Last Updated : 07 May, 2024 07:59 PM

 

Published : 07 May 2024 07:59 PM
Last Updated : 07 May 2024 07:59 PM

புதுச்சேரியில் முதல் முறை: 4-வது முறையாக முதல்வராகி 4-ம் ஆண்டு ஆட்சியைத் தொடங்கிய ரங்கசாமி!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் முதல் முறையாக 4-வது முறையாக முதல்வராகி 4-வது ஆண்டு ஆட்சியை அம்மாநில முதல்வர் ரங்கசாமி தொடங்கினார்.

புதுச்சேரியில் காங்கிரஸில் போட்டியிட்டு வென்று முதன்முதலில் ரங்கசாமி கடந்த 2001ல் முதல்வராக பொறுப்பேற்றார். அதையடுத்து 2006-லும் முதல்வராக தொடர்ந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசலால் 2008-ல் பதவி விலகினார். பின்னர் 2011-ல் என்.ஆர்.கட்சியைத் துவங்கி 48 நாட்களில் தேர்தலை சந்தித்து ஆட்சியை பிடித்து மூன்றாவது முறையாக முதல்வரானார். அதைத்தொடர்ந்து 2016 நடந்த தேர்தலில் தோல்வியடைந்து எதிர்க்கட்சித் தலைவரானார்.

கடந்த 2021-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி போட்டியிட்டது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில், என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்கள் பிடித்துப் பெரும்பான்மை பெற்றது. புதுச்சேரி முதல்வராக 4 முறையாக கடந்த 2021 மே 7-ல் பொறுப்பேற்றார்.

4-வது முறையாக முதல்வர் பதவி: புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை அதிகப்பட்சமாக எம்.ஓ.எச். பரூக் மூன்று முறை முதல்வராக இருந்தார். அவரையும் தாண்டி முதல்முறையாக அதிகப்பட்சமாக 4-வது முறையாக முதல்வராகி 4-வது ஆண்டை முதல்வர் ரங்கசாமி தொடங்கியுள்ளார். வெங்கடசுப்பா ரெட்டியார், சுப்பிரமணியன், எம்.டி.ஆர்.ராமச்சந்திரன், சண்முகம், வைத்திலிங்கம் ஆகியோர் தலா 2 முறையும், எட்வர்ட் குபேர், ஜானகிராமன், நாராயணசாமி ஆகியோர் ஒரு முறையும் முதல்வராகப் பதவி வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது முறை முதல்வராக பதவியேற்று நான்காவது ஆட்சி காலத்தில் நான்காவது ஆண்டு தொடக்கம் துவங்கியது. இதையடுத்து சட்டப்பேரவைத்தலைவர் செல்வம் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பெண்கள், பொதுமக்கள், இளையோர் பலவித கோரிக்கைகளை வைத்துள்ளனர். அதை தீர்ப்பதன் மூலம்தான் அடுத்த இரு ஆண்டுகளுக்குப் பிறகு வரும் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க வாய்ப்பாக இருக்கமுடியும் என்று என்.ஆர்.காங்கிரஸார் கருதுகின்றனர்.

மீதமுள்ள இரு ஆண்டுகளில் மக்களுக்கு அளித்த வாக்குறுதியான மாநில அந்தஸ்து, நிதி கமிஷனில் புதுச்சேரியைச் சேர்ப்பது தொடங்கி ரேஷன் கடை திறப்பு, அரசு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது, புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருவது, விலைவாசியை கட்டுப்படுத்துவது, போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் அவருக்கு காத்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x