யுகோஸ்லாவிய அரசோடு இணைந்திருந்தபோதும் செர்பியா தனியானபோதும் அந்த சரித்திரங்களில் மறக்க முடியாத ஒரு நபராக விளங்கியவர் ஸ்லோபோடன் மிலோசெவிக்.
1980-ல் டிட்டோ இறந்தார். 1989-ல் ஸ்லோபோடன் மிலோசெவிக் செர்பியாவின் பிரதமர் ஆனார். இந்த இருவருக்குமிடையே உள்ள அணுகுமுறைகளில் எக்கச்சக்க வித்தியாசம்.
1987-ல் செர்பியாவில் கம்யூ னிஸ்ட் கட்சிப் பிரமுகராக விளங்கிய மிலோசெவிக் கொசோவா வுக்குச் சென்றார். கொசோவா ஒரு தனி மாகாணம். அங்கு வசித்த செர்பியர்கள் தங்களை அங்குள்ள மெஜாரிட்டி மக்கள் (அல்பேனி யர்கள்) துன்புறுத்துவதாகக் கூற அங்கு உணர்ச்சிகரமான உரையை ஆற்றினார் மிலோசெவிக்.
‘‘கொசோவா நம் மக்களுக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அதை மெல்ல மெல்லத் தான் தீர்க்க முடியும் என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அது வேகமாக தீர்க்க வேண்டிய பிரச்சினை. பொருளாதார சரிவின் போதுகூட கொசோவா தான் அதிகப் பிரச்சினையாக இருந்தது. நம் மக்களுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இதில் முக்கிய பொறுப்பு இருக்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சியிலேயே இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்பதில் இருவேறு கருத்துகள் உள்ளன. ஒருமித்த கருத்துக்கு வரவேண்டும். ஓன்று பட்டால் செர்பியர்களின் பிரச்சி னைகளை சுலபமாக தீர்க்க முடியும்.
கொசோவா வளர்ச்சியடையாத ஒரு பகுதி. அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் மிகவும் அதிகம். வெளிநாட்டுக் கடனும் அதிகம். ஆரோக்கியமான எண்ணப் போக்கு இல்லாத பலரும் அதன் அரசியலில் இருக்கிறார்கள்.
கொசோவாவில் செர்புகள் மைனாரிட்டி என்று கூறக் கூடாது. இங்கு அல்பேனியர்களுக்கு உள்ள சகல உரிமைகளும் அவர்களுக்கும் உண்டு. யுகோஸ்லாவியாவின் பிற பகுதிகளில் வசிக்கும் அல்பேனி யர்கள் அங்கெல்லாம் தங்களை மைனாரிட்டி என்று அறிவித்துவிட்டு அடங்கிப் போவார்களா?’’ என்றவர் முத்தாய்ப்பாக ‘‘கவலைப் படாதீர்கள். வருங்காலம் செர்பியர் களாகிய நம் கையில்தான்’’ என்றார்.
1989-ல் செர்பியாவின் பிரதமரா னார் மிலோசெவிக். (நாளடைவில் யுகோஸ்லாவியாவின் தலைவரா கவும் ஆனார். ஆனால் இடைப்பட்ட காலகட்டத்தில் ஸ்லோவேனியா, மாசிடோனியா, க்ரோவேஷியா மற்றும் போஸ்னியா ஆகியவை யுகோஸ்லாவியாவிலிருந்து பிரிந்து விட்டன).
கொசோவா விடுதலை ராணுவம் என்ற புரட்சிகர அமைப்பு செர்பிய ஆட்சிக்கு எதிராகப் போராடியது. செர்பிய ராணுவம் அசுரத்தனமாக அவர்களை அடக்கியது. பல்லாயிரக்கணக் கான அல்பேனியர்கள் வெளிநாடு களுக்கு தெறித்து ஓடினர்.
மார்ச் 1989-ல் செர்பியாவுக்கும் கொசோவாவுக்கும் நடைபெற்ற மறைமுகப் போர் மேலும் அதிக மானது. செர்பிய அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்பட்டது. கொசோவா மாகாணம் செர்பியாவின் பகுதியாக ஆனது. யுகோஸ்லாவிய அரசை இப்போது செர்பியாவால் மேலும் ஆட்டிப் படைக்க முடிந்தது. காரணம் செர்பியாவின் தொகுதிகள் எண்ணிக்கையில் அதிகமாகி இருந்தது.
கொசோவோ விடுதலைப் படை புரட்சியாளர்கள் செர்பிய ஆட்சிக்கு எதிராகத் திரண்டு எழுந்தனர். செர்பிய ராணுவம் பதிலுக் குத் தாக்குதல் நடத்தியது. கொசோவோவில் வசித்த ஆயிரக் கணக்கான அல்பேனியர்கள் பிற நாடுகளுக்குப் பறந் தார்கள். கொசோவோவில் 45 அல்பேனியர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற குரல் வலுப் பெற்றது. ஆனால் மிலோ செவிக் இதற்கெல்லாம் அசருவதாக இல்லை. செர்பியாவுக்கு எதிரணி யில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகள் திரண்டன.
(பிப்ரவரி 2008-ல் செர்பியா விலிருந்து தான் சுதந்திரம் பெற்று விட்டதாகக் கூறியது கொசோவா. தன் பெயர் ‘கொசோவா குடியரசு’ என்றும் அறிவித்துக் கொண்டது. ஆனால் செர்பியாவைப் பொறுத்தவரை கொசோவாவுக்கு தன்னாட்சி அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. மற்றபடி இது இன்றுவரை செர்பியாவைச் சேர்ந்ததுதான்).ஆக யுகோஸ்லா வியக் குடியரசிலிருந்து ஸ்லோவே னியா பிரிந்தது. க்ரோவேஷியா பிரிந்தது. மாசிடோனியாவும் பிரிந்தது. இந்தக் காலகட்டத் திலேயே போஸ்னியாவிலும் ரண களம் தொடங்கியது.
“இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலக அளவில் மிக மோச மான இனப்போராட்டம் போஸ்னி யாவில்தான் நடந்தது” என்று அகில உலகப் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
(உலகம் உருளும்)
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
5 hours ago
கல்வி
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago