Published : 15 Apr 2020 04:51 PM
Last Updated : 15 Apr 2020 04:51 PM

சார்வரி ஆண்டு; துலாம் ராசிக்காரர்களே! முயற்சி ஜெயிக்கும், சொந்த வீடு யோகம், வேலையில் பதவி உயர்வு, வியாபாரத்தில் லாபம்!  - 12 மாதத்துக்குமான ஏ டூ இஸட் பலன்கள்!

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


சிரித்த முகத்துடன் எப்போதும் கலகலப்பாக இருக்கும் துலாம் ராசி வாசகர்களே.
இந்த புத்தாண்டு உங்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் நடைபெறும் ஆண்டாக இருக்கும். இதுவரை எடுத்த முயற்சிகள் எல்லாம் கடைசி நேரத்தில் பெரும் பின்னடைவுகளை சந்தித்திருக்கும். இனி அந்த நிலை இருக்காது. குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
சகோதரர்களிடம் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அவர்களுடன் சமாதானம் ஏற்படும். திருமண முயற்சிகள் தாமதமாகிக் கொண்டிருந்ததுதானே. இனி தாமதம் என்ற நிலையே இல்லை, இந்த ஜூலை மாதத்திற்குள் திருமணம் உறுதியாகும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் இனி சொந்த வீடு வாங்கிச் செல்வீர்கள். கடன் பிரச்சினைகள் முழுமையாகத் தீரும்.

ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். மூத்த சகோதரரிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். நீண்டநாளாக வராமலிருந்த கடன் தொகை மீண்டும் கிடைக்கும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். தொழில் தொடர்பாக ஏற்பட்டுக்கொண்டிருந்த பிரச்சினைகள் அனைத்தும் விலகும்.
தொழிலுக்குத் தேவையான உதவிகள் இப்போது கிடைக்கும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வந்து சொந்தமாக தொழில் செய்யும் வாய்ப்பு உண்டாகும். இனி புதிய ஒப்பந்தங்களும் புதிய வாய்ப்புகளும் தொழிலுக்குக் கிடைக்கும். அரசு வழியில் ஆதாயமும் தேவையான உதவிகளும் கிடைக்கும். கணக்கு வழக்கு சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.


உத்தியோகத்தில் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்திருப்பீர்கள், இனி நெருக்கடிகள் என்பதே இருக்காது. தொல்லை தந்த ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறுவார்கள். தாமதமாகிக் கொண்டிருந்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். ஒருசிலருக்கு குழுவுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
விரும்பாத இடமாற்றம் ஏற்பட்டிருக்கும். இப்போது விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சலுகைகள் அனைத்தும் இப்போது கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். லாபம் பெருகும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். ஜவுளிக்கடை ஆடை ஆபரண வியாபாரம் போன்ற வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு இனி படிப்படியாக வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும்.
பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளும், கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கும். ஒருசிலருக்கு எதிர்ப்புகள் காரணமாக வழக்குகளைச் சந்திக்க வேண்டி வரும்.
பெண்களுக்கு இயல்பாக சொத்துக்கள் சேரும். திருமண முயற்சிகள் கைகூடும். வேலைவாய்ப்பு எளிதாகக் கிடைக்கும். ஏற்கெனவே பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சுய தொழில் தொடங்கும் வாய்ப்பும் மிக அதிகமாக உள்ளது.
மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் குறையும். தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் குறையும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிக கவனம் எடுத்துப் படிக்க வேண்டும்.
கலைஞர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நண்பர்களால் அதிக உதவிகளைப் பெறுவீர்கள்


சித்திரை மாதம்-
வாழ்க்கை துணையின் வழியே மிகப்பெரிய ஆதாயம் கிடைக்கும். குடும்ப உறவுகள் பலப்படும். திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் பேசி முடிக்கப்படும். அரசியலில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள், பதவிகள் கிடைக்கப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். பணிச்சுமை அதிகமாக ஏற்படும். எளிதாக முடிக்க வேண்டிய வேலைகள் கூட மிகத் தாமதமாகத்தான் முடிக்கமுடியும். தொழில் நல்ல வளர்ச்சியும் தேவையான உதவிகளும் கிடைக்கும். வங்கிக் கடன் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். லாபத்துக்கு குறை இருக்காது. ஆரோக்கியம் மேம்படும். மருத்துவச் செலவுகள் குறையும். மிக முக்கியமாக எதிர்பார்த்த ஒரு சில விஷயங்கள் தாமதமாகலாம். குறிப்பாக திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் சற்று தள்ளிப் போகும் வாய்ப்பு உள்ளது.

வைகாசி மாதம்:-
தொழில் ரீதியாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஊழியர்கள் ஊதியத்திற்காக அந்தக் கடனைப் பெறவேண்டிய நிலை ஏற்படும். ஏற்கெனவே இருந்த கடன்களின் நெருக்கடி தரும். வியாபார விஷயமாக ஒருசில பிரச்சினைகளையும் வழக்குகளையும் சந்திக்க வேண்டியது வரும். குடும்ப உறவுகளிடம் இணக்கமாக இருங்கள். வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபடவேண்டாம். முடிந்தவரை குடும்பத்தாரோடு அனுசரித்துச் செல்லுங்கள். நண்பர்களிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். தொழில் தொடர்பாக ஏதேனும் ஒப்பந்தங்கள் போட வேண்டி வந்தால் முழுமையாக படித்துப் பார்த்த பின்னே ஒப்பந்தங்களை ஏற்க வேண்டும். வியாபார விஷயமாக அடுத்தவர்களை நம்ப வேண்டாம். அரசு வழிகாட்டும் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படுங்கள். மீறினால் சட்ட நடவடிக்கைக்கு ஆளாக வேண்டியது வரும்.

ஆனி மாதம்-
கடந்த மாத பிரச்சினைகள் அனைத்தும் இப்போது ஒவ்வொன்றாக சரியாகும். கடன் பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். நெருக்கடிகள் குறையும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும். குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் சுமுகமாகத் தீரும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகளைக் காண்பீர்கள். தரகு மற்றும் கமிஷன் துறையில் இருப்பவர்களுக்கு வருமானம் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய கட்டுமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதுவும் அரசு வழியில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். திருமணத் தேதி குறிக்கப்படும்

ஆடி மாதம்-
இதுவரை தொழில் செய்யாதவர்கள் கூட இந்த மாதம் தொழில் தொடங்குவதற்கான முனைப்பைக் காட்டுவார்கள். அதற்குத் தேவையான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். வங்கிக் கடன் உள்ளிட்ட வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடங்குவதற்கான ஏதுவான இடம் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அருமையாக இருக்கும். லாபம் பெருகும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். கிளைகள் தொடங்கவும் வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்திற்கு அதிகப்படியான பணியாளர்களை சேர்ப்பீர்கள். பண உதவி பலவழிகளிலும் கிடைக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்.


ஆவணி மாதம்-
உறவினர்களின் விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். ஒரு சிலர் புதிய சொத்துக்கள் வாங்குவது அல்லது வீட்டை விரிவுபடுத்துவது போன்ற பணிகளைச் செய்வார்கள். அலுவலகத்தில் எதிரிகளையும் எதிர்ப்புகளையும் மீறி வென்று காட்டுவீர்கள். கொடுத்த பணிகளை சிறப்பாக செய்துமுடித்து நற்பெயர் எடுப்பீர்கள். தொழிலில் தேங்கி நின்ற பொருட்கள் அனைத்தும் வியாபாரமாகும். லாபம் பெருகும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். வியாபார வளர்ச்சிக்காக வங்கி கடன் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு சொத்து சேர்க்கை, ஆபரணச் சேர்க்கை, அடகுப் பொருட்களை மீட்பது போன்றவை நடக்கும்.

புரட்டாசி மாதம்-
வரவும் செலவும் சமமாக இருக்கும் மாதம் இது. தேவைகளும் அதுதொடர்பான செலவுகளும் அதிகம் இருக்கும். பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். போக்குவரத்துச் செலவுகள் பயணங்கள் போன்றவை அதிகம் ஏற்படும். வியாபாரம் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தரகு மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். ஆனாலும் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பாக வெளிநாட்டு நிறுவனத்தோடு ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகமாகும். கணவன் மனைவி உறவுக்குள் சின்னச்சின்ன சங்கடங்கள் ஏற்படும். கலைத்துறையினருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும்.


ஐப்பசி மாதம்-
எந்தவொரு செயலை செய்வதற்கு முன்பும் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக யோசித்து செயல்படுங்கள். வியாபார ஒப்பந்தங்கள் போட வேண்டிய சூழ்நிலை வந்தால் முழுமையாக படித்துப் பார்த்த பிறகே ஏற்றுக்கொள்ள வேண்டும். அலுவலகப் பணிகளில் அசட்டையாக இருக்கக்கூடாது. செய்து முடித்த வேலைகளை ஒருமுறைக்கு இருமுறை முழுமையாக ஆராயுங்கள். அதில் இருக்கும் சிறு தவறுகளை களைந்து விடுங்கள். இல்லை என்றால் முழுமையாக திருத்தம் செய்ய வேண்டியது வரும். பெண்களுக்கு திருமண வாய்ப்பு ஏற்படும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்

கார்த்திகை மாதம்-
எந்த ஒரு செயலிலும் லாபம் இருமடங்காக இருக்கும். தொழிலிலும் வியாபாரத்திலும் எதிர்பார்க்காத லாபத்தைக் காண்பீர்கள். தொழில் தொடர்பாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இதுவரை தொழில் செய்யாதவர்கள் கூட இப்போது தொழில் தொடங்க முன் வருவார்கள். ஒருசிலர் நண்பர்களோடு கூட்டு சேர்ந்து தொழிலைச் செய்ய முற்படுவார்கள். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். பொதுவாக அனைவருக்கும் சேமிப்பு உயரும். அலுவலகத்திலும் வெளி இடத்திலும் ஏற்பட்ட ஒரு சில பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். கடன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் முழுமையாகத் தீரும். மூத்த சகோதரரால் ஆதாயம் கிடைக்கும். பாகப்பிரிவினையில் உங்களுக்கான பங்கு அதிகம் இருக்கும். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் வந்துசேரும். அரசியலில் இருப்பவர்களுக்கு ஆதாயம் தரக்கூடிய பதவி கிடைக்கும். வழக்கறிஞர்களுக்கு அரசு பதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

மார்கழி மாதம்-
புதிய முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். மனசஞ்சலம் அதிகமாகும். சோம்பல் அதிகரிக்கும். உடல்நலத்தில் சற்று பின்னடைவு ஏற்படும். மருத்துவச் செலவுகள் உண்டு. தந்தைவழி உறவுகளால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஒரு சில நெருக்கடிகள் தோன்றும். கடன் தொடர்பான பிரச்சினைகளில் அழுத்தம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சை மதிக்காமல் அலட்சியம் செய்வார்கள். அதனால் மிகவும் கவலைப்படுவீர்கள். எந்த விஷயத்திலும் நிதானத்தைக் கடைப் பிடித்தால் இந்த பிரச்சினைகளில் இருந்து எளிதாக வெளிவரலாம். சகோதரர்களிடம் இணக்கமாக இருங்கள். அவர்களிடம் வீண் வாக்குவாதங்கள், பிடிவாதங்கள் என முரண்டு பிடிக்கவேண்டாம். செலவுகள் அதிகமாக இருந்தாலும் சமாளிக்கும் ஆற்றல் ஏற்படும்.

தை மாதம்-
சொந்த வீடு வாங்குவீர்கள். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள். குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கடந்த மாதத்தில் ஏற்பட்ட சிற்சில பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருந்த அழுத்தங்கள் குறையும். வேலைகளில் செய்த தவறுகள் திருத்தப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டிருந்த மந்த நிலை மாறும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடுகளில் சென்று பணிபுரிய விரும்புபவர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

மாசி மாதம்-
அதிக முயற்சிகள் இல்லாமலேயே அனைத்து வேலைகளும் எளிதாக முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். ஆண் வாரிசு எதிர்பார்த்தவர்களுக்கு இப்போது அந்த பாக்கியம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அரசு வழியில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். வழக்குகள் சாதகமாகும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும். அவர்களின் உதவியோடு உங்கள் பிள்ளைகளுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். நீங்கள் பார்த்து வந்த தொழில் அல்லது வியாபாரத்தை உங்களது வாரிசுகளுக்கு பொறுப்புகளைத் தருவீர்கள். பெண்களுக்கு சுயதொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு. கலைத் துறை சார்ந்தவர்களுக்கு எதிர்பாராத விதத்தில் இருந்து அழைப்பு வரும்., ஒப்பந்தங்களும் ஏற்படும்.

பங்குனி மாதம்-
உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள். அலுவலகத்தில் உங்கள் வேலையை மட்டும் கவனித்து வாருங்கள். சக ஊழியர்களுக்கு உதவச் சென்றால், உங்களுக்குத் தேவையற்ற அவப்பெயர் உண்டாகும். வழக்குகள் ஏதேனும் நடந்து கொண்டிருந்தால் வாய்தா வாங்கிக் கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்களிடம் சுமுகமாக நடந்துகொள்ளுங்கள். உங்களுடைய கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானப் போக்கை கடைபிடிக்க வேண்டும். வாழ்க்கைத் துணையிடம் அன்பாக இருங்கள். நண்பர்களிடமும் உறவினர்களிடமும் அனுசரனையாக நடந்து கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தினரிடம் தேவையில்லாத பிரச்சினைகளில் ஈடுபடவேண்டாம். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்க வேண்டும். உடல் நலத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் -
இளநீலம் மற்றும் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண் - 1, 5, 6.

வீட்டில் செய்யக்கூடிய எளிய பரிகாரம் -
சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், புடவை, ஜாக்கெட் என மங்கலகரமான பொருட்களை தானமாக தாருங்கள்.

வணங்கவேண்டிய ஆலய தெய்வம் -
பட்டீஸ்வரம் துர்கை ஆலயத்திற்கு ஒருமுறை சென்று தரிசித்து வாருங்கள். அங்கு அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள். காலை நேரத்தில் ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். எதிர்ப்புகள் காணாமல் போகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x