Last Updated : 18 Oct, 2023 03:04 PM

 

Published : 18 Oct 2023 03:04 PM
Last Updated : 18 Oct 2023 03:04 PM

Bigg Boss 7 Analysis: எல்லை மீறும் கூல் சுரேஷின் உருவக் கேலி... கண்டிப்பாரா கமல்?

தமிழ் சினிமாவில் சமீப ஆண்டுகளுக்கு முன்பு வரை கொடிகட்டிப் பறந்த உருவக் கேலி காமெடிகள், சமூக வலைதளங்களின் வரவுக்குப் பின்னால் எழுந்த விழிப்புணர்வால் தற்போதுதான் மெல்ல குறைந்துள்ளன. ஆனால், பலபேர் பார்க்கக் கூடிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் காமெடி என்ற பெயரில் கூல் சுரேஷ் செய்யும் உருவக் கேலி எல்லை மீறியிருக்கிறது.

16-ஆம் நாள் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ரவீனாவும் நிக்சனும் யதார்த்தமாக பேசிக் கொண்டிருந்ததை மணி சந்திரா இறுக்கமான முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார். கட் செய்தால், வீட்டுக்கு வெளியே ‘யாரிடமும் பர்சனலாக கனெக்ட் ஆகாதே” என்று ரவீனாவுக்கு அட்வைஸ் செய்தார். ‘சப்பாத்தி பாதி தரவா?’ என்று வெள்ளந்தியாக நிக்சனிடம் ரவீனா கேட்டதை மனதில் வைத்தே மணி அவ்வாறு கூறியிருக்கிறார். டீன் ஏஜ் இளைஞர்களுக்கே உரிய ‘பொசஸ்ஸிவ்னஸ்’ என்றுதான் அதனை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

அடுத்ததாக, கூல் சுரேசுக்கு போட்டியாளர்களைப் பற்றிய ராசி பலனை சொல்லுமாறு புதிய டாஸ்க் ஒன்றை கொடுத்தார் பிக் பாஸ். பேசத் தொடங்கும் முன்பே எடுப்பிலேயே தன்னை கூல் சுரேஷ் வம்பிழுத்ததை மாயா ரசிக்கவில்லை. ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்தபடி கோபப் பார்வையை வீசினார். போட்டியாளர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் பேசிய கூல் சுரேஷ் போட்டியாளர்களை சிரிக்கவைக்க படாதபாடுபட்டு வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருந்தார். ‘இது ஒன்னும் அவ்ளோ பெரிய காமெடி இல்லையே’ என்று பார்க்கும் நமக்கு தோன்றினாலும், பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் ‘கெக்கே பிக்கே’ என்று விழுந்து புரண்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

‘இது சென்சார் ஆனாலும் பரவாயில்லை’ என்று சொல்லிவிட்டு விசித்ரா குறித்து அவர் பேசியது அப்பட்டமான உருவக் கேலி. பிக் பாஸ் கூட்டம் முழுக்க சிரிப்பதா இதற்கு ஆட்சபனை தெரிவிப்பதா என்று நெளிந்து கொண்டிருக்க, துணிச்சலாக அந்த இடத்திலேயே கண்டித்த மாயா பாராட்டுக்குரியவர். கூல் சுரேஷின் இந்த உருவக் கேலிப் பேச்சு அந்த டாஸ்க் முடிந்த பிறகும் பேசுபொருளானது.

உருவக் கேலி குறித்த விழிப்புணர்வு தற்போது பேசப்பட்டுவரும் சூழலில், சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இப்படி உருவத்தை வைத்து கொச்சையாக பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது மட்டுமின்றி ஜோவிகா, ரவீனா, மணி குறித்து அவர் பேசியதும் ரசிக்கத்தக்கதாக இல்லை. ஒவ்வொரு சீசனிலும் இருக்கும் காமெடி கோட்டாவில் கூல் சுரேஷை கொண்டு வந்தது சரிதான். ஆனால் அவரை காமெடி கன்டென்ட் கொடுக்கிறேன் என்ற பெயரில் இப்படியான விஷயங்களை ஊக்குவிப்பது பார்ப்பவர்களுக்கு நல்ல உதாரணமாக இருக்காது.

கூல் சுரேஷின் உருவக் கேலியை உடனடியாக தட்டிக் கேட்ட மாயாவை உச்சிமுகர்ந்தார் விசித்ரா. கிச்சனில் பூர்ணிமாவிடம் பேசிக் கோண்டிருந்த கூல் சுரேஷிடம், டாஸ்க்கில் தன்னைப் பற்றி அவர் கூறிய கருத்துகள் குறித்து நேரடியாகவே தன்னுடைய ஆட்சேபனையை தெரிவித்தார் மாயா. அதற்கு தொடர்பே இல்லாமல் ஏதேதோ கூல் சுரேஷ் பேசிக் கொண்டிருக்கையில், அங்கிருந்து ‘விருட்’டென்று கிளம்பிய மாயா, ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ள அறையில் மனம் வெதும்பி அழுதார்.

போட்டியாளர்களையும் பார்வையாளர்களையும் சிரிக்கவைக்க எத்தனையோ வழிகள் இருக்க, காமெடி என்கிற பெயரில் உருவக் கேலியில் ஈடுபடுவதை எந்த வகையிலும் அனுமதிக்கக் கூடாது. வடநாட்டில் நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் பல விஷயங்களை இங்கு நடத்த அனுமதிப்பதில்லை என்று ஒவ்வொரு சீசனிலும் தவறாது சொல்லும் கமல், இந்த சீசனில் தொடர்ந்து கூல் சுரேஷ் செய்யும் உருவக் கேலியை கண்டிக்கிறாரா என்பதை வார இறுதியில் பார்க்கலாம்.

முந்தைய அத்தியாயம்: Bigg Boss 7 Analysis | சுட்டிக்காட்டலுக்குப் பிறகும் பாடம் கற்காத மாயா - பூர்ணிமா கூட்டணி!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x