Published : 14 Apr 2020 05:10 PM
Last Updated : 14 Apr 2020 05:10 PM

சார்வரி ஆண்டு; ரியல் எஸ்டேட் தொழில் உயரும்; விலைவாசியும் உயரும்! - தமிழகத்தின் நிலை இதுதான்!  


- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

இந்த சித்திரை மாத பிறப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு கிரகங்கள் தரும் பலன்கள் என்ன?

சித்திரை பிறப்பின் ஜாதகம்-
கிரக அமைப்பு -
லக்னம் - துலாம்
சூரியன் - மேஷம்
சந்திரன் - தனுசு
செவ்வாய் - மகரம்
புதன் - மீனம்
குரு - மகரம்
சுக்கிரன் - ரிஷபம்
சனி - மகரம்
ராகு - மிதுனம்
கேது - தனுசு

சார்வரி ஆண்டில் தமிழகத்தில் நிகழப் போகிற பலன்கள் என்னென்ன?

விகாரி ஆண்டின் நிறைவில், கரோனா வைரஸ் மிரட்டல்களால், மக்கள் அச்சத்துக்கு ஆளாகி, ஊரடங்கு வீடடங்கு என்றிருந்த நிலையெல்லாம் முழுவதுமாக மாறிவிடும். தமிழகத்தில், உன்னதமான நற்பலன்கள் தொடர்ந்து நடக்கப் போகிறது.
விலைவாசி சற்று உயர்ந்தாலும் அவை கட்டுக்குள் இருக்கும். மக்களுக்கு கட்டுபடியாகும் நிலையில் பொருட்களின் விலை இருக்கும். தண்ணீர் பிரச்சினை, தண்ணீர்த் தட்டுப்பாடு இருக்காது, நோய் தாக்கத்திலிருந்து விரைவில் தமிழகம் மீளும்.

அடுத்த மாதமான மே மாதம் முதல், தமிழகத்தில் படிப்படியான வளர்ச்சி ஏற்படும். விலைவாசி கட்டுக்குள் இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தமிழகத்தில் உண்டாகும். பெருமளவில் விவசாயம் செய்யவும் சொந்தமாகத் தொழில் செய்யவும் முன்வருவார்கள்.

அக்டோபர் மாதத்திற்குப் பின் பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும்.
உணவகங்கள் கட்டுக்கடங்காமல் பெருகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிகரிப்பார்கள். ரியல் எஸ்டேட் தொழில் அபார வளர்ச்சியை அடையும். கட்டுமானத் தொழில் படிப்படியாக உயரும். இரும்பு தொடர்பான தொழில் முன்னேற்றம் அடையும். உற்பத்தி தொடர்பான தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும்.

சார்வரி ஆண்டில், பெண்களின் முன்னேற்றம் வியக்கும் வகையில் இருக்கும். அதிகப்படியான பெண்கள் சுயதொழில் செய்வதற்கு முன்வருவார்கள்.
திருமணங்கள் அதிகளவில் நடக்கும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த ஆண்டு நிச்சயமாக குழந்தை பாக்கியம் உண்டாகும்.
இந்த வருடம், மழையானது அதிக அளவில் பெய்யும். அதேசமயம், இந்த மழை விவசாயத்திற்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். விவசாயிகள் பாதிப்பு அடைவார்கள். விளைபொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும். விவசாயப் பொருட்கள், உபகரணங்கள் விலை ஏற்றம் பெறும்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு விரைவில் நிவர்த்தியாகும்.
அரசு அலுவலர்கள், அரசுத்துறை ஊழியர்கள், அதிகாரிகள் முதலானோர் கடமை உணர்வுடன் பணியாற்றுவது அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புகள் அதிகரிக்கும். ஒருசிலருக்கு பதவி பறிபோகும். அதிகாரிகளின் மௌனமும் அமைதியும் அரசியல்வாதிகளுக்கு கலக்கத்தைத் தரும். தமிழகத்தில் நிதி பற்றாக்குறை, நிறைய குழப்பங்களைத் தரும்.

இந்த நிலை மாறவும், மக்களாகிய நமக்கு அதிக நன்மைகள் கிடைக்கவும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் - வயது முதிர்ந்தவர்களுக்கும், நோயாளிகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உணவு, உடை வழங்குங்கள். காகத்திற்கும், தெரு நாய்களுக்கும் உணவு வழங்குங்கள். கடுமையான பாதிப்புகளிலிருந்து நம்மை காக்கும் கவசங்களாக இவை அமையும். தமிழகத்தைக் காக்கும்!

தமிழகத்தின் நலனைக் காக்க, சிதம்பரம் சிவகாமி அம்பாளை வணங்கிவருவோம். வனபத்ர காளியை வணங்கி வழிபடுவோம். நோய் தாக்கத்தில் இருந்து முழுவதுமாக மீள்வோம். எதிர்காலம் மிகச்சிறப்புற அமைவது உறுதி. தமிழகத்துக்கு தீமைகள் குறைந்து, நன்மைகள் பெருகும்!

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x