திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தும் நாடகங்கள் மக்களிடம் எடுபடாது என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.
கோவையில் இரண்டாவது நாளாக நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர், காலையில் புலியகுளம் விநாயகர் கோயிலில் வழிபட்டார். அங்கு பிரச்சாரத்தை தொடங்கிய அவர், தொடர்ந்து சிங்காநல்லூர், பீளமேடு ரொட்டிக்கடை மைதானம் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்தார். அங்கு முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
நாம் மனதாரப் பிரார்த்தனை செய்கிறோம். உண்மையாக இருக்கிறோம். ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டிருக்கிறார். தற்போது கையில் வேல் எடுத்துக் கொண்டு, வேஷம் போடுகிறார். ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்க மாட்டார். தேர்தல் நெருங்கினால் திமுகவினர் இதுபோல பகல் வேஷம் போடுவார்கள். அவர்களுக்கு வரும் தேர்தலில் இறைவன் சரியான பாடம் புகட்டுவார்.
ஏற்கெனவே கிராமசபைக் கூட்டம் என்ற பெயரில் நாடகத்தை அரகேற்றிவிட்டனர். ஸ்டாலின் நடத்தும் நாடகங்கள் மக்களிடம் எடுபடாது.
திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு, மின்வெட்டு அதிகரிப்பதுடன், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்தால், ஸ்டாலின் குடும்பத்துக்கு மட்டும்தான் நன்மை கிடைக்கும். அது ஒரு வாரிசுக் கட்சி. எனவே, மக்கள் திமுகவைப் புறக்கணிக்க வேண்டும். திமுக ஆட்சியில் கடும் மின்வெட்டால் தொழில் துறை பாதிக்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் தமிழகம் மின் மிகை மாநிலமாகத் திகழ்கிறது. 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. ஸ்டாலின் வீட்டுக்கும் இந்த சலுகை கிடைக்கிறது.
கரோனா காலத்தில் கட்சி வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். 2019 மக்களவைதேர்தலின்போது, பொய் கருத்துகளை மக்களிடம் பரப்பி வெற்றி பெற்றனர். அதேபோல, வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பொய்களைப் பரப்பி, வெற்றி பெற முயற்சிக்கின்றனர். மக்களவைத் தேர்தலின்போது திமுக கொடுத்த வாக்குறுதி எதையுமே இதுவரை நிறைவேற்றவில்லை.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் புதிய தொழிற்சாலைகள் வருகின்றன. 2019-ல் உலகத் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி, ரூ.3 லட்சத்து 5 ஆயிரம் கோடி முதலீட்டில், 304 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டோம். இதனால் நேரடியாக 5 லட்சம் பேருக்கும், மறைமுகமாக 5 லட்சம் பேருக்கும் வேலை கிடைக்கும். உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை 49 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ, கோரிக்கைகள் தொடர்பாக முதல்வரையோ, அமைச்சர்களையோ சந்திப்பதில்லை. தொகுதி மக்களையும் சந்திப்பதில்லை. கடந்த தேர்தலில் இங்கு திமுக-வைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றதால், மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை. இவ்வாறு முதல்வர் பேசினார்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்எல்ஏக்கள் அம்மன் கே.அர்ஜுனன், பிஆர்ஜி.அருண்குமார் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வலைஞர் பக்கம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
உலகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago