எண்ணப்படும் வேங்கைப் புலிகள்!

By பவித்ரா

ஆண்ட்ராய்ட் போன் செயலி, எம்-எஸ்.டி.ஆர்.ஐ.பி.இ.எஸ்., (Monitoring System for Tigers-Intensive Protection and Ecological Status) மென்பொருள் உதவியுடன் அகில இந்திய அளவில் புலிகள் தொகை மதிப்பீடு இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. தேசிய புலிப் பாதுகாப்பு ஆணையம்,  ‘வைல்ட்லைஃப் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா’ ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளும் விஞ்ஞானிகளும் இந்தக் கணக்கெடுப்பின் துல்லியத்தன்மை குறித்துப் பகிர்ந்துகொண்ட விவரங்கள் இவை:

புலிகளை அவை எந்தப் பகுதியில் படம்பிடிக்கப்பட்டவை என்ற விவரங்களுடன் கூடிய ஒளிப்படங்களை வைத்தும், அவை வெவ்வேறு இடங்களுக்கு நகரும் விவரங்களை வைத்தும் முந்தைய கணக்கெடுப்புகளை ஒப்பிட்டும் ஆண்ட்ராய்ட் போன் செயலி, புலிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும். வனத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒளிப்படக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாலும் ஆண்ட்ராய்ட் தொழில்நுட்பத்தாலும் புலிகளின் எண்ணிக்கையைச் சரியாகவும் துல்லியமாகவும் கணக்கிட முடியும். 2006-ம் ஆண்டில் 9 ஆயிரத்து 700 கேமராக்களை வைத்து இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஆண்டில் 15 ஆயிரம் கேமராக்கள் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

புலிகள் கணக்கெடுப்பு நடக்கும் நிலப்பரப்பு, மாதிரிச் சோதனையின் தீவிரம், கேமராக்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால் உலகின் மிகப் பெரிய வனவுயிர்க் கணக்கெடுப்பு நடவடிக்கை இதுவே!

அனைத்திந்திய புலிகள் மதிப்பீட்டுத் திட்டத்தின் நான்காவது சுற்றுக் கணக்கெடுப்புக்காக 10.22 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் ‘புராஜக்ட் டைகர்’ திட்டத்துக்காக மாநில அரசுகளுக்கு ஏழு கோடி ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் எடுக்கப்படும் புலிகளின் ஒளிப்படங்கள்  ‘நேஷனல் ரெப்பாசிட்டரி ஆப் கேமரா ட்ராப் போட்டாகிராப்ஸ் ஆஃப் டைகர்ஸ்’-ல் ஆவணப்படுத்தப் படும். பருவநிலை மாறுதல்களின் காரணமாகப் புலிகளுக்கு ஏற்படும் தாக்கம் குறித்தும் ஆராயப்படும்.

ஒரு வனத்தில் தண்ணீர் போதுமானதாக இருக்கிறதா, புலி வேட்டையாடும் உயிர்களின் எண்ணிக்கை நிறைவாக உள்ளதா, மனிதர்களின் நடமாட்டம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்வதற்கு ஒளிப்படங்கள் உதவும்.

இந்திய அரசு தேசிய அளவில் நான்காண்டுகளுக்கு ஒருமுறை புலிகளைக் கணக்கெடுக்கிறது. 2006, 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் இதுவரை மூன்று கணக்கெடுப்புகள் நடந்துள்ளன. இந்தக் கணக்கெடுப்புகளில் முறையே 1,411, 1,706, 2, 226 என புலிகளின் எண்ணிக்கை கணக்கிடப்படுள்ளது. தற்போதைய கணக்கெடுப்பில் விலங்குகள் அபரிமித மதிப்பீட்டுத் துறையில் உருவாகியிருக்கும் சமீபத்திய தொழில்நுட்பங்களையும் இந்தக் கணக்கெடுப்பில் முதல்முறையாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

2014-ம் ஆண்டில் 70 சதவீதப் புலிகளின் எண்ணிக்கை ‘கேமரா ட்ரேப்பிங்’ முறையில் 1686 புலிகளின் தனிப்படங்களைக் கொண்டு கணக்கிடப்பட்டது. மிச்சம் 30 சதவீதப் புலிகளின் எண்ணிக்கை, புள்ளியியல் மாதிரிக் கணக்கெடுப்புகள், வேட்டை உயிர்கள், வாழ்விடம், மனிதர்களின் தாக்கம் உள்ளிட்ட காரணிகளைப் பரிசீலித்த ஆய்வுகளின் வழியாக எடுக்கப்பட்டது.

1972-ல் கொண்டு வரப்பட்ட வனவுயிர்ப் பாதுகாப்புச் சட்டம் 2006-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. அதிலிருந்து புலிகள் பாதுகாப்பில் பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. புலிகள் பாதுகாப்பில் இருக்கும் பெரிய இடர்பாடு என்னவெனில் அரசின் கொள்கை வகுப்பாளர்களுக்கும், வனவுயிர் மேலாண்மை செய்பவர்களுக்கும் விஞ்ஞானப்பூர்வமான தேசியக் கண்காணிப்பு நடைமுறை ஒன்றை வழங்க இயலாததே. ஏனெனில், இந்தியாவில் புலிகள் வசிக்கும் நிலத்தின் பரப்பும் எண்ணிக்கையும் அதிகம்.

சர்வதேச நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் ‘வைல்ட்லைஃப் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா’ அமைப்பு நான்காண்டுகளுக்கு ஒருமுறை புலிகளின் எண்ணிக்கையையும் சூழ்நிலையையும் ஆராய்ந்து அறிக்கை தரவேண்டும். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், மாநில வனத்துறைகள், குடிமைச் சமூக அமைப்புகள் ஆகியவற்றுடன் சேர்ந்து இந்த ஆய்வு நடத்தப்பட வேண்டும். 18 இந்திய மாநிலங்களில் 4 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வாழ்ந்துவரும் புலிகளைக் கணக்கெடுக்கும் பணி இது. 2006-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடத்தப்பட்ட மூன்று கணக்கெடுப்புகளின் வாயிலாகப் புலிகளின் எண்ணிக்கை 5.8 சதவீத அளவில் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு நடத்தப்படும் கணக்கெடுப்பின் முடிவுகள் அடுத்த ஆண்டு வெளியிடப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்