Published : 02 May 2024 05:21 PM
Last Updated : 02 May 2024 05:21 PM

செங்கோட்டை முழக்கங்கள் 76 - ‘இந்த வேகம்... இவரின் அடையாளம்’ | 2022

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு பிரிவினருக்கும், ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியே சிறப்புத் திட்டங்கள் வகுப்பதை விட, எல்லாரையும் உள்ளடக்கிய எல்லாருக்கும் பொதுவான திட்டங்களை செயல்படுத்துவதையே அதிகம் விரும்புகிற தலைவர். சற்றே உற்று நோக்கினால் தெரியும் - தனது உரைகளில் அவர் விவரித்து, சிலாகித்துக் கூறும் திட்டங்கள் அனைத்துமே அநேகமாக மேற்சொன்ன வகையில்தான் அடங்கும். இது இந்த அரசின் அணுகுமுறை அல்லது செயல்பாணி.

நரேந்திர மோடியின் சுதந்திர தின உரைகளிலும் இதுவே பிரதானமாகத் தெரிகிறது. அதற்கான ஓர் உதாரணம்தான் - ஒன்பதாவது முறையாக 2022 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி ஆற்றிய உரை. அவரது உறுதி, அதற்கு இணையான செயல் வேகம் முழுதாய் வெளிப்பட்ட அந்த உரை – இதோ:

இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் மறக்கவொண்ணாத் தருணத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகள்; பாராட்டுகள். நமது மூவண்னக்கொடி பெருமை பெருமிதம் மகிமையுடன் பறப்பதைக் கண்டு மனம் மகிழ்கிறது. இந்தியாவின் எல்லா மூலைகளிலும் உள்ளவர்கள் மட்டுமல்ல; உலகமெங்கும் வாழும், தாய்நாட்டை நேசிக்கும் இந்தியர்கள் அனைவருமே மிகவும் மகிழ்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வ நல்வாழ்த்துகள். நமது சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவைக் கொண்டாடும் நேரத்தில், அன்பார்ந்த இந்தியர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வ வாழ்த்துக்கள். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். புதிய பாதையில், புதிய உறுதிப்பாடு மற்றும் புதிய வலிமையுடன் முன்னேறிச் செல்வதற்கான காலடி எடுத்து வைக்கும் புனிதமான தருணம் இது.

நமது விடுதலைக்கான தேடலில், அடிமைத்தன காலம் முழுவதும் போராட்டத்திலேயே கழிந்து விட்டது. இந்தியாவின் எந்தப் பகுதியும் அல்லது எந்த காலகட்டமும், பல நூற்றாண்டு கால அடிமைத்தனத்துக்கு எதிரான சுதந்திரப் போராட்ட காலத்தைத் தொடாமல் விட்டதில்லை. மக்கள் கொடுமைகளைத் தாங்கிக்கொண்டு, தங்களுக்குத் தாங்களே தியாகம் செய்ததுடன், உயிர் தியாகமும் செய்துள்ளனர். இத்தகைய துணிச்சல் மிக்க இதயங்கள், மற்றும் ஒவ்வொரு மகத்தான மனிதரின் மாபெரும் தியாகத்துக்கும், தலைவணங்கி மரியாதை செலுத்த சரியான தருணமாகும். அவர்கள் கனவு கண்ட அம்சங்களையும், அவர்களது எதிர்பார்ப்புகளையும், தீர்க்கமான உறுதிப்பாட்டுடன் நிறைவேற்றுவதற்கு உறுதியேற்கவும் இதுவே உரிய தருணம். பாபுஜி மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பாபாசாஹேப் அம்பேத்கர், வீர் சாவர்க்கர் போன்று தங்களது வாழ்நாள் முழுவதையும் நாட்டுக்காக அர்ப்பணித்த மாமனிதர்களுக்கு, நாட்டு மக்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

கடமைப் பாதையே அவர்களின் வாழ்க்கைப் பாதையாக இருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடித்தளத்தைத் தகர்த்த மங்கள் பாண்டே, தாத்தியா தோபே, பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு, சந்திர சேகர ஆசாத், அஸ்பாகுல்லாகான், ராம்பிரசாத் பிஸ்மில் மற்றும் இவர்களை போன்ற எண்ணற்ற புரட்சியாளர்களுக்கு இந்த நாடு பெரிதும் நன்றிக்கடன்பட்டுள்ளது. அதேபோன்று, இந்தியப் பெண்களின் வலிமையை பறைசாற்றிய ராணி லட்சுமி பாய், ஜல்கரிபாய், துர்கா பாபி, ராணி கைடின்லியு, ராணி சென்னம்மா, பேகம் ஹசரத் மஹால், வேலு நாச்சியார் உள்ளிட்ட தீரமிக்க பெண்களுக்கு இந்த நாடு, நன்றிக்குரியதுமாகும். இந்தியாவின் மகளிர் சக்தியின் உறுதிப்பாடு என்ன? தியாகம் புரிந்த துணிச்சல் மிக்க எண்ணற்ற பெண்களை நினைவு கூரும்போது ஒவ்வொரு இந்தியருக்குள்ளும் பெருமிதம் நிரம்புகிறது.

சுதந்திரத்துக்காகப் போரிட்டதோடு, சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டைக் கட்டமைக்க அரும்பணி ஆற்றிய டாக்டர் ராஜேந்திர பிரசாத், பண்டிதர் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், ஷியாம பிரசாத் முகர்ஜி, லால்பகதூர் சாஸ்திரி, தீன்தயாள் உபாத்யாயா, ஜெய்பிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா, ஆச்சாரியா வினோபா பாவே, நானாஜி தேஷ்முக், சுப்பிரமணிய பாரதி போன்ற எண்ணற்ற மாமனிதர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் இதுவே சரியான தருணம்.

சுதந்திரப் போராட்டம் பற்றி நாம் பேசும்போது, வனப்பகுதிகளில் வசிக்கும் நமது பழங்குடியின சமுதாயத்தினரின் பங்களிப்பை நாம் மறந்துவிட முடியாது. பகவான் பிர்சா முண்டா, சித்து - கன்கு, அல்லூரி சீதா ராமராஜ், கோவிந்த் குரு போன்று எண்ணற்ற பலர் உள்ளனர். தாய் நாட்டுக்காக வாழ்ந்து மடிவோம் என்ற உறுதிப்பாட்டுடன், தொலைதூர வனப்பகுதிகளில் இருந்து சுதந்திர போராட்டத்துக்காகக் குரல் கொடுத்து, வனப்பகுதியில் வசித்த சகோதர, சகோதரிகள், தாய்மார்கள் மற்றும் இளைஞர்களை ஈர்த்தனர். பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக நமது சுதந்திரப் போராட்டம் அமைந்தது நாட்டுக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகும். இவ்வாறான ஓர் அம்சம் - நாராயண குரு, சுவாமி விவேகானந்தா, மகரிஷி அரவிந்தர், குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் போன்ற தலைசிறந்த மனிதர்கள், இந்தியாவின் மூலை முடுக்குகளை, கிராமங்களை விழித்தெழச் செய்து உயிர்ப்புடன் வைத்திருந்ததாகும்.

‘அமிர்த பெருவிழா’–வை நாடு எவ்வாறு கொண்டாடியது என்பதை கடந்த ஓராண்டு முழுவதும் நாம் நேரில் பார்த்தோம். 2021-ல் தண்டி யாத்திரையிலிருந்து அது தொடங்கியது. சுதந்திரத்தின் ‘அமிர்த பெருவிழா’ குறிக்கோள்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் விதமாக, இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மூலைமுடுக்குகளில் எல்லாம் மக்கள் நிகழ்ச்சிகளை நடத்தினர். குறிப்பிட்ட ஒரு நோக்கத்துக்காக, இதுபோன்ற பிரமாண்ட விழா விரிவான முறையில் நடத்தப்பட்டது வரலாற்றில் இதுவே முதன் முறையாகும். மறக்கப்பட்ட அல்லது சில காரணங்களுக்காக வரலாற்றில் இடம்பெற முடியாத, மாமனிதர்களை நினைவுகூரவும் நாடு முழுதும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அத்தகையை அரிய மாவீரர்கள், சிறந்த மனிதர்கள், தன்னலமற்ற, துணிச்சல் மிக்கவர்களுக்கு நாடு தற்போது மரியாதை செலுத்துகிறது. இதுபோன்ற சிறந்த மனிதர்களுக்கு ‘அமிர்த பெருவிழா’ காலத்தில் மரியாதை செலுத்துவதற்கு இதுவே உரிய வாய்ப்பாகும்.

நேற்று, ஆகஸ்ட் 14, தேசப்பிரிவினையால் ஏற்பட்ட ஆழமான காயத்தை, ‘பிரிவினை துயர நினைவு தினமாக’ இந்தியா கனத்த இதயத்துடன், நினைவுகூர்ந்தது. மூவண்ணக் கொடிக்குப் பெருமை சேர்ப்பதற்காக கோடிக்கணக்கான மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்தனர். தாய்நாடு மீதான நேசத்தால், அவர்கள் பெரும் துயரத்தை அனுபவித்த போதிலும், பொறுமையை இழக்கவில்லை. இந்தியா மீதான நேசத்துடன், புது வாழ்க்கையை தொடங்குவது என்ற அவர்களது மனஉறுதி ஊக்கம்மளிப்பதாய் , போற்றுதலுக்கு உரியதாய் இருந்தது.

இன்று நாம், ‘சுதந்திர தின அமிர்த பெருவிழா’-வை கொண்டாடும் வேளையில், நாட்டுக்காக வாழ்ந்து மடிந்தவர்கள், நாட்டுக்காகக் கடந்த 75 ஆண்டுகளில் தங்களது வாழ்நாளை அர்ப்பணித்தவர்கள், நாட்டை பாதுகாத்தவர்கள், நாட்டின் உறுதிப்பாட்டை நிறைவேற்றியவர்கள்; ராணுவத்தினர்,, காவல்துறையினர், உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள், மத்திய- மாநில ஆட்சியாளர்கள் என அனைவரின் பங்களிப்பையும் நினைவு கூர்வதற்கு இது ஒரு வாய்ப்பாகும். கடந்த 75 ஆண்டுகளில் பல்வேறு சவால்களுக்கு இடையிலும், நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லத் தங்களால் இயன்ற அளவு, பாடுபட்ட கோடிக்கணக்கான மக்களின் பங்களிப்பையும், இன்று நாம் நினைவுகூர்கிறோம்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, கடந்த 75 ஆண்டு காலப் பயணம், ஏற்ற இறக்கங்கள் மிகுந்தது. நல்ல நேரங்களிலும், மோசமான தருணங்களிலும் நாட்டு மக்கள் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளனர்; அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டனரே தவிர, விட்டுவிடவில்லை. உறுதிப்பாடுகள் மங்கிப்போகச் செய்யவும் இல்லை. காலனி ஆதிக்கத்தில் இருந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகள், இந்தியா மீதும், இந்திய மக்களின் மனதிலும் ஆழமான காயத்தை ஏற்படுத்திய போதிலும், மக்கள் பொறுமை காத்து புத்தெழுச்சி பெற்றனர். சுதந்திர போராட்டத்தின் இறுதி காலக்கட்டத்தில், நாட்டை அச்சுறுத்தவும், ஏமாற்றி, விரக்தி அடைய செய்வதற்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. நாடு சுதந்திரம் பெற்று, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வெளியேறி விட்டால், நாடு சிதறுண்டு போவதுடன், மக்கள் உள்நாட்டு போரில் மடிவார்கள்; இந்தியா இருண்ட காலத்துக்குத் தள்ளப்படும் என்று எதிர்பார்க்கப் பட்டது.

இது இந்திய மண் என்பதை அவர்கள் அறியவில்லை. பல நூற்றாண்டுகள் ஆனாலும் தாக்குப் பிடிக்கும் அளவற்ற திறமையும், வலிமை மிக்க ஆட்சியாளர்கள் வெளியேறினாலும் செல்வாக்குடன் திகழும் திறன் இந்த நாட்டுக்கு உள்ளது. இதுபோன்ற, அபார திறமை மற்றும் புத்தெழுச்சியின் விளைவாக நமது நாடு, உணவுப் பிரச்சினை அல்லது போர் போன்ற எண்ணற்ற பாதிப்புகளுக்கு இடையிலும் வலிமையான தேசமாக உருவெடுத்துள்ளது. அப்பாவி மக்களைக் கொன்று குவித்த தீவிரவாத நடவடிக்கைகள் போன்ற சவால்களையும் நாம் வெற்றிகரமாக முறியடித்துள்ளோம். மறைமுக யுத்தங்கள், இயற்கை சீற்றங்கள், வெற்றிகள், தோல்விகள், நம்பிக்கை, விரக்தி போன்றவற்றை எதிர்கொண்ட போதும் நாம் நிலை குலைந்து விடவில்லை. இதுபோன்ற மோசமான நிலையிலும், இந்தியா அயராது முன்னேறியுள்ளது. இந்தியாவுக்குப் பெரும் சுமையாக இருக்கும் எனக் கருதப்பட்ட பன்முகத் தன்மை, உண்மையில் நாட்டின் விலைமதிப்பற்ற சக்தி என்பது நிரூபணம் ஆகியுள்ளது, நாட்டின் வலிமைக்கு இதுவே வலுவான சான்றாகும்.

வலிமையான கலாசாரம் மற்றும் நற்பண்புகள், இந்திய மக்களின் மனம் மற்றும் ஆன்மாவில் ஆழமாக வேரூன்றி மிகுந்து உள்ளதை, இந்தியா, ஜனநாயகத்தின் தாயகம் என்பதை உலகம் அறிந்திருக்கவில்லை. ஜனநாயகப் பண்புகளை மனதில் கொண்டு, உறுதிப்பாடுடன், தீர்மானத்துடன் நடக்கும் போது, உலகின் சக்தி வாய்ந்த நாடுகளுக்குக் கவலை பெருகி விடும். ஜனநாயகத்தின் தாயகமான இந்தியா, இந்த விலைமதிப்பற்ற வலிமையைப் பெற்றுள்ளது என்பதை அனைவருக்கும் பறைசாற்றியுள்ளது.

அன்பார்ந்த நாட்டு மக்களே, எதிர்பார்ப்புகள், ஆசைகள், ஏற்றத்தாழ்வுகளுக்கு இடையிலும், கடந்த 75 ஆண்டுகளில், அனைவரது முயற்சியாலும் நாம் இந்த நிலையை எட்டியுள்ளோம். 2014-ல் எனதருமை நாட்டு மக்கள் எனக்கு இந்தப் பொறுப்பை வழங்கினர். சுதந்திர இந்தியாவில் பிறந்து, செங்கோட்டைக் கொத்தளத்தில் இருந்து நாட்டு மக்களின் புகழ் பாடும் வாய்ப்பு கிடைத்த முதல்நபர் நான். இன்று நான், அறிந்திருப்பது எல்லாம் உங்களிடமிருந்து அறிந்து கொண்டவைதான். உங்களது மகிழ்ச்சி மற்றும் துயரங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உங்கள் நாடு எப்படி இருக்க வேண்டும் என, நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் என்னால் உணர முடிகிறது. உங்களது கனவுகளில், எதனோடு நான் உடன்பட்டு இருந்தாலும், இதுவரை புறக்கணிக்கப்பட்ட மற்றும் நலிந்த பிரிவினருக்கு அதிகாரம் அளிப்பதற்காகவே, எனது பதவிக்காலம் முழுதும் நான் பாடுபட்டு வருகிறேன். ஆனாலும், ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, பாதிக்கப்பட்ட, நலிந்த பிரிவினர், பழங்குடியினர், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரின் முன்னேற்றத்துக்காகவும் நான் பாடுபடுகிறேன்.

இந்தியாவின் கிழக்கு அல்லது மேற்கு, வடக்கு அல்லது தெற்கு, கடற்கரைப் பகுதிகள் அல்லது இமயமலை சிகரங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற நான் என்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளேன். கடைக்கோடியில் உள்ளவர்களுக்கும் அதிகாரம் அளித்து அவர்களை மேம்படுத்துவது என்ற மகாத்மாவின் குறிக்கோளை நிறைவேற்ற நான் உறுதி பூண்டுள்ளேன். சுதந்திரம் அடைந்த பின், பல பத்தாண்டுகளில் பெற்ற அனுபவத்தின் விளைவாக, இதன் பலனை, கடந்த எட்டு ஆண்டுகளில் நான் கண்டுவருகிறேன். 75 ஆண்டு காலப் பெருமையை குறிக்கும் விதமாக, இன்று நாம் அமிர்த பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இந்த அமிர்த காலத்தின் முதல் காலைப் பொழுதில், அதிகாரம் பெற்ற தேசத்தைக் காணும் போது, பெருமிதம் நிறைந்தவனாய் இருக்கிறேன்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, இந்தியர்கள் முன்னேற்றத்தை விரும்பும் சமுதாயமாக உருவெடுத்துள்ள, பெருவாய்ப்பை நான் காண்கிறேன். முன்னேற்றத்தை விரும்பும் சமுதாயம், எந்த ஒரு நாட்டுக்கும் மிகப் பெரிய சொத்தாகும். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும், எல்லாப் பிரிவினரும் எதிர்பார்ப்புகள் கொண்டிருப்பது, நமக்குப் பெருமை சேர்க்கிறது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்த, மாற்றத்தைக் காண விரும்புகிறார். ஆனால், அதற்காகக் காத்திருக்கத் தயார் இல்லை. இந்த மாற்றங்களைத் தமது வாழ்நாளிலேயே காண விரும்புவதுடன், இதனை நிறைவேற்றுவதை தமது கடமையின் ஒரு பகுதியாகவும் கருதுகின்றனர்; வேகத்தை முன்னேற்றத்தை விரும்புகின்றனர். 75 ஆண்டுகளில், செழித்து ஓங்கியுள்ள கனவுகள் அனைத்தும் தமது கண் முன்பாக நிறைவேறுவதைக் காண்பதற்கு ஆவலாக உள்ளனர். இது சிலருக்கு, பிரச்சினை ஏற்படுத்தக் கூடும். ஏனெனில், சமுதாயம் முன்னேற்றத்தை விரும்பினால், அரசாங்கமும் கத்தி முனையில் நடக்க வேண்டிய நிலை ஏற்படுவதுடன், காலத்துக்கேற்ப மாறவேண்டிய சூழலும் ஏற்படும்.

மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அமைப்பு என எதுவாக இருந்தாலும், எத்தகையை ஆட்சிமுறை என்பது ஒரு பிரச்சினையே அல்ல, முன்னேற்றத்தை விரும்பும் இந்த சமுதாயத்தின் விருப்பத்தை நிறைவு செய்ய அனைவரும் முயற்சிப்பார்கள்; இதனை நிறைவேற்றுவதற்காக நாம் நீண்ட காலம், காத்திருக்கத் தேவையில்லை என்று நான் நம்புகிறேன். முன்னேற்றத்தை விரும்பும் நமது சமுதாயம் நீண்ட காலமாகக் காத்திருக்கிறது. ஆனால், தற்போது அவர்கள், தங்களது எதிர்கால சந்ததியும் இதுபோன்ற காத்திருப்புடன் வாழ்வதை விரும்பவில்லை, எனவே, இந்த ‘அமிர்த காலத்தின்’ முதல் விடியல், முன்னேற்றத்தை விரும்பும் இந்த சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகிற பொன்னான வாய்ப்புகளை நமக்கு அளித்துள்ளது.

அன்பார்ந்த நாட்டு மக்களே, சமீபத்தில் அனுபவமிக்க கூட்டுப் பொறுப்புணர்வு மற்றும் புத்தெழுச்சி மிக்க சக்தியை நம்மால் காண முடிந்தது. அதுபோன்ற கூட்டுணர்வின் எழுச்சி, நமது சுதந்திர போராட்டத்தின் அமிர்தம் என்பதோடு, தற்போது அது பாதுகாத்து பராமரிக்கப்படுகிறது. இது, தீர்மானமாக மாறியிருப்பதுடன், முயற்சிகள் முடிவடைந்து சாதனைகளைக் காண முடிகிறது. கூட்டுணர்வுகளை எழுச்சியுற செய்வதும் இத்தகைய மறுமலர்ச்சியும் நமது மாபெரும் சொத்துகளாகும்.
இந்த மறுமலர்ச்சியைப் பாருங்கள். ஆகஸ்ட் 10 வரை, நமக்குள் இருந்த சக்தியை நாம் யாரும் அறியவில்லை. ஆனால் கடந்த 3 நாட்களாக மூவண்ணக் கொடியின் பயணத்தை நாடு கொண்டாடும் முறை, சமூக அறிவியலின் முன்னணி வல்லுனர்களால்கூட, மதிப்பிட முடியவில்லை. இது, மறுமலர்ச்சி மற்றும் உணர்வுமிக்க தருணமாகும். மக்கள் இன்னும் இதைப் புரிந்து கொள்ளவில்லை.

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ‘மக்கள் ஊரடங்கு’ அனுசரித்த போது, இந்த உணர்வை நம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது. கையொலி எழுப்பியும், பாத்திரங்களைத் தட்டியும், ஒலி எழுப்பி, கரோனா முன்களப் பணியாளர்களுடன் தோளோடு தோள் நின்றபோது, நாட்டில் இத்தகையை உணர்வு காணப்பட்டது. கரோனா முன்களப் பணியாளர்களுக்காக விளக்கு ஏற்றிய போதும், நாடு இதனை உணர்ந்தது. கரோனா காலக்கட்டத்தில் தடுப்பூசியை செலுத்துவதா, வேண்டாமா, தடுப்பூசிகள் பயனளிக்குமா இல்லையா? என ஒட்டுமொத்த உலகமும், குழப்பத்தில் தவித்தது. அந்த காலகட்டத்தில், 200 கோடி தடுப்பூசிகளை செலுத்தியதன் மூலம், நம் நாட்டின் கிராமங்களில் உள்ள ஏழை மக்கள், உலகை வியப்பில் ஆழ்த்தினர். இது தான், உணர்வு; இதுதான் நமது திறமை, அதுவே இப்போது நம் நாட்டுக்குப் புதிய வலிமை தந்துள்ளது.

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே, ஒரு முக்கியமான ஆற்றலை என்னால் காண முடிகிறது. சுதந்திரத்தின் பல பத்தாண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவைப் பற்றிய உலகத்தின் போக்கில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலகம் இந்தியாவை பெருமையுடனும், எதிர்பார்ப்புடனும் நோக்குகிறது. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உலகம் இந்தியாவை எதிர்நோக்கியுள்ளது. உலகத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், அதன் சிந்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றம் நமது கடந்த 75 ஆண்டு கால பயணத்தின் அனுபவம் ஆகும்.

நாம் முன்னேறிச்செல்லும் வழியை உலகம் கவனித்து வருவதுடன், ஒரு புதிய நம்பிக்கையையும் கொண்டுள்ளது. எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது என்பதை உலகம் உணரத் தொடங்கியுள்ளது. இதனை விருப்பம், மீட்சி, உலகின் எதிர்பார்ப்பு ஆகிய 3 சக்திகளாக நான் காண்கிறேன். இன்று இதனை நாம் முற்றிலுமாக ஏற்றுக் கொள்கிறோம். விழிப்புணர்வில் நமது மக்களுக்கு பெரிய பங்கு உள்ளது. பல பத்தாண்டு கால அனுபவத்துக்குப் பின்னர் 130 கோடி நாட்டு மக்களும், நிலையான அரசு, அரசியல் நிலைத்தன்மையின் சக்தி, கொள்கைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். கொள்கைகளில் நம்பிக்கை உருவாக்கம் உலகத்திற்கு காட்டப்பட்டுள்ளது. உலகமும் இதனை இப்போது உணர்ந்துள்ளது. அரசியல் நிலைத்தன்மை, கொள்கைகளில் வலிமை, விரைந்து முடிவெடுத்தல், உலகளாவிய நம்பிக்கை ஆகியவை இருக்கும் போது, ஒவ்வொருவரும் வளர்ச்சியின் பங்குதாரராக மாறுகிறார்கள்.

அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற மந்திரத்துடன் நாம், நமது பயணத்தைத் தொடங்கினோம். ஆனால் படிப்படியாக நாட்டு மக்கள் இதில், அனைவரும் முயற்சிப்போம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம் என வண்ணம் சேர்த்தனர். நமது கூட்டு சக்தி மற்றும் கூட்டு வளத்தை நாம் காண்கிறோம். விடுதலையின் அமிர்த பெருவிழா ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர்நிலைகளைக் கட்டமைக்கும் இயக்கமாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்தையும் சேர்ந்த மக்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்து, சேவை புரிந்து வருகின்றனர். அவர்களது சொந்த முயற்சிகளுடன் தங்களது கிராமங்களில் நீர் சேமிப்பு இயக்கத்தைப் பெருமளவில் மேற்கொண்டுள்ளனர். ஆகவே சகோதர, சகோதரிகளே, தூய்மை இயக்கமாக இருந்தாலும், ஏழைகளின் நலனுக்குப் பாடுபடுவதாக இருந்தாலும், நாடு இன்று முழுவேகத்துடன் முன்னேறி சென்று கொண்டிருக்கிறது.

சகோதர, சகோதரிகளே, 75 ஆண்டு காலப் பெருமை பேசுவதையே தொடர்ந்து செய்து கொண்டால், நமக்கு நாமே தட்டிக் கொடுத்துக் கொள்வதால், நமது கனவுகளைக் கைகழுவியதாய் ஆகிவிடலாம். கடந்த 75 ஆண்டு காலம் அற்புதமாக இருந்தாலும், பல்வேறு சவால்கள், நிறைவேறாத கனவுகள் இன்றும் உள்ளன. நாம் விடுதலையின் அமிர்த காலத்தில் நுழையும் போது அடுத்த 25 ஆண்டு காலம் நாட்டுக்கு மிகக் குறிபிடத்தக்க காலமாகும். அதனால் தான் இன்று நான் 130 கோடி நாட்டு மக்களின் வலிமை குறித்துப் பேசுகிறேன். அவர்களின் கனவுகளைக் கண்டு, அவர்களின் தீர்மானங்களை உணர்ந்து பேசுகிறேன். வரவிருக்கும் 25 ஆண்டுகளில், 5 ’மூச்சுகள்’ (பிராணங்கள்) மீது நாம் கவனம் செலுத்தவேண்டும். (இனி, புரிதலுக்காக, மூச்சு / ‘பிராணம்’ என்பதை ‘இலக்கு’ என்று குறிப்பிடுவோம்) உங்களது மனவுறுதி மற்றும் வலிமையின் மீது கவனத்தைக் குவிக்க வேண்டும். இந்த ஐந்து இலக்குகளைத் தழுவுவதன் மூலம், விடுதலைப் போராட்ட வீரர்களின் கனவுகள் அனைத்தும், 2047-ல் சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் போது மெய்யாக இருக்க வேண்டும்.

5 இலக்குகள் பற்றி பேசும் போது, முதல் பிரமாணம் (உறுதி) - தீர்மானமாய் நாடு முன்னேறிச் செல்வதாகும். இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக ஆக்குவதே இந்த இலக்கு ஆகும். இதைக் காட்டிலும் குறைவாக நாம் எண்ணக் கூடாது. இரண்டாவதாக, நமது எண்ணங்களில், பழக்க வழக்கங்களில் ஒரு சிறிதும் அடிமைத்தனம் கூடாது. அதை இப்போதே வெட்டி எறிந்துவிட வேண்டும். நூற்றாண்டுகளாக இருந்து வந்த அடிமைத்தனம் நமது உணர்வுகளைக் கட்டிப்போட வழி வகுத்து விடும்; திசை திருப்பும் சிந்தனைகளை உருவாக்கி விடும். எனவே அடிமை மனப்போக்கில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். இது நமது இரண்டாவது இலக்கு ஆகும்.

மூன்றாவதாக, நமது பாரம்பரியம் மற்றும் மரபுகள் குறித்து நாம் பெருமை கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் பொற்காலத்தை இந்தியாவுக்கு வழங்கியது இதே மரபுதான். இந்த செழுமையான பாரம்பரியம் காலம் காலமாக இருந்து வந்துள்ளது. இது தற்போது புதுமையைத் தவியுள்ளது. இந்தப் பாரம்பரியம் குறித்து நாம் பெருமை கொள்ள வேண்டும். நான்காவது இலக்கும் சமமாக முக்கியத்துவம் கொண்டதுதான். அது - ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு. 130 கோடி மக்களிடையே நல்லிணக்கம், நல்லெண்ணம் இருத்தல் வேண்டும். அப்போதுதான் ஒற்றுமை, வலுவாய் இருக்கும். இந்த இலக்கை நனவாக்கும் முனைவுகளில் ஒன்றுதான் – ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ முழக்கமாகும்.

ஐந்தாவது இலக்கு, மக்களின் கடமை. பிரதமராக இருந்தாலும், முதல்வராக இருந்தாலும் இதிலிருந்து விலக்கு பெற முடியாது. அவர்களும் பொறுப்பான குடிமக்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கும் நாட்டின் மீதான கடமைகள் உள்ளன. அடுத்த 25 ஆண்டு காலத்தில் இந்த கனவுகளை நாம் எட்டுவதற்கு இந்த லட்சியம் அவசியமாகும்.

அன்பார்ந்த நாட்டுமக்களே, உங்களது கனவுகள் பெரிதாக இருக்கும் போது, உங்களது தீர்மானமும் பெரிதாக இருக்கும். அதற்கேற்ப, முயற்சிகளும் பெரிதாக இருக்க வேண்டும். வலிமையும் பெரிய அளவுக்கு முக்கியமான அம்சம்தான். 1940 - 42 காலத்தை நினைவு கூர்ந்தால், கொடிய பிரிட்டிஷ் ஆட்சியின் பிடியில் இருந்து நாடு மீண்டது என்பதை கற்பனை செய்யக்கூட கடினமாக இருக்கும். சில கைகள் துடைப்பத்தை எடுத்தன. சிலர் நூல் நூற்பதை மேற்கொண்டனர். பலர் சத்யாகிரகப் பாதையை தேர்ந்தெடுத்தனர். சிலர் தங்கள் நிலையை எண்ணி வருந்தினார்கள், அதே நேரத்தில் சிலர் புரட்சிப் பாதையையும் மேற்கொண்டனர். இவர்கள் ஒவ்வொருவரின் தீர்மானமும் விடுதலை என்ற மிகப்பெரிய இலக்காவே இருந்தது. இந்தப் பெரிய லட்சியத்தை அடைந்து அவர்கள், நமக்காக விடுதலை பெற்றுத் தந்துள்ளனர். நாம் தற்போது சுதந்திரமாக இருக்கிறோம். நமது லட்சியம் சிறிதாக இருந்திருந்தால், இன்றும் நாம் அடிமைத்தனத்தில் உழன்று கொண்டு இருந்திருப்போம். மகத்தான எழுச்சி மற்றும் பெரிய கனவுகளால் நாம் விடுதலை பெற்றுள்ளோம்.

அன்பார்ந்த நாட்டுமக்களே, இந்த 76-வது சுதந்திர தினத்தின் காலைப் பொழுதில் நாம் விழிக்கும்போது, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக்க நாம் உறுதி பூண வேண்டும். 25 வயதுக்கு உட்பட்ட இன்றைய இளைஞர்கள், சுதந்திரத்தின் பெருமைமிகு நூற்றாண்டு விழாவைக் காண்பார்கள். அப்போது உங்களுக்கு 50, 55 வயது இருக்கக் கூடும். உங்களது வாழ்க்கையில் பொன்னான காலமாக அது இருக்கும் எனப் பொருள் கொள்ளலாம். இந்த 25, 30 ஆண்டுக் காலம், இந்தியாவின் கனவுகளை நிறைவேற்றுகிற காலமாக இருக்கும். உறுதி எடுத்துக்கொண்டு என்னுடன் நடந்து வாருங்கள். நண்பர்களே, மூவண்ணக் கொடியுடன் உறுதி எடுத்து நாம் அனைவரும் முழுவலிமையுடன் சேர்வோம். எனது நாடு வளர்ந்த நாடாக வேண்டும் என்பதே நமது தீர்மானமாக இருக்க வேண்டும். வளர்ச்சியின் ஒவ்வொரு அளவுகோலும் ,மக்களை மையப் படுத்தியதாய் இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதரின் நம்பிக்கையையும், விருப்பங்களையும் நாம் நிறைவேற்ற வேண்டும். எப்போது இந்தியா மிகப் பெரிய தீர்மானங்களை முன்னெடுத்தாலும், அவற்றை செயல்படுத்தியே வந்துள்ளது.

எனது முதல் உரையின் போது, நான் தூய்மை பற்றிப் பேசிய போது நாடு முழுவதும் அதனை ஏற்றுக்கொண்டது. ஒவ்வொருவரும் அவரவர்க்கு இயன்ற வகையில் தூய்மை நோக்கிப் பயணித்தனர். இப்போது அசுத்தத்தை அனைவரும் வெறுக்கின்றனர். இதை இந்த நாடு மேற்கொண்டது, செய்து வருகிறது, வருங்காலத்திலும் இது தொடரும். உலகம் ஒரு குழப்பத்தில் இருந்த போது இந்த நாடு தான் 200 கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை, குறிப்பிட்ட காலத்துக்குள் கடந்து முந்தைய சாதனைகள் அனைத்தையும் முறியடித்தது. எரிசக்திக்கு நாம் வளைகுடா நாடுகளை சார்ந்துள்ளோம். உயிரி எண்ணெய் நோக்கி நகர்வதுகுறித்து முடிவு செய்துள்ளோம். 10 சதவீத எத்தனால் கலப்பு மிகப்பெரிய கனவு போன்றது. இதற்கு சாத்தியம் இல்லை என்று பழைய அனுபவங்கள் காட்டின. ஆனால், குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே 10 சதவீத எத்தனால் கலப்பு என்னும் கனவை நாம் நனவாக்கி உள்ளோம். .

சகோதர சகோதரிகளே, குறுகிய காலத்தில் 2.5 கோடி மக்களுக்கு மின்சார இணைப்பு வழங்குதல் சாதாரண பணி அல்ல. ஆனால் நாடு அதைச் செய்து காட்டியது. இன்று லட்சக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணியை நம் நாடு வேகமாய்ச் செய்து வருகிறது. திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லா நிலை உருவாக, தற்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அன்பார்ந்த நாட்டு மக்களே, நாம் உறுதி எடுத்துக்கொண்டால் நம்மால் நமது இலக்குகளை அடைய முடியும் என்பதை அனுபவம் கூறுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நமது இலக்காக இருந்தாலும், நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டுதல் நமது நோக்கமாக இருந்தாலும், மருத்துவப் பணியாளர்களை உருவாக்குவதாக இருந்தாலும், ஒவ்வொரு துறையிலும் வேகம் அதிகரித்துள்ளது. அதனால் தான் அடுத்த 25 ஆண்டுகளுக்கு மிகப் பெரிய இலக்குகள் தேவை என நான் கூறுகிறேன். அது நமது வாழ்க்கையாகவும், நமது உறுதியாகவும் இருக்க வேண்டும்.

இரண்டாவதாக, அடிமை மனப்பான்மை மற்றும் நாட்டின் போக்கு குறித்து நான் குறிப்பிட்டேன். சகோதரர்களே, எவ்வளவு காலத்துக்கு உலகம் நமக்கு சான்றுகளை வழங்கிக் கொண்டிருக்கும்? உலகின் சான்றிதழ்களுடன் எத்தனை காலத்துக்கு வாழ முடியும்? நமது தரத்தை நாமே தீர்மானிக்க வேண்டாமா? 130 கோடி மக்களைக் கொண்ட நாடு, தனது தரத்தை உயர்த்திக் கொள்ள முடியாதா..? எந்த சூழ்நிலையிலும் பிறரைப் போல வாழ நாம் முயற்சிக்கக் கூடாதா? நமது சொந்த ஆற்றலில் வளர வேண்டும் என்பது நமது மனப்பான்மையாக இருக்க வேண்டும். அடிமைத்தனத்தில் இருந்து

விடுதலை வேண்டும் என்று விரும்பினோம். அந்த அடிமைத்தனம் நமது மனதில், ஏழு கடலுக்கு அப்பால் கூட இருக்கக் கூடாது. பல சுற்று விவாதங்களுக்குப் பின்னர், கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னர் புதிய தேசிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளதை நான் நம்பிக்கையோடு பார்க்கிறேன். அதில் குறிப்பிட்டுள்ள ‘திறன்’ - அடிமைத்தனத்தில் இருந்து நம்மை விடுவிக்கும் ஆற்றலை வழங்கும். சில நேரங்களில் நமது திறமை, மொழி எனும் தளையால் கட்டப்படுவதை நாம் காண்கிறோம். இது அடிமை மனப்போக்கின் விளைவாகும். நம் நாட்டின் ஒவ்வொரு மொழி குறித்தும் நாம் பெருமை கொள்ள வேண்டும். நமக்கு ஒருமொழி தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், அது நம் நாட்டின் மொழி என்பதில் நாம் பெருமை கொள்ளவேண்டும். இந்த மொழி நம் முன்னோர்களால் உலகுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே, இன்று டிஜிட்டல் இந்தியா கட்டமைப்பை நாம் காண்கிறோம். ஸ்டார்ட்-அப்களைக் கண்டு வருகிறோம். யார் இவர்கள்? இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் அல்லது கிராமங்களில் வாழும் ஏழைக் குடும்பங்களை சேர்ந்த திறமைசாலிகள். புதிய கண்டுபிடிப்புகளுடன் நமது இளைஞர்கள் உலகின் முன்னால் வந்துள்ளனர். நாம் காலனி ஆதிக்க மனப்போக்கைக் கைவிட வேண்டும். மாறாக நமது திறன்கள் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்.

இரண்டாவதாக, நமது பாரம்பரியம் குறித்துப் பெருமை கொள்ள வேண்டும். நமது மண்ணுடன் நாம் தொடர்பு கொள்ளும் போது நம்மால் உயரத்தில் பறக்க முடியும். நாம் உயரப் பறக்கும் போது, உலகத்தின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்க முடியும். நமது பாரம்பரியம், கலாச்சாரத்தின் தாக்கத்தை நாம் காண்கிறோம். இன்று உலகம் முழுமையான மருத்துவ சிகிச்சை பற்றி பேசுகிறது. இதைப் பேசும் போது, இந்தியாவின் யோகா, ஆயுர்வேதம், இந்தியாவின் முழுமையான வாழ்க்கை முறை ஆகியவற்றை அது உற்று நோக்குகிறது. இதுதான் உலகுக்கு நாம் வழங்கியுள்ள மரபாகும். இதன் தாக்கத்தை உலகம் உணர்ந்துள்ளது. நமது வலிமையை நாம் இப்போது காணலாம். இயற்கையோடு இயைந்து வாழ்வது எப்படி என்பதை அறிந்தவர்கள் நாம். இயற்கையை எவ்வாறு நேசிக்க வேண்டும் என்பது நமக்கு தெரியும்.

இன்று உலகம், சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்கி உள்ளது. உலகம் வெப்பமயமாதல் பிரச்சினைக்கு, மரபுசார் தீர்வு நம்மிடம் உள்ளது. இது, நமது முன்னோர்கள் நமக்கு வழங்கியது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை, வாழ்க்கை இயக்கம் பற்றி நாம் பேசும் போது, உலகத்தின் கவனத்தை நாம் ஈர்க்கிறோம். நமக்கு இந்த சக்தி உள்ளது. நெல்லும், சிறுதானியங்களும் நமது வீட்டுப் பொருட்களாகும். இதுதான் நமது பாரம்பரியம். கடின உழைப்பால் நமது சிறு விவசாயிகள் தங்களது சிறிய வயல்களில் நெல்லை விளைவிக்கின்றனர். சிறுதானிய ஆண்டு உலகம் கொண்டாடும் அளவுக்கு விரிந்துள்ளது. இது நமது பாரம்பரியத்தை உலகம் முழுதும் பாராட்டுவதையே காட்டுகிறது. இது குறித்து நாம் பெருமை அடையலாம். உலகத்துக்கு வழங்குவதற்கு நம்மிடம் நிறைய உள்ளது.

சமூக உளைச்சல் என்று வரும்போது, மக்கள் நமது குடும்ப விழுமியங்களைப் பற்றிப் பேசுகின்றனர். தனி நபரின் உளைச்சல் என்றால், யோகா பற்றிப் பேசுகின்றனர். கூட்டுப் பதற்றம் என்று வரும் போது, இந்தியாவின் குடும்ப முறை குறித்து மக்கள் பேசுகின்றனர். கூட்டுக் குடும்ப முறை ஒரு பெரும் சொத்தாகும். பல நூற்றாண்டுகளாக நமது அன்னையரும், சகோதரிகளும் செய்த தியாகத்தின் பலனால் கூட்டுக்குடும்ப முறை ஒரு மரபை ஏற்படுத்தியது. இதுதான் நமது மரபு. இந்த பாரம்பரியம் பற்றி நாம் எவ்வாறு பெருமை கொள்ளாது இருக்க முடியும்? ஒவ்வொரு உயிரிலும் நாம் சிவனைக் காண்கிறோம். ஒவ்வொரு மனிதனிலும் இறைவன் நாராயணனைக் காண்பவர்கள் நாம். பெண்களை நாராயணி என அழைக்கிறோம். தாவரங்களிலும் பக்தி காண்கிறோம். ஆறுகளைத் தாயாகக் கருதுகிறோம். ஒவ்வொரு கல்லிலும் சங்கரனைக் காண்கிறோம். இதுதான் நமது சக்தி. ஒவ்வொரு நதியையும் அன்னை வடிவில் காணும் ஆற்றலை நாம் கொண்டுள்ளோம். இத்தகைய சுற்றுச்சூழல் சார்ந்த வாழ்க்கை முறை நமது பெருமையாகும். இந்தப் பாரம்பரியம் பற்றி நாம் பெருமை கொள்ளும் போது உலகமும் அதுபற்றி பெருமைகொள்கிறது.

சகோதர, சகோதரிகளே, உலகம் ஒரே குடும்பம் எனும் மந்திரத்தை உலகத்துக்கு வழங்கியவர்கள் நாம். ஒரு சக்தியைப் பல பெயர்களில் வணங்கும் நம்பிக்கை கொண்டவர்கள் நாம். உன்னைவிட புனிதமானவன் என்ற மனப்போக்கில் இன்று உலகம் சுழன்று வருகையில் ஒருவரை ஒருவர் தாழ்த்தி, மற்றொருவர் முன்னேறும் மனப்போக்கு அதிகரித்து வருகிறது. இதுவே, மோசமான விளைவுகள், மன அழுத்தங்கள் அனைத்துக்கும் காரணமாகும். இதற்குத் தீர்வு காணும் ஞானம் நம்மிடம் உள்ளது. ‘முழுமையான சத்தியம் ஒன்று தான். அது பல வடிவங்களில் காணப்படுகிறது’ என்று நம் ஞானிகள் கூறியுள்ளனர். இதுதான் நமது பெருமை. ‘உனக்கு வெளியில் இருக்கும் அனைத்தும் உனக்கு உள்ளும் இருக்கிறது’ என்று கருதுபவர்கள் நாம். பிரபஞ்சத்தில் உள்ளவை ஒவ்வொரு உயிரினத்திலும் உள்ளது என்ற அறிவுபூர்வ சிந்தனை கொண்டவர்கள் நாம்.

உலக நலன் நாடும் மக்களாக நாம் உள்ளோம். கூட்டு நன்மை, தனிப்பட்ட நன்மை என்ற பயணத்தில் நமது மக்களுக்காக மட்டுமல்லாமல், உலகமே மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று கருதுபவர்கள் நாம். அனைவரும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதே நமது பாரம்பரிய சிந்தனையாகும். எனவே, நமது பாரம்பரியத்தை உணர்ந்து மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் கனவுகளை நனவாக்குவதற்கு இந்த உறுதிப்பாடு அவசியம்.

அன்பார்ந்த நாட்டு மக்களே.. மற்றொரு முக்கியமான விஷயம்.. வேற்றுமையில் ஒற்றுமை. மிகவும் பரந்த நம் நாட்டின் பன்முகத் தன்மையை நாம் கொண்டாட வேண்டும். பல்வேறு மரபுகள் மற்றும் சமயங்கள் ஒன்றிணைந்த அமைதியான சகவாழ்வு நமது பெருமை. நம்மைப் பொருத்தவரை, அனைவரும் சமம். யாரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பது இல்லை. இந்த உணர்வு நமக்கு முக்கியமானது. ஒவ்வொரு வீட்டிலும், மகனும், மகளும் சமம் என்ற உணர்வை உண்டாக்கினால்தான், ஒற்றுமைக்கு அடித்தளம் அமையும். அவ்வாறின்றி, தலைமுறை, தலைமுறையான பாலினப் பாகுபாட்டைத் தொடர்ந்தால், நாட்டில் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த முடியாது.

பாலின சமத்துவம் என்பது நமது முதல் தேவை. ஒற்றுமை குறித்துப் பேசும்போது… இந்தியா ஏன் ஒரே அளவீடு அல்லது தரநிலையைக் கொண்டிருக்கக் கூடாது? என்னுடைய முயற்சி, என் எண்ணம், கற்பனை, செயல் அனைத்தும், 'முதலில் இந்தியா' என்பதையே நோக்கமாய் இருக்க வேண்டும். இதன் வாயிலாக நம் அனைவருக்கும் ஒற்றுமைக்கான வழி திறக்கப்படும். நண்பர்களே, நம் அனைவரையும் ஒற்றுமையில் இணைக்க நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய மந்திரம் இதுதான். நம் சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளைப் போக்க முடியும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. உழைப்பாளிகளை மதிக்க வேண்டும் என்ற, ஷ்ரமேவ் ஜெயதேவ் கொள்கையை ஏற்றுக் கொள்வோம்.

சகோதர, சகோதரிகளே.. நீடிக்கும் எனது வலியையும் நான் செங்கோட்டையில் இருந்து பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். என் வலியை வெளிப்படுத்தாமல் என்னால் இருக்க முடியவில்லை. செங்கோட்டையின் மேடையில் இருக்கும்போது, அதனை வெளிப்படுத்துவது பொருத்தமாக இருக்காது. என்றாலும், என் நாட்டு மக்களுக்கு அதைத் தெரியப்படுத்துவேன். நாட்டு மக்கள் முன் மனம் திறந்து பேசவில்லை எனில், நான் வேறு யாரிடம் சொல்வேன்? நான் பகிர்ந்து கொள்ள நினைப்பது என்னவென்றால், நமது அன்றாட பேச்சு, செயல்களில் ஒரு வக்கிரத் தன்மையைக் காண முடிகிறது என்று சொல்வதற்கே வேதனையாய் உள்ளது. நம் அன்றாட வாழ்வில் மகளிரை இழிவுபடுத்தும் சொற்களை, வாக்கியங்களை நாம் பேசி வருகிறோம். நம் வாழ்வில், பெண்களை இழிவுபடுத்தும் அனைத்தையும் அகற்றி விடுவோம் என்று உறுதிமொழியை நாம் எடுக்க முடியாதா? இந்த தேசத்தின் கனவுகளை நனவாக்குவதில் பெண்களின் பங்கு மிகப் பெரியது. இந்த சக்தியை நான் பார்க்கிறேன். அதனால், நான் இதனை வலியுறுத்துகிறேன்.

அன்பார்ந்த நாட்டு மக்களே.. நான் இப்போது, குடிமக்களின் ஐந்து முக்கியக் கடமைகள் பற்றிப் பேசப் போகிறேன். உலகில் முன்னேற்றம் அடைந்த நாடுகளை நாம் புரிந்துக் கொள்ள முயற்சிக்கும் போது எல்லா நாடுகளுமே ஏதோ ஒரு வகையில் சாதனை செய்திருக்கும். ஒன்று ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை. மற்றொன்று, கடமையில் பக்தி நிலை. தனிமனிதன், குடும்பம், சமூகம், தேசம் என அனைத்திலும் வெற்றி இருக்க வேண்டும். இதுவே, அடிப்படையான பாதை மற்றும் அடிப்படையான உயிர் சக்தி. 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குதல் அரசின் கடமை. என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு மின்சாரத்தை சேமித்தல், குடிமகனின் கடமையாகும். ஒவ்வொரு பயிருக்கும் தண்ணீர் அளிப்பது அரசின் பொறுப்பு, கடமை. ஆனால், ' குறைந்த நீர், நிறைந்த சாகுபடி' என்பதை உணர்ந்து தண்ணீரை சேமிப்பதன் மூலம் முன்னேறுவோம் என்ற குரல் நமது வயல்களில் இருந்து ஒலிக்க வேண்டும்.

நண்பர்களே.. காவல்துறையினர், குடிமக்கள், ஆட்சியாளர், நிர்வாகி என யாராக இருந்தாலும், குடிமக்களுக்கான அடிப்படைக் கடமைகளை செய்ய தவறக் கூடாது. ஒவ்வொரு குடிமகனும் தனது கடமையைச் சரியாக செய்தால், விரும்பும் இலக்கை முன்கூட்டியே அடைய முடியும் என்று நான் நம்புகிறேன். இன்று மகரிஷி அரவிந்தரின் பிறந்தநாள். அவரது பாதங்களை வணங்குகிறேன். ’உள்நாட்டு உற்பத்தி மூலம் தன்னிறைவு அடைவோம்’ என்று அழைப்பு விடுத்த அந்த மாபெரும் மனிதரை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதுதான் அவரது மந்திரம்.

எத்தனை காலத்துக்கு நாம் பிறரை சார்ந்தே இருக்க முடியும்? நம் நாட்டுக்கு உணவு தானியம் தேவைப்படும் போது, பிறரிடம் கையேந்த முடியுமா..? நமக்கான உணவுத் தேவையை நாமே நிறைவு செய்வோம் என்று முடிவெடுத்த போது, நாடு அதை நிரூபித்துக் காட்டியதா, இல்லையா? நாம் ஒரு தீர்மானம் எடுத்தால், அது நிச்சயம் சாத்தியம் ஆகிறது. எனவே, 'தற்சார்பு இந்தியா' என்பது அரசின், சமுதாயத்தின், ஒவ்வொரு குடிமகனின் பொறுப்புமாகும். இது ஒரு நிகழ்ச்சி நிரலோ அல்லது திட்டமோ அல்ல. இது சமுதாயத்துக்கான மக்கள் இயக்கம். இதனை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

நண்பர்களே.., சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஒலியைக் கேட்கிறோம். இந்த ஒலியை கேட்பதற்காக நமது காதுகள் ஏங்கின. 75 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்முறையாக செங்கோட்டையில் பறக்கும் மூவண்ணக் கொடிக்கு, இந்தியாவில் தயாரித்த பீரங்கி வணக்கம் செலுத்தியுள்ளது. இந்த ஒலியால் ஈர்க்கப்படாத, இந்தியர் யாரேனும் இருக்க முடியுமா..? என் அன்பான சகோதர, சகோதரிகளே, இன்று நம் நாட்டு ராணுவ வீரர்களை எனது இதயத்தில் இருந்து வாழ்த்துகிறேன். துணிச்சலுடன், முறைப்படுத்தப்பட்ட வழியில், தற்சார்பு நோக்கத்தைத் தமது தோள்களில் சுமந்த ராணுவ வீரர்களுக்குத் தலை வணங்குகிறேன்.

ராணுவ வீரர் ஒருவர், தனது கைகளில் தனது மரணத்தை சுமக்கிறார். வாழ்வுக்கும், மரணத்துக்கும் இடையே இடைவெளி இல்லாத போதும், அவர் உறுதியுடன் நிற்கிறார். நமது நாட்டின் பாதுகாப்புத் துறையில் இவற்றை இறக்குமதி செய்யக் கூடாது என்று நம் ஆயுதப் படைகள், முந்நூறு சாதனங்களைப் பட்டியல் இட்டுத் தந்தது. இதனை அப்படியே ஏற்று அதன்படியே செயல்புரியத் தீர்மானம் கொண்டோம். இது சாதாரண நிகழ்வல்ல. இந்தத் தீர்மானத்தில், 'தற்சார்பு இந்தியா' என்ற கனவை நனவாக, ஆலமரமாக மாற்றும் ஒளிமயமான எதிர்காலத்தின் விதையை என்னால் காண முடிகிறது. நமது ராணுவ அதிகாரிகளுக்கு வணக்கம்..! வணக்கம்..!! வணக்கம்..!!!

5 - 7 வயதுக் குழந்தைகளுக்கும் வணக்கம் செலுத்த விரும்புகிறேன். தேசம் குறித்த உணர்வு விழித்துக் கொண்டது. 5 - 7 வயது குழந்தைகள், வெளிநாட்டு பொம்மைகளுடன் விளையாட விரும்பவில்லை என்று சொல்வதாக, பல குடும்பங்களில் இருந்து கேள்விப் படுகிறேன். 5 வயதுக் குழந்தை இந்த தீர்மானத்தை எடுக்கும்போது, அதில் உள்ள தன்னம்பிக்கை இந்தியாவின் உணர்வைப் பிரதிபலிக்கிறது. ஒரு லட்சம் கோடி, ‘உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை’ திட்டத்தைப் பற்றி பேசும்போது, தங்களது நல்வாய்ப்பை பரிசீலிதித்துப் பார்க்க, உலகம் முழுதிலும் இருந்து மக்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள். புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வரும் அவர்கள், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறார்கள். உற்பத்தி மையமாக இந்தியா மாறி வருகிறது. இது தன்னம்பிக்கை இந்தியாவுக்கான அடித்தளத்தை ஏற்படுத்துகிறது. செல்பேசி உள்ளிட்ட மின்னணுப் பொருட்களின் உற்பத்தியிலும், இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது. நாம் பிரம்மோஸ் ஏவுகணையை விண்ணில் ஏவும்போது, எந்த இந்தியர் பெருமைப்படாது இருக்க முடியும்..? இன்று நமது, ‘வந்தே பாரத்’, மெட்ரோ ரயில் பெட்டிகள் உலகையே ஈர்ப்பதாய் உள்ளன.

அன்பார்ந்த நாட்டு மக்களே.. எரிசக்தித் துறையில் நாம் தன்னிறைவு அடைய வேண்டும். ஆற்றல் துறையில் நாம் எத்தனை நாட்களுக்குப் பிறரை சார்ந்தே இருக்க முடியும்..? சூரிய எரிசக்தி, காற்றலை எரிசக்தி, ஹைட்ரஜன் எரிவாயு மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளில் நாம் தன்னிறைவு அடைய வேண்டும். அன்பார்ந்த மக்களே.. இயற்கை விவசாயம் தன்னிறைவு பெற வேண்டியது அவசியம். இன்று ‘நேனோ’ உரத் தொழிற்சாலைகள் நாட்டில் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளன. ரசாயனமற்ற விவசாயமும், இயற்கை விவசாயமும் தன்னிறைவு இந்தியாவுக்கு ஊக்கமளிக்கும். இன்று பசுமை திட்டங்கள் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் மிக வேகமாக திறக்கப்பட்டுள்ளன. இந்தியா தனது கொள்கைகள் மூலம், பொதுவெளிக்கான இடத்தைத் திறந்துள்ளது. இதேபோல, ‘ட்ரோன்’ தொடர்பாக உலகிலேயே மிகவும் முற்போக்கான கொள்கைகளை இந்தியா கொண்டுள்ளது. இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளோம்.

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே.. தனியார் துறையும், (வாய்ப்புகள் நல்குவதில்) முன்வருமாறு வேண்டுகோள்விடுக்கிறேன். உலகில் நாம் ஆதிக்கம் செலுத்த வேண்டும். உலக நாடுகளின் தேவைகளை நிறைவு செய்வதில், இந்தியா பின்தங்கக் கூடாது என்பது தன்னிறைவு இந்தியாவின் கனவுகளில் ஒன்று. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களாக இருந்தாலும், 'குறைகள் இல்லாத - பின்விளைவு இல்லாத' தயாரிப்புகளை உலகுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். சுதேசி குறித்து நாம் பெருமை கொள்ள வேண்டும்.

அன்பார்ந்த நாட்டு மக்களே.. 'வீரர் வாழ்க; விவசாயி வாழ்க’ (ஜெய் ஜவான் ஜெய் கிசான்) என்று, மதிப்புக்குரிய லால் பகதூர் சாஸ்திரி விடுத்த எழுச்சி மிக்க அழைப்புக்காக அவரை நாம் எப்போதும் நினைவில் கொள்வோம். பின்னர், அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், விஞ்ஞானத்துக்கு வணக்கம் செய்வோம் என்ற பொருள்படும், ‘ஜெய்விக்யான்’ என்ற முழக்கத்தை இணைத்தார். அதற்கு நாம் அதிக முக்கியத்துவம் அளித்தோம். தற்போதைய காலகட்டத்தில், கண்டுபிடிப்புகளுக்கு வணக்கம் செய்வோம் என்பதை நாம் சேர்க்க வேண்டியுள்ளது. ராணுவ வீரர்களுக்கு வணக்கம், விவசாயிகளுக்கு வணக்கம், விஞ்ஞானிகளுக்கு வணக்கம், கண்டுபிடிப்புகளுக்கு வணக்கம்.

நம் தேசத்தின் இளைஞர்கள் மீது நான் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளேன். உள்நாட்டுக் கண்டுபிடிப்புகளுக்கு அவர்கள் ஒரு சாட்சி. யூபிஐ-பீம் செயலிகள், இணையவழிக் கட்டணம் போன்றவற்றின் மூலம் நமது நிதிப்பரிவர்த்தனை தொடர்பான வெற்றிக் கதைகளை நாம் உலகுக்குக் காட்டியுள்ளோம். இந்தியாவில் இன்று, 40 சதவீத நிதிப்பரிவர்த்தனைகள் இணையம் மூலம் நடைபெறுகிறது. இந்தியா, உலககுக்கு ஒரு புதிய திறனை வெளிப்படுத்தி உள்ளது.

அன்பார்ந்த மக்களே.. இன்று நாம் அனைவரும் 5ஜி தொழில்நுட்ப உலகினுள் நுழையத் தயாராக இருக்கிறோம். உலகளாவிய இலக்குகளை எட்டுவதற்கு நாம் நீண்டநாள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு கிராமத்தின் கடைசி மைல்தூரம் வரை ஆஃப்டிகல் ஃபைபர் சென்றடைவதை உறுதி செய்வோம். டிஜிட்டல் இந்தியா என்கிற கனவு, கிராமப்புற இந்தியா வாயிலாக நிறைவேறும் என்று உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இந்தியாவின் கிராமப்புறங்களில் நான்கு லட்சம் பொதுசேவை மையங்கள், அந்த கிராமத்து இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளதைக் கேட்டு மகிழ்ச்சியடைகிறேன். கிராமப்புறங்களில் நான்கு லட்சம் இணையவழித் தொழில்முனைவோர் உருவாகி வருவதை, கிராமப்புற மக்கள் அனைத்து சேவைகளையும் இணையம் மூலம் பெறப் பழகி வருவதை நாம் பெருமையாகக் கருதலாம். தொழில்நுட்ப மையமாக மாறி வரும் இந்தியாவின் சக்தி இதுதான்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, செமிகண்டக்டர்களை உருவாக்குதல், 5ஜி யுகத்தில் நுழைதல், ஆஃப்டிகல் ஃபைபர் நெட்வொர்க்கைப் பரப்புதல் போன்றவற்றை உள்ளடக்கிய டிஜிடல் இந்தியா இயக்கம், நம்மை நவீனமாக, வளர்ச்சி பெற்றதாக நிலைநிறுத்துவதற்காக மட்டுமே அல்ல. கல்வித் துறையின் ‘ஈக்கோ சிஸ்டத்தில்’ முழு மாற்றம், சுகாதாரத் துறையின் உட்கட்டமைப்பில் புரட்சி, வேளாண் வாழ்க்கையில் மேம்பாடு உள்ளிட்டவை டிஜிட்டல் மயமாக்கல் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.

நண்பர்களே.. மனிதகுலத்துக்கான தொழில் நுட்பப் பத்தாண்டு என்று விளிக்கப்படும் இந்தக் காலகட்டத்தில், இந்தியா அபாரமாக முன்னேற இருக்கிறது. இது, தொழில்நுட்பத் துறையின் பத்தாண்டு. தொழில்நுட்பத் துறையில் இந்தியா உலகளவில் மதிக்கப்படும் சக்தியாக உயர்ந்துள்ளது. இந்த, தொழில்நுட்பப் பத்தாண்டில் பங்களிக்கும் திறன் நமக்கு இருக்கிறது.

‘அடல் புதுமை இயக்கம்’, ‘இன்க்யூபேஷன்’ மையங்கள், ஸ்டார்ட் அப் முயற்சிகள் புதிய வேலை வாய்ப்புகளைத் திறந்து விடும் புதிய துறையாக உருவாகி வருகின்றன. விண்வெளி இயக்கம்.. ஆழ்கடல் இயக்கம்.. விண்ணைத் தொடுவதோ பெருங்கடலுக்குள் ஆழமாய்ச் செல்வதோ நாம் புதிய இலக்குகளை நோக்கி முன்னேறி வருகிறோம். அன்பார்ந்த நாட்டு மக்களே.. நாம் மறந்து விடக்கூடாது. பல நூற்றாண்டுகளாக இந்தியா இதனைப் பார்த்து வருகிறது. சில முன்மாதிரி வேலைகள் தேவைப்படும் போதே, நாம் மகத்தான உயரங்களை எட்ட வேண்டி உள்ளது. அதேசமயம், ஒரு தேசமாக, புதிய உயரங்களை அடைய நினைக்கும் போது, அடித்தளம் வேரூன்றி இருத்தல் அவசியம்.

இந்தியப் பொருளாதாரத்தின் முன்னேற்றத் திறன், அடிமட்ட வலிமையை சார்ந்துள்ளது. எனவே, நமது சிறு விவசாயிகள், தொழில் முனைவோர், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், குடிசைத் தொழில்கள், குறுந்தொழில்கள், தெருவோர வியாபாரிகள், வீட்டுத் தொழிலாளர்கள், தினக்கூலிகள், ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுநர்கள், பேருந்து சேவை வழங்குவோர் போன்றவர்களின் திறனை உணர்ந்து நாம் வலுப்படுத்த வேண்டும். அதிகாரம் பெற வேண்டிய மக்கள் இவ்வாறு வலுப்படுத்தப் படுவது, இந்தியாவின் ஆற்றலுக்கு உத்தரவாதம் அளிக்கும். எனவே நமது பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தள சக்தியான இவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திசையில் நம் முயற்சிகள் தொடர்கின்றன.

அன்பார்ந்த நாட்டு மக்களே, நமக்கு 75 ஆண்டுகால அனுபவம் இருக்கிறது. இந்த 75 ஆண்டுகளில் நாம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளோம். புதிய கனவுகளைக் காணும் அதே நேரத்தில் 75 ஆண்டுகால அனுபவத்தில் பல கொள்கை முடிவுகளை எடுத்துள்ளோம். அமிர்த காலம் என்று அழைக்கப்படும் எதிர்வரும் 25 ஆண்டுகளில் நமது மனித வளத்தின் மிக அதிக பலன் எதுவாக இருக்க முடியும்? இயற்கைச் செல்வத்தின் முழுப்பயனைப் பெறுவது எப்படி? இந்த லட்சியங்களுடன் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். எனது கடந்த கால அனுபவங்களை வைத்து சில கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன். சட்டத்துறையில் பணியாற்றும் பெண்களின் சக்தியை நீதிமன்றங்களில் பார்த்திருப்பீர்கள். ஊரகப் பகுதிகளில் பொதுமக்களின் பிரதிநிதிகளாகத் திகழ்பவர்களைப் பார்த்திருப்பீர்கள். கிராமங்களில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்க, நமது மகளிர் சக்தி அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுவதைக் காண முடிகிறது.

அறிவியலில் நமது நாட்டின் மகளிர் சக்தி, உச்சத்தில் இருப்பதைக் காண்கிறோம். காவல்துறையிலும் மகளிர், மக்களைக் காக்கும் பணியில், மகத்தான கடமை ஆற்றி வருகிறார்கள். வாழ்வின் அனைத்துத் தரப்பிலும், விளையாட்டு மைதானமாக இருந்தாலும், போர்க்களமாக இருந்தாலும், நமது நாட்டின் மகளிர் சக்தி, புதிய வலிமையோடும் புதிய நம்பிக்கையோடும் முன்வருவதைக் காண முடிகிறது. தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள்… அனைவரின் பங்களிப்பும், அடுத்த 25 ஆண்டுகளில் மிகக் கூடுதலாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் பங்களிப்பு, அளவிட இயலாததாக இருக்கும். நம்மிடம் இருக்கும் அளவீடுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டதாக இருக்கும். இந்தக் கருத்துக்கு நாம் முக்கியத்துவம் அளிப்பதோடு, நமது புதல்வியருக்கு சரியான வாய்ப்புகளை, சந்தர்ப்பங்களை, வசதிகளை உருவாக்கித் தருவதன் மூலமாக, அவர்கள் நமக்கு இன்னமும் கூடுதலாக பலனைத் திருப்பி அளிப்பார்கள். அவர்கள் நாட்டைப் புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்வார்கள். அமிர்த காலத்தின் கனவுகளை நிறைவேற்றுவதற்கு இந்த மகளிர் சக்தி தனது முயற்சிகளையும், பங்களிப்பையும் வழங்குமானால், எதிர்பார்க்கும் காலத்துக்கு முன்பாகவே நமது கனவுகளை நிறைவேற்ற இயலும். இதன் காரணமாக இக்கனவுகள், முனைப்பானதாக உயிரோட்டம் மிக்கதாக, பிரகாசமாக அமையக்கூடும்.

நண்பர்களே, நமது கடமைகளை உணர்ந்து முன்னேறுவோம். இந்த நேரத்தில், நமது நாட்டில் கூட்டாட்சிக் கட்டமைப்பை வழங்கும் வகையில் நமது அரசியல் சாசனத்தை வடிவமைத்த சிற்பிகளுக்கு நன்றி செலுத்துகிறேன். அதில் கூறப்பட்டுள்ள தத்துவங்களின் அடிப்படையில் நாம் ஒருவரோடு ஒருவர் தோளோடு தோள் நின்று பணியாற்றினால் மட்டுமே அமிர்த காலத்துக்கான கனவுகளை நம்மால் நிறைவேற்ற இயலும். திட்டங்கள் மாறுபடலாம், பணியாற்றும் விதம் மாறுபடலாம். நமது இலக்குகள் மாறாது. தேசத்துக்கான கனவுகள் மாறாது. இத்தகைய சகாப்தத்தை நோக்கி முன்னேறுவோம்.

நான் குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது நமது கொள்கைகளுக்கு ஒவ்வாத அரசு மத்தியில் பதவியில் இருந்ததை நினைவு கூர்கிறேன். குஜராத்தின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்ற மந்திரத்தை அப்போது கடைப்பிடித்து வந்தேன். நாட்டின் வளர்ச்சி என்பது நமது இதயத்தின் அடிநாதமாக இருக்க வேண்டும், நாம் எங்கிருந்த போதிலும், நாட்டை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றிய, பல்வேறு துறைகளில் உதாரணமாகத் திகழ்ந்த, பல மாநிலங்கள் நம் நாட்டில் உண்டு. இது நமது கூட்டாட்சித் தத்துவத்துக்கு வலுசேர்க்கிறது. ஆனால் இன்றைய தேவை - , கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்துவம். போட்டித்திறன் கொண்ட கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்துவம். வளர்ச்சி ஏற்பட, போட்டி அவசியம். ஒவ்வொரு மாநிலமும், தான் முன்னேறிச் செல்வதாக உணரவேண்டும், அதாவது பந்தயத்தில் முந்துவதற்கு, கடினமாக முயற்சிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட மாநிலம் 10 நற்காரியங்களைச் செய்திருந்தால், இதர மாநிலங்கள் 15 நற்காரியங்களைச் செய்ய முன் வரவேண்டும். ஒரு மாநிலம் ஒரு பணியை 3 ஆண்டுகளில் முடித்திருந்தால், அதே பணியை பிற மாநிலங்கள் 2 ஆண்டுகளில் நிறைவேற்றத் துடிக்க வேண்டும். மாநிலங்கள் மற்றும் அரசின் ஒவ்வொரு துறைகளுக்கு இடையிலான இத்தகைய போட்டித் திறன், வளர்ச்சியின் உச்சத்துக்கு நம்மை இட்டுச் செல்லும்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, 25 ஆண்டுகால அமிர்த காலத்தைப் பற்றி பேசுகையில், ஏராளமான சவால்கள், தடைகள், பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை நான் அறிவேன். இவற்றை நான் குறைத்து மதிப்பிடவில்லை. இதற்கான வழிகளைக் கண்டறிந்து தொடர்ந்து முயற்சி மேற்கொள்வோம். ஆனால், இங்கே, இப்போது இரண்டு முக்கியமான விஷயங்கள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்புகிறேன். கருத்து தெரிவிக்க ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. கால அவகாசத்தை முன்னிட்டு இரண்டு முக்கியமான விஷயங்கள் குறித்து மட்டும் தற்போது பேச உள்ளேன். இத்தகைய சவால்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிகளை நாம் சிந்திக்கவில்லை என்றால் 25 ஆண்டுகால நீண்ட அவகாசம் இருந்தபோதிலும் கூட அது தவறாகிவிடக் கூடும். ஆகையால் எல்லாவற்றையும் பற்றி கருத்துத் தெரிவிப்பதைக் காட்டிலும், இரண்டு முக்கிய விஷயங்கள் குறித்து மட்டும் கவனம் செலுத்த விழைகிறேன்.

அவற்றில், ஒன்று ஊழல்; மற்றொன்று அதிகாரத்தில் வாரிசு ஆதிக்கம். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் மக்கள் வறுமையால் வாடிக்கொண்டிருக்கும் நிலையில், வாழ்வதற்கு நிலையான இடம் ஒன்று இல்லாது இருக்கும் நிலையில், மற்றொரு புறம், தவறான வழியில் சேர்த்து வைத்த பணத்தை எங்கே மறைத்து வைத்திருப்பது என்று தெரியாத பிரிவினரும் இருக்கிறார்கள். இது சரியான சூழல் இல்லை. ஆகவே, ஊழலுக்கு எதிராக நமது வலிமையை எல்லாம் ஒன்று திரட்டிப் போராட வேண்டியுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் நன்மைக்காக பணியாற்றுகையில், தவறான கரங்களுக்கு சென்று கொண்டிருந்த இரண்டு லட்சம் கோடி ரூபாயை நவீன உத்திகளான நேரடி பணபரிமாற்றத் திட்டம், ஆதார் மற்றும் கைபேசி உதவியோடு தடுத்து நிறுத்தியுள்ளோம். முந்தைய ஆட்சியின் போது நாட்டின் வங்கிகளில் கடன் பெற்றுப் பிறகு நாட்டை விட்டே தப்பிச் சென்ற நபர்களின் சொத்துகளை முடக்கி, அவர்களிடமிருந்து கடன் தொகையை திரும்பப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். சிலர் சிறைக்குச் செல்லும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டைக் கொள்ளையடித்தவர்கள், அந்த சொத்துகளை திருப்பி அளித்தாக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

சகோதர சகோரிகளே, ஊழலுக்கு எதிரான மிக முக்கிய கட்டத்தை நாம் எட்டியுள்ளோம் என்பதைக் கண்கூடாக உணர்கிறேன். மிகப் பெரும் தலைகள் கூட, இதிலிருந்து தப்ப இயலாது. இந்த உந்துதலோடு இந்தியா தற்போது ஊழலுக்கு எதிரான தீர்க்கமான ஒரு கால கட்டத்தில், அடியெடுத்து வைக்கிறது. பெரும் பொறுப்புகளுடன் இந்தக் கருத்தை நான் செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து பறை சாற்றுகிறேன். சகோதர சகோரிகளே, ஊழல்வாதிகள் இந்த நாட்டை, கரையான் போல அரித்து விடுகிறார்கள். இதற்கு எதிராகப் போராட வேண்டும், அந்தப் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும், இறுதியாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். ஆகவே அன்பார்ந்த 130 கோடி நாட்டு மக்களே, என்னை ஆசீர்வதியுங்கள், என்னை ஆதரியுங்கள். இந்தப் போராட்டக் களத்தில் இறங்குவதற்கு உங்களது ஆதரவை ஒத்துழைப்பை நாடி வந்துள்ளேன்.

இந்தப் போரில் இந்தியா வெற்றி வாகை சூடும் என்று நம்புகிறேன். சாமான்யரின் வாழ்க்கை இத்தகைய ஊழல் காரணமாக பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளது. சாமானியர்கள் கவுரவத்துடனும், கண்ணியத்துடனும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். அன்பார்ந்த நாட்டு மக்களே, நாட்டில் நிலவும் அருவருக்கத்தக்க ஊழல், அனைவரும் அறிந்ததாக அனைவரும் கருத்துத் தெரிவிக்கத் தக்கதாக இருந்தபோதிலும், சில நேரங்களில் ஊழல்வாதிகளுக்குக் காட்டப்படும் மென்மையான போக்கு மிகவும் கவலை அளிப்பதாக, எந்த நாடும் ஏற்கத் தக்கதாய் இல்லை.

நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஊழல்வாதி என்று முத்திரை குத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டு சிறையிலே நாட்களைக் கழித்துக் கொண்டு இருக்கும் நிலையிலும், தங்களைப் பற்றி புகழாரத்தைச் சூட்டிக் கொண்டு தங்கள் நிலையை உயர்த்திக் காட்டிக் கொள்ளும் கூச்சமற்ற நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். குப்பைகள் மீது வெறுப்பு ஏற்படாத வரையில் தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படப் போவதில்லை. ஊழல் மற்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராக நமக்கு வெறுப்பு ஏற்படாத வரை, சமூக அவலமாகக் கருதி அவர்களைப் புறக்கணிக்காத வரை இந்த மனநிலையில் மாற்றம் ஏற்படாது. ஊழலைப் பற்றியும், ஊழல்வாதிகள் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகிறது.

முக்கியத்துவம் அளித்து விவாதிக்கப்பட வேண்டிய மற்றொரு கருத்து - வாரிசுகளுக்கும் உறவினர்களுக்கும் சலுகை அளிக்கும் போக்கு. இது போல வாரிசுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் போக்கு பற்றிப் பேசும் போது, அது அரசியில் ரீதியிலானது என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். நிச்சயமாக அப்படி அல்ல, துரதிருஷ்டவசமாக பிற துறைகளிலும் இந்தப் போக்கு நிலவுகிறது. குடும்ப ரீதியிலான வாரிசு ஆதரவுப் போக்கு பல துறைகளில் படர்ந்து பரவியுள்ளது. இது நமது நாட்டின் வளமைமிக்க திறமைகளை பெருமளவில் பாதிக்கிறது. நமது நாட்டின் எதிர்கால ஆற்றல் வளம் இதனால் பாதிப்புக்கு உள்ளாகிறது. வாரிசு ஆதரவு காரணமாக உண்மையிலே தகுதி வாய்ந்த நபர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப் படுகின்றன. அவர்கள் ஓரம் கட்டப் படுகிறார்கள். இதுவே ஊழலுக்கு முக்கிய காரணி ஆகிறது.

தகுதி இருந்தும் முறைப்படுத்தப் பட்டுள்ள விதிமுறைகள் வாயிலாக வாய்ப்புகளைத் தர இயலாத தகுதி வாய்ந்த நபர்கள் வேலை கிடைப்பதற்காக ஊழல் வழிமுறைகளில் ஈடுபடுகிறார்கள். நாம் அனைவரும் கடுமையாக உழைத்து வாரிசு ஆதரவுக் போக்குக்கு எதிராக விழிப்புணர்வை பெற்று செயல்பட வேண்டும். இத்தகைய முயற்சிகளால் மட்டுமே நமது அமைப்புகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க இயலும்; முறையான நடவடிக்கைகளை ஊக்குவிப்பது தொடர்பாக நமது எதிர்கால சந்ததியினரிடம் நேர்மறை எண்ணங்களை விதைக்க இயலும். நமது நாட்டின் பல்வேறு துறைகளின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு இது அவசியமாகும். அதே போல அரசியலிலும் கூட வாரிசு ஆதரவுப் போக்கு நாட்டின் வளமான எதிர்காலத்துக்கு அநீதி இழைக்கிறது. இத்தகைய போக்கு அந்த குறிப்பிட்ட குடும்பத்துக்கு மட்டுமே பலன் அளிக்குமே தவிர நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல.

செங்கோட்டை கொத்தளத்தில் மூவண்ணக் கொடியின்கீழ் நின்று இந்திய சாசனத்தை நினைவில் கொண்டு திறந்த மனதுடன் கூறுகிறேன் - நாம் அனைவரும் இந்திய அரசியலை பரிசுத்தமாக்க, தூய்மைப்படுத்த நமது நாட்டின் பல்வேறு துறைகளை தூய்மையாக மாற்ற, நமது நாட்டை குடும்ப ஆதரவு மனநிலையில் இருந்து மாற்றி தகுதி அடிப்படையிலான ஒன்றாக உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும். முன் எப்போதும் விட இந்தக் கருத்துக்கு இப்போது கூடுதல் முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால், இந்த சமூக சூழலில், தன்னை முன்நிறுத்த தனது குடும்ப உறுப்பினர் யாரும் இல்லையே என்கிற எண்ணமும், தனக்குத் தகுதி இருந்தும், போட்டியில் தன்னால் வெற்றி பெற இயலவில்லையே என்கிற ஆதங்கமும் மேலோங்கி விடும். இது, நாட்டு நலனுக்கு உகந்தது அல்ல.

நாட்டின் இளைய சமுதாயமே, உங்களின் ஒளிமயமான எதிர்காலத்துக்காக, உங்களின் கனவுகளுக்காக, வாரிசு ஆதரவுப் போக்குக்கு எதிராக உங்களின் ஆதரவை எதிர்நோக்கி உள்ளேன். வாரிசு அரசியலுக்கு எதிரான போராட்டத்தில் உங்கள் ஆதரவை நாடுகிறேன். இதை எனது அரசியல் சாசனப் பொறுப்புணர்வாகக் கருதுகிறேன். இது, ஜனநாயகப் பொறுப்புணர்வும் கூட. இந்த செங்கோட்டைக் கொத்தளத்தில் இருந்து உதிர்க்கும் சொற்களுக்கு இருக்கும் சக்தி குறித்து நம்பிக்கை கொண்டுள்ளேன். ஆகவே, இந்த வாய்ப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். கடந்த சில நாட்களில் விளையாட்டுத் துறையில் சாதனைகளுக்காகப் பெற்ற பாராட்டுகளைக் கண்டோம். கடந்த காலத்தில் நம்மிடம் திறமைகள் இல்லை என்று பொருள் கொள்ளக் கூடாது. விளையாட்டு உலகில் நமது புதல்வர்களும், புதல்விகளும் இதற்கு முன்பாக சாதனை எதுவும் புரியவில்லை என்பதல்ல. ஆனால், அவர்கள் வாரிசு ஆதரவு சூழலில் புறந்தள்ளப்பட்டார்கள் என்பதே வேதனையான உண்மை. இந்தநிலை காரணமாக போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர், வீராங்கனைகளிடம், நாட்டுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற உத்வேகம் இல்லாமல் இருந்தது. ஆனால், விளையாட்டுத் துறையில் வெளிப்படைத்தன்மை மீட்கப்பட்ட பிறகு, தகுதி அடிப்படையில், அவர்கள் தேர்வு செய்யப்பட்ட போது, விளையாட்டு மைதானங்களில் திறமைக்கு மதிப்பு வழங்கப்பட்ட போது, நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மூவண்ணக் கொடி பல்வேறு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் உயர ஏற்றப் படுவதை, தேசிய கீதம் பல்வேறு சர்வதேச மைதானங்களில் இசைக்கப்படுவதைக் கேட்கும் போது பெருமிதமாக உள்ளது.

வாரிசு ஆதரவு மற்றும் குடும்ப அரசியலில் இருந்து விடுதலை பெறும்போது யாரும், பெருமையோடு நாட்டுக்காகத் தமது பங்களிப்பை வழங்குகிறார்கள் அதனால் இத்தகைய வெற்றி வாய்ப்புகள் நம்மை வந்தடைகின்றன. அன்பார்ந்த நாட்டு மக்களே, ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன, சந்தேகமில்லை. இந்த நாட்டின் முன் கோடிக்கணக்கான சவால்கள் நிறைந்திருக்கின்றன என்றால், கோடிக்கணக்கான தீர்வுகளும் இருக்கின்றன. 130 கோடி மக்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். லட்சியத்தோடு, அதை நிறைவேற்றும் உறுதியோடு, 130 கோடி மக்களும் ஒரு அடியை முன்னெடுத்து வைத்தால் இந்தியா 130 கோடி அடிகள் முன்னேறும். இத்தகைய திறனுடன் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். இதுதான் அமிர்த காலத்தின் முதல் சூரியோதயம். ஒவ்வொரு தருணத்தையும் நாம் இந்த 25 ஆண்டுகளில் நினைவில் கொள்ளவேண்டும். தாய்நாட்டுக்காக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும், வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும், நமது சுதந்திரப் போராட்ட வீர்ர்களுக்கான உண்மையான அஞ்சலியாக வாழ்ந்து காட்ட வேண்டும். கடந்த 75 ஆண்டுகளாக நாட்டை இவ்வளவு தூரம் கொண்டு சேர்க்கப் பாடுபட்டோர் மீதான நினைவுகள் பயனுள்ளதாக இருக்கும்.

புதிய வாய்ப்புகளை வளர்த்து, புதிய தீர்மானங்களை நிறைவேற்றி, தன்னம்பிக்கையுடனான முன்னேறும் அமிர்த காலத்தை இன்று தொடங்குமாறு நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். சுதந்திரத்தின் அமிர்த ‘பெருவிழா’ தற்போது அமிர்த ‘காலம்’ என்கிற திசை நோக்கித் திரும்பி உள்ளது. அனைவருக்குமான முயற்சி (சப்கா ப்ரயாஸ்) அமிர்த காலத்துக்கு அவசியமாகும். ‘சப்கா ப்ரயாஸ்’ – நல்விளைவுகளைத் தரும். 130 கோடி மக்களின் இந்திய அணி (டீம் இந்தியா) என்கிற உணர்வு நமது நாட்டை முன்னெடுத்துச் செல்லும். 130 கோடி மக்கள் கொண்ட இந்த இந்திய அணி, ஒரே அணியாக முன்னேறி நடப்பதன் மூலம், எல்லாக் கனவுகளையும் நனவாக்கும். இந்த நம்பிக்கையுடன் என்னோடு சேர்ந்து கூறுங்கள் ஜெய் ஹிந்த்... ஜெய் ஹிந்த்... ஜெய் ஹிந்த்... ஜெய் ஹிந்த்

பாரத் மாதா கி ஜே... பாரத் மாதா கி ஜே... பாரத் மாதா கி ஜே... பாரத் மாதா கி ஜே... வந்தே மாதரம்... வந்தே மாதரம்... வந்தே மாதரம்... வந்தே மாதரம்...

(தொடர்வோம்..)

> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 75 -‘தடுத்ததும் நாம்! தந்ததும் நாம்!’ | 2021

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x