Published : 12 Dec 2023 04:19 PM
Last Updated : 12 Dec 2023 04:19 PM

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்ட உற்சவம் நாளை தொடக்கம்: டிச.23-ல் பரமபத வாசல் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா மற்றும் மார்கழி நீராட்ட உற்சவம் நாளை (டிச.13) தொடங்குகிறது. மாலை பச்சை பரப்புதல் வைபவம் நடைபெறுகிறது. டிசம்பர் 23-ம் தேதி காலை 5:50 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடைபெறுகிறது.

108 வைணவ திருத்தலங்களில் சிறப்புமிக்க ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த பெருமைக்குரியது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய ஆழ்வாரின் மகளாக அவதரித்த ஆண்டாள், மார்கழி மாதத்தில் பாவை நோன்பிருந்து ரெங்கமன்னாரை மணந்து கொண்டார். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் மார்கழி நீராட்ட உற்சவம் சிறப்புமிக்கதாகும். ஆண்டாள் அனுசரித்த பாவை நோன்பு விரதத்தை அனைவரும் கொண்டாடும் வகையில் ஆண்டு தோறும் மார்கழி நீராட்ட உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மார்கழி நீராட்ட உற்சவம் நாளை தொடங்குகிறது.

பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான நாளை மாலை 5 மணிக்கு வேதபிரான் பட்டர் இல்லத்தில் ஆண்டாளுக்கு தாய் வீட்டார் பச்சை காய்கறிகள் சீதனமாக வழங்கும் பச்சை பரப்புதல் வைபவம் நடைபெறுகிறது. அதன்பின் பெரிய பெருமாள் கருட வாகனத்திலும், பெரியாழ்வார் யானை வாகனத்திலும் எழுந்தருளி திருப்பல்லாண்டு நடைபெறுகிறது. பகல் பத்து உற்சவத்தில் தினசரி காலை ஆண்டாள் ரெங்கமன்னார் கோபால விலாசம் எனும் பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

டிசம்பர் 23ம் தேதி வைகுண்ட ஏகாதாசி அன்று காலை 5:50 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடைபெறுகிறது. அன்று காலை ஆழ்வார்கள் மங்களாசாசனமும், திருவாய்மொழி வைபவமும் நடைபெறுகிறது. ஜனவரி 8ம் தேதி ஆண்டாள் எண்ணெய் காப்பு உற்சவம் தொடங்குகிறது. 9ம் தேதி கள்ளழகர் திருக்கோலத்தில் தங்க பல்லக்கிலும், 10ம் தேதி கண்ணன் திருக்கோலத்தில் தங்க பல்லக்கிலும், 11ம் தேதி முத்தங்கி சேவையும் நடைபெறுகிறது. அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர் வெங்கட்ராமரஜா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள், செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x