ளார். நாட்கள் செல்லச் செல்ல ஈகோ அதிகமாகும்போது இது வேறு மாதிரியான விளைவுகளை உண்டாக்கக் கூடும். கடந்த முறை வாய்ப்பேச்சுக்கே ஸ்டிரைக் கார்டு கொடுத்த கமல், இந்த வார இறுதியில் மற்றொரு ஸ்டிரைக் கார்டை விஜய் வர்மாவுக்கு கொடுக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் ஒவ்வொரு முறை இதே போன்ற சம்பவங்கள் திரும்பத் திரும்ப அரங்கேறும்போது வெறும் ‘ஸ்டிரைக்’ கார்டு மட்டுமே கொடுத்துக் கொண்டிருப்பது எந்தவகையில் தீர்வாக அமையாது.

முந்தைய சீசன்களிலுமே கூட டாஸ்க்கின் போது இது போன்ற சம்பங்கள் நடந்துள்ளன என்றாலும், அப்படி நடந்த பிறகு பரஸ்பரம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வது, அல்லது அடிபட்டவருக்கு உதவி செய்வது போன்றவையும் நடக்கும். ஆனால் இம்முறை பிரதீப் மற்றும் விஷ்ணுவிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்ட விஜய், அவர்களிடம் மன்னிப்பு கேட்காதது மட்டுமல்ல, அப்படி செய்தது குறித்த சிறு வருத்தம் கூட அவரிடம் தென்படவில்லை. சிறு குழந்தைகள், குடும்பங்கள் உட்கார்ந்து பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இதுபோன்ற செயல்கள் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தக் கூடும். எனவே வார இறுதியில் சம்பிரதாயமாக வெறும் ஸ்டிரைக் கார்டை கொடுக்காமல், முறையான தீர்வை மேற்கொண்டால் மட்டுமே இனிவரும் நாட்களிலும் இது தொடராமல் இருக்கும்.

முந்தைய அத்தியாயம்: எல்லை மீறும் கூல் சுரேஷின் உருவக் கேலி... கண்டிப்பாரா கமல்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x