Last Updated : 16 Dec, 2023 05:42 PM

 

Published : 16 Dec 2023 05:42 PM
Last Updated : 16 Dec 2023 05:42 PM

புத்தாண்டு பலன்கள் 2024 - மேஷம் ராசியினருக்கு எப்படி?

மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம்) கம்பீரமான தோற்றத்தையும் பரந்த மனப்பான்மையும் கொண்ட உங்கள் உள்ளம் உறுதி வாய்ந்தது. எப்போதும் உற்சாகமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பீர்கள். சோர்ந்திருப்பது உங்களுக்குப் பிடிக்காது. செய்வன திருந்தச் செய் என்பதற்கேற்ப உங்கள் செயல்பாடுகளில் யாராவது குறை கண்டுபிடிப்பது கடினம். அந்த அளவுக்கு எதையுமே சிறப்பாகவும், செம்மையாகவும் செய்து முடித்து பலருடைய பாராட்டுகளைப் பெறக்கூடியவர்கள் நீங்கள். நீங்கள் யாரையேனும் தவறாகப் பேசிவிட்டால் அது அப்படியே பலித்துவிடும் என்பதால் நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதே சிறப்பாகும்.

நீங்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகக் காண்பீர்கள். தெய்வ வழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். தள்ளி வைத்திருந்த காரியங்களைச் செய்யத் தொடங்குவீர்கள். பெற்றோருடன் இணக்கமான உறவு உண்டாகத் தொடங்கும். உங்களுடைய தெளிவான எண்ணங்களால் குடும்பத்தில் உங்களின் மதிப்பு மரியாதை உயரும். பெரியோர்களின் தொடர்பு உண்டாகி உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். நெடுநாளாக உங்களை வாட்டி வதைத்த உடல் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். வெளியூர் – வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். லாபகரமான முதலீடுகளைச் செய்து உபரி வருமானம் நிரந்தரமாக வர வழி வகுத்துக் கொள்வீர்கள். மறைமுகக் கலைகளான ஆழ்மனத் தியானம் போன்றவற்றைச் சுயமாகக் கற்றுக் தேர்ந்து அடுத்தவர்களுக்கும் கற்றுத் தருவீர்கள். சகோதர சகோதரிகளின் குறைகளைப் பெரிது படுத்தமாட்டீர்கள், மேலும் முன்பு உங்களை ஏமாற்றியவர்களையும் இந்த காலகட்டத்தில் மன்னித்துவிடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு: உயரதிகாரிகளின் ஆதரவை உறுதுணையாகக் கொண்டு உங்கள் பெரும்பாலான விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சக பணியாளர்களின் பொறாமைப் பார்வை உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கும். உங்கள் அன்றாடப் பணிகளில் சிறு குறையும் நேராமல் மிகுந்த அக்கறை செலுத்தி வருவதே மிக அவசியம். எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவை கிடைக்கும். பொருளாதார நிலையில் பற்றாக்குறை நேர இடமில்லை. சிக்கன நடவடிக்கைகளின் மூலம் ஓரளவு சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

வியாபாரிகளுக்கு: கடன் விஷயத்தில் கவனமாக இருந்தால் மனநிறைவிற்கு குறைவு இருக்காது. வியாபாரம் லாபகரமாகவே நடைபெற்று வரும். நாளுக்குநாள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று வியாபாரத்திலும் வளர்ச்சியைக் காண்பது அவசியமாகும். அதே நேரத்தில் அவர்களைத் திருப்தியடையச் செய்யும் வகையில் தரமான பொருள்களைக் கொள்முதல் செய்து வைப்பது வியாபாரத்தை பெருக்க உதவும். தொழில் வளர்ச்சியும் வருமானமும் சீராக இருந்து வரும் என்றாலும் செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் கடன் வாங்கும் அவசியம் ஏற்படாமல் தவிர்க்கலாம். ஒழுங்காகத் திட்டமிட்டு முறைப்படி செயல்படுவதன் மூலம் தொழிலில் படிப்படியாக முன்னேற்றப் போக்கைக் காணலாம்.

கலைத்துறையினருக்கு: இடைத்தரகர்கள் போன்றவர்களின் ஒத்துழைப்பை எதிர்பாராமல் நீங்கள் நேரடியாகவே முயற்சி செய்து வருவதன் மூலம் புதிய வாய்ப்புகள் சிலவற்றைப் பெற்று மகிழ இடமுண்டு. பின்னணி இசைக்கலைஞர்கள், பாடலாசிரியர்கள், நடனக் கலைஞர்கள் போன்றோர் கூடுதலான வாய்ப்புகளைப் பெற முடியும். வெளியூர்ப் பயணங்களை அடிக்கடி மேற்கொள்ள நேரும். சக கலைஞர்களிடம் சுமுகமாக் நடந்து கொள்வதன் மூலம் உங்கள் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். வண்டி, வாகன வசதிகள் சிலருக்கு அமையக் கூடிய நிலை உண்டு. பயிற்சி பெற்று வரும் கலைஞர்கள் அரங்கேற்றத்தை நடத்தி மகிழ சில மாதங்கள் பொறுத்து இருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு: நீங்கள் முயற்சித்தால் கல்வியில் நாளுக்கு நாள் முன்னேற்றம் காண முடியும். தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று உயர் வகுப்புகளுக்குச் செல்லக் கூடும். இடையில் நிறுத்தி வைத்திருந்த சில பகுதிகளுக்கான தேர்வுகளையும் இப்போது எழுதி நிறைவு செய்வீர்கள். சிலர் உயர் கல்விகற்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லவும் முயன்று வெற்றி பெறுவீர்கள். ஞாபக மறதி, உடல்சோர்வு சில நேரங்களில் ஏற்படக் கூடுமாயினும், அதற்கு இடங்கொடுக்காமல் இருப்பது நல்லது. சுற்றுலாப் பயணங்கள் என எங்காவது செல்ல நேரும்போது குளங்களில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு: உங்களுக்கு சில சோதனைகள் நேர இடமுண்டு என்றாலும் நீங்கள் உறுதியான மனத்துடன் இருந்து பொறுமை காத்து வருவதன் மூலம் தலைமையின் பேரன்பையும், நன்மதிப்பையும் பெறுவீர்கள். மனதை அலைபாயவிட்டு மற்றவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி நிலை தடுமாறுவது எதிர்காலத்தில் துன்பம் தரும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டு நடப்பது அவசியம். உங்களுக்குத் தரப்பட்டுள்ள பணிகளைத் திறமையாக நிறைவேற்றுவதிலேயே உங்கள் நோக்கமெல்லாம் இருந்து வருவது அவசியம்.

பெண்களுக்கு: வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிபாராத நன்மைகளைப் பெறக் கூடும். தள்ளிப்போய் வந்த திருமணம் திடீரென்று முடிவாகி திருமண வாய்ப்பைச் சிலர் பெறக்கூடும். உடல்நலத்தில் சிறுசிறு உபாதைகள் அடிக்கடி ஏற்படக்கூடிய நிலை உள்ளதால் கவனமாக இருந்து வருவது நல்லது. கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதன் மூலம் குடும்பத்தில் சில சங்கடங்களைத் தவிர்க்கலாம். வேலை நிமித்தம் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த தம்பதி இப்போது சேர்ந்து வாழச்சந்தர்ப்பம் உருவாகும்.

நட்சத்திர பலன்கள் > அஸ்வினி: சிறு விபத்துகள் ஏற்படக்கூடிய நிலை தென்படுவதால் பயணங்களின் போது மிகுந்த கவனமும் நிதானமும் தேவை. உணவு விஷயத்தில் கவனமாகவும் கட்டுப்பாடாகவும் இருப்பதன் மூலம் வயிற்றுக் கோளாறுகளிலிருந்து விடுபட முடியும். புத்திர வழியில் மகிழ்ச்சியடையக்கூடிய நிலை உண்டு. உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறும் வகையில் உங்கள் பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களால் அனுகூலமடையும் வாய்ப்பு சிலருக்கு அமையக் கூடும். பொதுவாக எதிலும் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் சங்கடங்கள் பெரும்பாலும் விலகும். மகான்களின் அருளாசிகள் கிட்டும்.

பரணி: பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் எதுவாயினும் கிடைக்க வாய்ப்புண்டு. ஆலய தரிசனம் கண்டுவர குடும்பத்துடன் ஒரு பயணத்தை மேற்கொண்டு திரும்புவீர்கள். அரசு வழியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம். நீர்நிலைகளில் எச்சரிக்கை தேவை. அவசர பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. சகோதர வழியில் திருப்தி தரக்கூடிய ஒத்துழைப்பு கிடைத்து வரும். சிலர் அசையாச் சொத்துக்களை வாங்குவதில் முனையக்கூடும். பணப்புழக்கம் மனநிறைவு தரும் வகையிலே இருந்து வரும். கொடுக்கல் வாங்கலிலும் பிரச்சினை எதுவும் இருக்காது என்றாலும் பெருந்தொகை கடன் கொடுக்கும்போது போதிய ஆவணங்கள் இல்லாமல் கொடுக்கக் கூடாது.

கிருத்திகை: கிருத்திகை முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் எதிலும் அவரசப்பட்டு ஈடுபடாதீர்கள். ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து சாதக பாதகங்களை அறிந்த பின்னர் திட்டமிட்டுச் செயல்படுத்துவது நல்லது. கோபத்தைக் குறைத்து அனைவரிடமும் கனிவாகப் பேசிப் பழகுவது நல்லது. பயணங்களின் போது மிகவும் எச்சரிக்கையாய் இருந்து வருவது அவசியம். எதிர்பாராத தனவரவுகள் சிலருக்கு ஏற்படக்கூடிய நிலை உண்டு. நண்பர்களால் சிலர் அனுகூலமடையக்கூடும். உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.

பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் | சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும் | விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் 2 ஐந்து முக மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் மற்றும் நெய் கலந்து ஏற்றவும் | அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 | அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், குரு | அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு | அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், புதன், வெள்ளி. + தன்னம்பிக்கை உயரும் | - காரியங்களில் தடை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x