Published : 16 Apr 2020 02:58 PM
Last Updated : 16 Apr 2020 02:58 PM

சார்வரி ஆண்டு; தனுசு ராசிக்காரர்களே! தயக்கம் வேண்டாம், காரியத்தில் வெற்றி, பணச்சிக்கல் தீரும், ஏற்றம் நிச்சயம்! - 12 மாதங்களுக்கான ஏ டூ இஸட் பலன்கள்! 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

இலக்கை நிர்ணயித்து, குறிக்கோளோடு பயணிக்கும் தனுசு ராசி வாசகர்களே!
இதுவரை எந்த ஒரு செயலிலும் தயக்கம், எதிர்மறை சிந்தனை, அதீத சோம்பல், எந்த முயற்சியும் எடுக்க முடியாமல் ஒருவித சலிப்பு என இருந்த நீங்கள் இந்த புத்தாண்டிலிருந்து மீண்டும் உங்களின் இயல்பான நிலைக்கு வருவீர்கள்.

புதிய முயற்சிகள், சுறுசுறுப்பான செயல்பாடுகள் என இருக்கப்போகிறீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றேஒன்றுதான். தயக்கத்தை, அச்ச உணர்வை விட்டு வெளிவரவேண்டும். உங்களின் இயல்பான குணமான துணிச்சலை மீண்டும் மனதில் கொண்டு வாருங்கள். அப்படி கொண்டு வந்தால் இந்த சார்வரி ஆண்டு உங்களுக்கானது.

குடும்பத்தில் சதா சண்டை சச்சரவு, மன நிம்மதி இல்லாமை, பணபற்றாக்குறை, எந்த வேலையைச் செய்தாலும் முழுதும் முடிக்க முடியாமல் பாதியிலேயே நின்று போவது என்ற நிலை இனி இருக்காது. குடும்பத்தினர் உங்கள் நிலை அறிந்து உங்களை அனுசரித்துச் செல்வார்கள். வாழ்க்கைத்துணையை பிரிந்து வாழ்ந்தவர்கள் இப்போது சேர்ந்து வாழ்வார்கள். வீட்டில் ஒருவர்மாற்றி ஒருவர் உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்ட நிலை இனி இருக்காது. மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும்.

நண்பர்கள் என்ற போர்வையில் துரோகம் செய்தவர்களை இனம் கண்டு அவர்களை் ஒதுக்கிவிடுவீர்கள், வெளி நபர் ஒருவரால் குடும்ப பிரச்சசிகள் ஏற்பட்டிருக்கும். அந்த நபரை முழமையாக விலக்கி வைப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவார்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். தாய் தந்தை ஆரோக்கியம் திருப்தி தரும். வாழ்க்கைத்துணையின் உடல்நல பாதிப்புகள் கவலை தந்த நிலை மாறி, மிக வேகமாக சரியாகும்.
பொருளாதார சிக்கல்கள் படிப்படியாக சரியாகும்.

உத்தியோகத்தில் ஏற்பட்டிருந்த ஒழுங்கு நடவடிக்கைகள், உயரதிகாரியின் கோபம், சக ஊழியர்கள் கூட உங்களிடம் காட்டிய வெறுப்பு என்ற நிலை மாறும். ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படும். உயரதிகாரிகள் உங்களுக்கு அனுசரனையாக இருப்பார்கள். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள்,

தகவல்தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு வேலை மாற்றம் ஏற்படும். வேறு நிறுவனத்திற்கு இப்போதே விண்ணப்பம் செய்ய ஆரம்பியுங்கள். அதேபோல பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணிபுரிபவர்களுக்கும் இடமாற்றம் ஏற்படும். பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் சிறு நிறுவனங்களுக்கு மாறும் சம்பவங்களும் நடக்கும்.

சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு சீரான வளர்ச்சி ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டில் இருந்து முதலீடுகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது, அல்லது வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பும் ஒருவர் உங்கள் தொழிலுக்கு குறைந்த வட்டியில் முதலீடு செய்ய முன்வருவார்.
தொழிலில் இருந்த மந்த நிலை மெல்ல மெல்ல மாறும். தேங்கி நின்ற பொருட்கள் விற்பனையாகும். ஆனால் இந்த செயல்பாடுகள் சீரான வேகத்தில்தான் இருக்கும். ஆடை உற்பத்தியாளர்கள் நகைகள் உற்பத்தியாளர்கள் போன்றவர்களுக்கு தொழில்வளர்ச்சி நன்றாகவே இருக்கும் நீண்ட நாளாக வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும்.
கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்குப் பின் தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் மொத்த ஏஜென்ட் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்குப் பின் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
விவசாயத்தை தொழிலாகச் செய்து கொண்டிருப்பவர்களுக்கு உற்பத்தியாகும் பொருட்களை உடனுக்குடன் விற்பனையாகும். விவசாய வருமானம் திருப்திகரமாக இருக்கும். கடன்கள் அடைபடும். சேவை சார்ந்த தொழில் செய்துகொண்டிருப்பவர்களுக்கு அதிகப்படியான ஆட்களை வைத்து வேலை செய்யக்கூடிய அளவுக்கு தொழில் வளர்ச்சி பெருகும்.

வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய வாடிக்கையாளர்கள் திரும்ப வருவார்கள். புதிய வியாபார முயற்சிகளில் ஈடுபடுவதை விட செய்து கொண்டிருக்கும் வியாபாரத்தின் வளர்ச்சியை மட்டும் கவனித்தால் போதும்.
கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வங்கிக் கடன்களில் சில சலுகைகள் கிடைக்கும். செப்டம்பர் மாதம் வரை வாடிக்கையாளர்களிடம் கெடுபிடி காட்ட வேண்டாம். பாக்கிகள் வசூல் செய்வதில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். விரைவில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்பதை முழுமையாக நம்புங்கள்.

பெண்களுக்கு குடும்ப பிரச்சினைகள் படிப்படியாக தீரும். கணவர் மீதான சந்தேகங்கள் தீரும். பிரிந்திருந்த தம்பதி ஒன்றுசேர்வார்கள். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இப்பொழுது புத்திர பாக்கியம் கிடைக்கும் சுயதொழில் முயற்சிகளை இப்போதைக்கு செய்யவேண்டாம். செப்டம்பர் மாதத்திற்குப் பின் சுயதொழில் முயற்சிகளைச் செய்யலாம். கடன் பிரச்சினைகளும், குடும்ப உறவினர்களிடம் இருந்த மனவருத்தங்களும் படிப்படியாக குறையும்.

மாணவர்கள் கல்வியில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். சோம்பலுக்கு இடம் கொடுக்கக்கூடாது. ஞாபகமறதி பிரச்சினை அதிகமாக இருக்கும். அதற்கு மூலிகை மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்யுங்கள். மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்ணை விட சற்று குறைவாக இருக்கும். அதற்காக மனம் தளர வேண்டாம். உயர்கல்வி படிப்பவர்கள் நல்ல தேர்ச்சி விகிதம் பெறுவார்கள், கல்வி முடியும் முன்னே வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் தாமதமானாலும் நிச்சயமாக கிடைக்கும். பொறுமையை கடைபிடியுங்கள்., அவசரப்பட்டு யாரையும் எதற்காகவும் பகைத்துக் கொள்வது வெறுப்பைக் காட்டுவது என இருக்காதீர்கள். சிறிது காலம் பொறுத்திருந்தால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக முழங்கால் மூட்டு வலி போன்ற பிரச்சினைகள் வரும். இடுப்புப் பகுதியில் மூச்சுப்பிடிப்பு மற்றும் மூலம் போன்ற பிரச்சினைகள் வரும் வாய்ப்பு உள்ளது.

சித்திரை மாதம்-
தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் சீராகும். திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு திருமணம் நிச்சயமாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் விலகும். உங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படும். ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் நீங்கள் எளிதாக தப்பித்து விடுவீர்கள். எனவே வேலை பற்றிய அச்சம் தேவையில்லை. தொழில் வளர்ச்சி சீராக இருக்கும், தேவையான உதவிகள் கிடைக்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தந்தை மற்றும் சகோதரர்கள் ஆதரவு கிடைக்கும். இந்த மாதம் குலதெய்வ வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும். நண்பர்களால் ஒரு சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். ஆனாலும் அதை எளிதாக கடந்து செல்லுங்கள். புதிதாக அறிமுகமாகும் நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு சகோதர வழியில் இருந்து பண உதவி, பொருளாதார உதவி கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு திடீரென அதிகாரமுள்ள பதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மருத்துவச் செலவுகள் பெருமளவு குறையும். ஆரோக்கியத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

வைகாசி மாதம்-
தொழில் மற்றும் வியாபார வளர்ச்சிக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கடனும் எளிதாக கிடைக்கும் தொழில் மற்றும் வியாபாரம் வளர்ச்சிக்காக மட்டுமே அந்தக் கடனை பயன்படுத்துங்கள் சொந்த பிரச்சினைகளுக்கு அந்தப் பணத்தை செலவிடாதீர்கள். தொழிலிலும் வியாபாரத்திலும் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். அதற்குத் தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளும் கிடைக்கும். குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். உறவினர்களுடன் ஏற்பட்டிருந்த வருத்தங்கள் அவர்கள் சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். கமிஷன் மற்றும் தரகு தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஓரளவுக்கு வருமானம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல வளர்ச்சி லாபம் கிடைக்கப் பெறுவார்கள். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் அளவான முதலீடுகள் செய்யுங்கள். பெண்களுக்கு எதிர்பாராத வகையில் சிறிய அளவிலாவது சொத்துக்கள் சேரும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்பட தொடங்கும். இந்த ஆர்வத்தை அப்படியே தொடருங்கள். சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் மூலமாக மேலும் பல வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

ஆனி மாதம்-
குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். தந்தையின் உடல் நலத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். மருத்துவ ஆலோசனையைத் தொடர்ந்து பெற வேண்டும். தந்தையின் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்து தாருங்கள். மூத்த மகனின் நடவடிக்கைகளை உற்று கவனியுங்கள். தவறான நட்புகள் உங்களின் மூத்த மகனுக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அவரை எச்சரிக்கை படுத்துங்கள். உத்தியோகத்தில் ஒருசில இடமாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அல்லது வேறு நிறுவனத்திற்கு மாறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன, அதே சமயம் பணியில் மிகுந்த கவனம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். அது பின்னாளில் உங்கள் வேலைக்கு பிரச்சினை ஏற்படுத்தக் கூடியதாக மாறிவிடும். எனவே வேலையில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து பணிபுரியுங்கள். தொழிலில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். தேவையான உதவிகள் கிடைக்கும். ஊழியர்கள் மனவருத்தத்தைப் போக்குங்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளில் விட்டுக் கொடுத்துச் சென்றால் எந்த பிரச்சினையும் வராது. பாகப்பிரிவினைகள் சற்று ஏறக்குறைய இருந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். பிடிவாதமாக இருக்க வேண்டாம். வழக்குகள் ஏதேனும் நடந்து கொண்டிருந்தால் வாய்தா வாங்கிக் கொள்ளுங்கள். முடிந்தவரை வழக்குகளை நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு எதிர்பார்த்ததை விடவும் பொருளாதார பிரச்சினைகள் தீரும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆடி மாதம்-
எதிர்பார்த்ததை விடவும் அதிக நன்மைகள் நடக்கும் மாதம். பணவரவு சரளமாக இருக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் சுமூகமாகத் தீரும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வரும். தந்தையின் உடல் நலத்தில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். பிள்ளைகளால் ஒருசில பிரச்சினைகள் ஏற்படும். கவனமாக கையாண்டு பிரச்சினைகளை சரி செய்யுங்கள். பெண் பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு திருமணம் நிச்சயமாகும். தந்தைவழி உறவினர்களிடம் தேவையற்ற சண்டை சச்சரவுகள் ஏற்படும். தாய்வழி உறவுகள் ஆதரவுக் கரம் நீட்டுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வங்கிக்கடன் உள்ளிட்ட சில விஷயங்கள் சாதகமாக இருக்கும். ஆனாலும் இந்த மாதம் வங்கிக் கடன் கிடைப்பதற்கான சூழ்நிலை இல்லை. ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. பெண்களுக்கு தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தந்தைவழி சொத்துகள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. சகோதரர்களிடம் இணக்கமாக இருங்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஞாபக சக்தி திறன் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு ஒரு சில வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் தங்கள் எழுத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். தவறான எழுத்துப்பிழை பெரிய சிக்கலில் சிக்க வைக்கும் வாய்ப்பு உள்ளது.

ஆவணி மாதம்-
கடந்த மாத பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். குடும்ப ஒற்றுமை பலப்படும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். தந்தையின் உடல்நலத்தில் வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்த மந்த நிலை மாறி வருமானம் பெருகும். தேவையான உதவிகள் தேடி வரும். உற்பத்தியான பொருட்கள் மளமளவென விற்றுத் தீரும். சகோதர ஒற்றுமை மேலோங்கும். சகோதரர்களிடம் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும். பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். சொத்து தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் இந்த மாதம் முடிவுக்கு வரும். தலைவலி தந்து கொண்டிருந்த முக்கியமான கடன் ஒன்று தீர்வதற்கான வழி கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் அல்லது வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் லாபம் ஏற்படும். அலுவலக வேலையில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து, வேலையில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். சேவை சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வாடிக்கையாளர் அதிகமாவார்கள். நேரம் கடந்தும் வேலை செய்ய வேண்டிய அளவுக்கு சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு பல வகையிலும் உதவிகள் தேடி வரும். சுய தொழில் தொடர்பான சிந்தனை தோன்றும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வமும் அபரிமிதமான முன்னேற்றமும் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மாமன் வகை உறவுகளால் சுபகாரிய விசேஷங்கள் நடக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாமல் ஏங்கியவர்களுக்கு இப்பொழுது புத்திரபாக்கியம் உண்டாகும். உடல் நலம் சீராகும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும்.

புரட்டாசி மாதம்-
எடுத்துக்கொள்ளும் எந்த முயற்சியிலும் முழுமையான வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மூத்த சகோதரரால் ஆதாயம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் பெருகும். சேமிப்பு உயரும். கடன் பிரச்சினைகள் தீரும். அடகு வைத்த பொருட்களை மீட்பீர்கள். தொழிலுக்கு தேவையான முதலீடுகள் கிடைக்கும். உற்பத்தி திறன் அதிகரிக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். உணவகம் சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு கிளைகள் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தாய்மாமன் உதவியால் இல்லத்தில் சுபகாரிய விசேஷங்கள் நடக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் தொடர்பான விஷயங்கள் உறுதியாகும். மாணவர்களுக்கு கல்வியில் அளவுகடந்த ஆர்வம் ஏற்படும். புதிய மொழி கற்பது, புதிய பாடங்களை தெரிந்து கொள்வது போன்ற ஆர்வங்கள் பிறக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

ஐப்பசி மாதம்-
வேலையில் இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. விரும்பிய இடம் கிடைக்கும். அதேபோல வீடு மாற்றம் செய்யும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. இப்போது இருக்கும் வீட்டை விட வசதிகள் அதிகமான வீடுகளுக்கு மாறுவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். தாய் தந்தை உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் உடல்நலத்தில் மாற்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதால் உடல்நலம் தேறும். தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மாற்றுத் தொழில் ஒன்றை தொடங்குவீர்கள். வேலைக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் கூட இப்போது சொந்தத் தொழில் செய்யும் எண்ணம் ஏற்படும். அதற்கான முயற்சிகளில் இறங்குவீர்கள். அந்த முயற்சிகளுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி மாற்றம் ஏற்படும். இப்போது இருக்கும் பதவியை விட அதிகாரமுள்ள பதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். வழக்குகள் சாதகமாகும். புதிதாக அறிமுகமாகும் பெண் நண்பர்களால் பிரச்சினைகள் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே எல்லை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களாக இருந்தால் சர்ச்சைகளில் சிக்க வேண்டியது வரும். அதனால் பதவிக்கும் பிரச்சினைகள் ஏற்படும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு சராசரியான லாபம் கிடைக்கும். பங்குகளின் ஏற்றம் மனநிறைவைத் தரும். கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும், ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கும் படிப்படியான வளர்ச்சி கிடைக்கும், புதிய வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். நீண்ட நாளாக விற்க முடியாமல் இருந்த கட்டுமானங்கள் இப்பொழுது படிப்படியாக விற்பனையாகத் தொடங்கும். வெளிநாட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும். வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்த உங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும்.

கார்த்திகை மாதம்-
அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும் மாதம். வேலையில் இடமாற்றம் ஏற்படும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். தொழிலுக்கு அதிக முதலீடு செய்ய முற்படுவீர்கள். அளவான முதலீடுகளை செய்யுங்கள். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். வியாபார ஸ்தலங்களை விரிவுபடுத்துவீர்கள் அல்லது இடமாற்றம் செய்வீர்கள். தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு பதவி மாற்றம், இடமாற்றம் ஏற்படும். பத்திரிகையாளர்களுக்கு அதிகப்படியான பணிச்சுமை ஏற்படும். ஊடகப் பணியில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியது வரும். குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் தீரும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தால் இப்பொழுது நலம் பெற்று வீடு திரும்புவார்கள். சகோதர சகோதரிகளிடம் பாசப் பிணைப்பு அதிகமாகும். குழந்தைகளின் ஆரோக்கியம் சீராகும். அவர்களின் கல்வி வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். பெண்களுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். புத்திரபாக்கியம் இல்லாமல் ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது புத்திரபாக்கியம் கிடைக்கும். குறிப்பாக புத்திர பாக்கியத்திற்காக மருத்துவச் செலவு செய்து கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது மனமகிழ்ச்சி தரும் படியான செய்தி கிடைக்கும். அதிகப்படியான பயணங்கள் ஏற்படும். பயணங்களால் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். வெளிநாடு தொடர்புடைய தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்ததை விட சிறப்பான வளர்ச்சி ஏற்படும். தரகு மற்றும் மொத்த கமிஷன் ஏஜென்ட் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு லாபம் இருமடங்காக கிடைக்கும். விவசாயம் சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு விவசாயப் பொருட்களின் விலை உயர்ந்து ஆதாயம் பெருகும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு திருமணம் உறுதியாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இப்போதிருக்கும் நிறுவனத்தை விட வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும்.


மார்கழி மாதம்-
அதிக முயற்சிகள் இல்லாமலேயே அனைத்து வேலைகளும் எளிதாக முடியும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு அதிகம், ஏற்கனவே தொழில் செய்து கொண்டிருந்தவர்கள் மாற்றுத் தொழில் ஒன்றை தொடங்குவார்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரக் கிளைகளை அதிகமாக தொடங்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஊழியர்களை அதிகப்படுத்துவீர்கள்.சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு வாடிக்கையாளர் அதிகமாவார்கள். வேலை வாய்ப்புகளும் அதிகம் கிடைக்கும். கட்டுமானத் தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும்.ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு படிப்படியான வளர்ச்சி ஏற்படும். லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த அனைத்து விதமான பிரச்சினைகளும் இப்போது தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். புதிதாகத் தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்களுக்கு இப்பொழுது தொழில் தொடங்கும் நேரம் ஆரம்பித்துவிட்டது. அதற்கான முன்னேற்பாடுகளை இந்த மாதம் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் சீராகும். மருத்துவச் செலவுகள் முற்றிலுமாக தீரும். தந்தைவழி உறவுகள் பலப்படும். பாகப்பிரிவினைகள் நிறைவாக இருக்கும். தந்தைவழி சொத்துக்கள் முறையாக உங்கள் கைக்கு வந்து சேரும். சகோதரர்கள் இணக்கமாக இருப்பார்கள். பிள்ளைகளுக்கு உயர் கல்வி முயற்சிகள் சாதகமாக இருக்கும். மகளுக்கு திருமணம் நடக்கும். தர்ம காரியங்களில் ஈடுபட ஆர்வம் பிறக்கும். ஆலய திருப்பணிகளில் பங்கெடுப்பீர்கள். பிரசித்திபெற்ற ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். தூரதேசப் பயணம் ஒன்று ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை நீங்கும். உயர் கல்வி பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற்று உடனடியாக வேலை கிடைக்கும்.

தை மாதம்-
பெரிய முயற்சிகள் ஏதும் இல்லாமலேயே அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனநிறைவும் மனநிம்மதியும் ஏற்படுகின்ற மாதம். கடன் பிரச்சினைகள் முதல், தலைவலி கொடுத்துக் கொண்டிருந்த பிரச்சினைகள் வரை அனைத்தும் தீரும். சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடன் மேலும் நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாளாக சந்திக்க முடியாமல் இருந்த பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். லாபம் பெருகும். பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு இதுவரை ஏற்பட்ட இழப்புகளை எல்லாம் சரி செய்யும் அளவுக்கு பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும். தரகு மற்றும் கமிஷன் ஏஜென்ட் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வருமானம இருமடங்காக ஏற்படும். விவசாய உற்பத்திப் பொருட்கள் அதிக விலைக்கு விற்று விவசாயிகளுக்கு லாபம் பெருகும். தங்கம் மற்றும் நவரத்தின வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அதிகப்படியான விற்பனையும் வருமானமும் கிடைக்கும். எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருப்பவர்களுக்கு விற்பனை அதிகமாகும். பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். தகுதிக்குத் தகுந்த வேலை கிடைக்கும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசு வழியிலிருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். அரசியலில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் அபரிமிதமான முன்னேற்றமும் வளர்ச்சியும் ஏற்படும். கலைஞர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும். அது எதிர்பாராத ஒன்றாக இருக்கும். ஒப்பந்தத்தில் கிடைக்கும் தொகை திக்குமுக்காடச் செய்யும். பெண்களுக்கு பூர்வீகச் சொத்துக்கள் இயல்பாக கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத அளவிற்கு முன்னேற்றம் ஏற்படும்.

மாசி மாதம்-
புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஆதாயம் பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். பிள்ளைகளுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். சிறு தூரப் பயணங்கள் அதிகம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். தொழிலுக்கு தேவையான புதிய தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகளை வாங்குவீர்கள். ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். வியாபாரிகள் புதிய வியாபார வாய்ப்புகளைப் பெற்று தங்கள் வியாபார நிறுவனத்தை விரிவுபடுத்துவீர்கள். அரசு வழி உதவி கிடைக்கும். அரசின் சலுகைகள் கிடைக்கும். வருமான வரித்துறை போன்ற பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து சுமுகமான நிலை ஏற்படும். வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும். அலுவலகத்தில் வரவேண்டிய நிலுவைத் தொகைகள் வந்துசேரும். பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தகுதிக்கு தகுந்த வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புகள் அதிகமாகவே கிடைக்கும். உறவினர்களுடன் சேர்ந்து அல்லது தோழிகளுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்குவீர்கள். தையல் தொழில் அல்லது துணிக்கடைகள் போன்றவற்றை ஆரம்பிக்கும் வாய்ப்பு அதிகம். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களோடு இணைந்து தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு லாபம் பெருகும். முதலீடுகள் அதிகமாகும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். குறிப்பாக ஓவியர்கள் மற்றும் சிற்பிகளுக்கு புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் கிடைக்கும். சுற்றுலாத் துறை சார்ந்தவர்களுக்கு இப்பொழுது தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். டிராவல்ஸ் மற்றும் டிரான்ஸ்போர்ட் போன்ற தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர் கல்வி பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். அதிலும் வெளிநாட்டில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பங்குனி மாதம்-
சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். சொந்த வீடு பத்திரப் பதிவு செய்யவும் வாய்ப்பு அதிகம். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களை விற்று புதிய தொழில் தொடங்குவது போன்ற முயற்சிகளில் இறங்குவீர்கள். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தொழிலில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். கடல்கடந்து தொழில் அல்லது வியாபாரம் செய்துகொண்டிருப்பவர்களுக்கு இப்பொழுது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். மொத்த வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் உறுதியாகும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்களுடைய திருமணம் இப்பொழுது நிச்சயிக்கப்படும். பெண் பிள்ளைகளால் பெருமையும் புகழும் கிடைக்கும். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உங்களாலான உதவிகளைச் செய்து தருவீர்கள். அவர்களுடைய தொழில் அல்லது வியாபார வளர்ச்சிக்கு நீங்கள் உறுதுணையாக இருப்பீர்கள். கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கு வருமானம் பெருகும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு அதிக வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் புதிய பாடங்களை படிப்பது, புதிய மொழி கற்பது போன்ற ஆர்வம் அதிகமாகும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் ஆரஞ்சு.

அதிர்ஷ்ட எண்கள் - 1, 3, 6, 9.


வீட்டில் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் -
கொண்டைக்கடலை சுண்டல் செய்து அக்கம் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு தாருங்கள். இனிப்பு பலகாரங்களையும் செய்து கொடுங்கள்.

வணங்கவேண்டிய தெய்வம்-

தஞ்சை மாவட்டம் திட்டை குரு பகவான் ஆலயத்திற்கு சென்று வாருங்கள். திருவாரூர் அருகே திருவாரூர் - திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில், திருக்கொள்ளிக்காடு என்னும் ஸ்தலத்தில் சனி பகவான் பொங்கு சனீஸ்வரராக இருக்கிறார். இந்த ஆலயத்திற்கு ஒருமுறையாவது சென்று தரிசித்து வாருங்கள். எல்லாவித நன்மைகளும் கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x