கர்லின் எபியின் பெயரைக் கேட்டாலே குழந்தைகளின் முகங்கள் மகிழ்ச்சியில் மலர்கின்றன. குழந்தைகளைக் கட்டிப்போடும் மாயாஜால வித்தைகள் எதுவும் கர்லின் எபிக்குத் தெரியாது. ஆனால், அந்த வித்தைகளைவிட அதிக சக்தி வாய்ந்த பொம்மைகள் கர்லினிடம் இருக்கின்றன!
கதைபேசும் பொம்மைகள்
கர்லின் எபி வைத்திருக்கும் பொம்மைகள் என்னதான் சொல்கின்றன என்று பார்ப்பதற்காக அவருடன் புறப்பட்டோம். சேலம் மணக்காடு காமராஜர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குள் கர்லின் எபி குழுவினரின் வாகனம் நுழைந்தவுடன் வகுப்பறையில் இருந்த குழந்தைகள் உற்சாகம் பொங்க வண்டியைச் சூழ்ந்தனர். வண்டியின் பின் கதவு திறக்க, அதுவே சிறிய மேடையாக மாறியது. சிவப்பு நிறத் திரைக்குப் பின்னால் சிங்கம், புலி, கிளிகளின் சத்தம் கேட்க, குழந்தைகள் விழிகளில் ஆர்வம் மேலிடப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
மேடையில் ஒவ்வொரு பொம்மையாக சேர்ந்து தோன்றின. பொம்மைகளின் அசைவுக்கு ஏற்ப தன் குரலை மாற்றிக்கொண்டு குழந்தைகளுக்கு இணக்கமான மொழியில் கர்லின் எபி பேசினார். பாரதி கண்ட புதுமைப் பெண்களை உருவாக்க வேண்டும் என்பதில் தொடங்கி பெண் கல்வி, பாலியல் தொல்லையில் இருந்து தற்காத்துக்கொள்வது, பெண்களின் பொருளாதார முன்னேற்றம் என்று பல்வேறு செய்திகளைக் குழந்தைகளுக்குப் புரிகிற விதத்தில் விளக்கினார்.
குழந்தைகளுக்கு விழிப்புணர்வு
சிறு குழந்தைகள் புரிந்துகொள்ளும் வகையில் நல்ல தொடுதல், தவறான தொடுதல் குறித்தும்
எடுத்துச் சொன்னார். தகாத முறையில் யாராவது தொட்டதுமே அவர்களிடம் இருந்து தப்பிக்க முதலில் கூச்சலிட வேண்டும், பிறகு யாரையாவது உதவிக்கு அழைக்க வேண்டும் என்று ஒரு பொம்மை சொல்ல, இன்னொரு பொம்மை குழந்தைப் பாதுகாப்பு அவசர எண் 1098 குறித்துச் சொல்கிறது. பெண் சிசுக் கொலைத் தடுப்பு, பாலியல் வன்முறை எதிர்ப்பு, குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு, குழந்தைத் திருமணத்தைப் புறக்கணிப்பது போன்றவை குறித்து ஒவ்வொரு பொம்மையும் விளக்கின.
நடுநடுவே நாடகமும் நடந்தது. மதுப் பழக்கத்துக்கு அடிமையான தந்தை, இருமலும் நோயும் கண்டு அவதியுறுகிறார். அதைப் பார்த்துத் தாயும் குழந்தைகளும் கதறுகின்றனர். பிறகு குழந்தைகள் தங்கள் தந்தையைத் திருத்தி நல்வழிப்படுத்தும் பொம்மலாட்ட நாடகத்தைப் பார்த்த குழந்தைகள் சிலரது கண்களில் துளிர்த்த கண்ணீரில், சமுதாயத்துக்குக் கேடு விளைவிக்கும் மதுவின் கோர தாண்டவம் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.
“தற்போது சிறு வயதியிலேயே பல குழந்தைகள் வெவ்வேறு விதமான போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகிறார்கள். அவற்றில் இருந்து தற்காத்துக்கொள்வது குறித்தும் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளிடம் பாதுகாப்பான உலகத்தைப் படைத்திட பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறோம்” என்கிறார் கர்லின் எபி.
எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் பள்ளிக் குழந்தைகளையும் மலைவாழ் கிராம மக்களையும் சந்தித்துப் பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் கர்லின் எபியின் செயல்பாடுகள், சமுதாய மறுமலர்ச்சிக்கான உறுதியான அஸ்திவாரம்!
படங்கள்: எஸ்.குருபிரசாத்
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago
கல்வி
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago