இதுதாண்டா நடிப்பு

By ரோஹின்

வெகுளி வெள்ளச்சாமிக்குத் திடீர்னு சினிமா இயக்கணும்னு ஆசை வந்துருச்சு. ஃபிலிம் சுருளுக்குள்ள நடிகர்கள் எல்லாம் எப்படி போய் உக்காந்துக்குறாங்க, எப்படி சண்டை எல்லாம் போடுறாங்கன்னு ஆச்சரியப்பட்டு ஃபிலிம் ரோலைக் கழற்றி அப்படி இப்படின்னு திருப்பிப் பார்க்குற வெள்ளைக்கு, இப்படி ஓர் ஆசை ஏன் வந்துச்சுன்னே தெரியல. ஆனா, அதுக்கு முன்னால நிறைய தமிழ்ப் படமா பார்த்தான். அதைப் பார்த்ததுக்கு அப்புறமா படம் எடுக்குற அறிவு தனக்கு நிறைய இருக்குதுன்னு அவனுக்கு ஒரு நம்பிக்க வந்துருச்சுபோல.

அவன் படமெடுக்கப்போறான்னு தெரிஞ்சு உடனே அவனைச் சுத்தி ஐந்தாறு அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸும் கூடீட்டாங்க. அதில் முதலில் வந்தவரு ஆறு பேருக்கு மேல யாரையும் சேர்க்க மாட்டோம்னு அதன் பின்னால வர்றவங்களை எல்லாம் அனுப்பிவச்சுட்டார். தான் மனசுல நெனச்ச உடனேயே இவங்கள்லாம் ட்ரை பண்ண ஆரம்பிச்சுருப்பாங்களோன்னு வெள்ளைக்கே மைல்டா ஒரு டவுட். ஆனா யாருமே சம்பளம் எவ்வளவுன்னு கேட்கவோ வெள்ளைச்சாமி யாருட்ட அஸிஸ்டண்டா இருந்தான்னு யோசிக்கவோ இல்லங்கிறதால அவனுக்கும் அவங்கள ரொம்ப பிடிச்சுப்போச்சு.

தான் எடுக்கும் படம் வித்தியாசமானதா இருக்கணும்னு வெள்ள ஆசப்பட்டான். அத தன்னோட அஸிஸ்டண்ட்ஸ்கிட்ட சொன்னான் வெள்ள. கதை இல்லாம படமெடுக்குறாங்க, ஃபிலிம் இல்லாம படமெடுக்குறாங்க, பாட்டு இல்லாம படமெடுக்குறாங்க, ஏன் புத்தியில்லாமகூடப் படமெடுக்குறாங்க ஆனா இதுவரைக்கும் யாரும் நடிப்பு இல்லாம படமெடுக்கலன்னு கூவினான் ஒரு ஒண்ணாந்தர அஸிஸ்டண்ட். அதக் கேட்ட வெள்ளை நடிப்பே இல்லாம படமெடுக்கணும்னு முடிவு பண்ணிட்டான்.

கதைக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சான். அப்ப ஒரு அஸிஸ்டண்ட் நாம் படம் தயாரிக்கறதா சொல்வோம். நிறைய பேரு கதை சொல்ல வருவாங்க, அதுல ஒரு நல்ல கதையா எடுத்துக்கிடலாம்னு ஐடியா கொடுத்தான். புத்திய கத்தி மாதிரி தீட்டுறானேன்னு வெள்ளைக்கே புல்லரிச்சுப் போச்சு. ஆனா, நாளைக்கு அவன் கோர்ட் கேஸுன்னு போயிட்டா என்ன பண்றதுன்னு வெள்ளைக்குப் பயம் வந்துருச்சு. அதனால் அவன் வேற என்ன பண்ணலாம்னு யோசிச்சான்.

ராத்திரியெல்லாம் மூலையில உட்கார்ந்து மூளையைக் கசக்கினான் வெள்ளை. ஃபார் எ சேஞ்ச் (தனக்கு இங்கிலீஷ்லாம் வருதேன்னு வெள்ளைக்கு வெட்கமே வந்துருச்சு) பழைய தமிழ்ப் படத்துல இருந்தே, ஏன் கதையை சுடக் கூடாதுன்னு முடிவு பண்ணினான். உதவியாளர்கள்ட்ட கேட்டான். அதுவும் புதுசு இல்ல அப்படின்னு, அதுக்கு நிறைய உதாரணங்களை உதவியாளர்கள் அள்ளிப்போட்டாங்க. இவ்வளவு அறிவுக் கொழுந்துகளா இருக்காங்களே பயபுள்ளய்ங்கன்னு நெனச்சு வெள்ள கண்ணுல தண்ணி வந்துருச்சு.

ஓடாத ஒரு படத்தைப் பார்த்து அப்படியே சீன் பை சீன் எடுக்க ஒரு வழியா முடிவு பண்ணினான். குண்டு குண்டா அழகா எழுதும் ஓர் ஒல்லியான அஸிஸ்டண்ட் ராத்திரியெல்லாம் முழிச்சு படத்தப் பார்த்து திரைக்கதை, வசனம் எழுதிட்டான். நடிக்கவே தெரியாத ஒரு நடிகன் பற்றிய கதை அது. இதுக்கு ஹீரோவா யாரெப் போடலாம்னு யோசிச்சாங்க.

நம்ம நடிகர்கள் நடிப்புன்னு வந்துட்டா சோறு தண்ணியில்லாம பாடுபடுவாங்க. கேரக்டருக்காக ஒல்லியாவாங்க, குண்டாவாங்க, மொட்டை போடுவாங்க, தலைகீழா நிப்பாங்க... அப்படிப்பட்டவங்களுக்கு இந்த ரோல் அல்வா சாப்டுற மாதிரி... ஏகப்பட்ட நடிகர்கள் இப்படி ஒரு கேரக்டருக்குக் காத்திட்டிருக்காங்க, ஆனாலும் கப்ஸா காந்த் இதப் பண்ணலாம். அவர்தான் எல்லா விஷயத்தையும் கத்து வச்சிருக்கதா சொல்றாரு. நடிக்கத் தெரியாத நடிகன் ரோல பண்ண அவரவிட்டா ஆளே இல்லன்னு முடிவு பண்ணி அவர்ட்ட சொன்னாங்க.

இதுதாண்டா நடிப்புன்னு டைட்டில் வச்சாங்க. கீழ சின்னதா ‘அன் ஆக்டர் வித்தவுட் ஆக்டிங்’ அப்படின்னு கேப்ஷனும் போட்டாங்க. கப்ஸாவை சும்மா சொல்லக் கூடாது, மனுஷன் பிச்சு உதறிட்டாரு. அனைத்து ஷாட்டும் ஒரே டேக்கில் ஓகேயாச்சு. மறதியாகக்கூட அவர் ஒரு காட்சியிலும் நடிக்கல. அதை எல்லா டிவி பேட்டியிலயும் வெள்ள சொன்னான். அந்த அளவு அவர் அந்த கேரக்டரோட கேரக்டரா மிங்கிள் ஆயிட்டார். படம் கேக்கவே வேண்டாம். அப்படி ஒரு ஹிட். வசூல் கன்னாபின்னான்னு எகிறிருச்சு. இந்தி, தெலுங்கு டப்பிங் உரிமை இதுவரை இல்லாத அளவுக்குப் பேசப்படுதுன்னு பத்திரிகைல எழுதினாங்க. அப்புறம்தான் அது வெள்ளைக்கே தெரிய வந்துச்சு.

கப்ஸா காந்தின் நடிப்புத் திறமை இவ்வளவு நாளும் வெளியவே வரலன்னு எல்லோரும் சொன்னாங்க. படத்தில் தென்பட்ட பின் நவீனக் கூறுகளை எல்லாம் புத்திசாலி விமர்சகர்கள் பூதக் கண்ணாடியால பார்த்துப் பார்த்து புட்டு புட்டு வச்சாங்க. அப்பதான் ஒரு பூதம் கெளம்புச்சு. படத்தின் கதை தன்னோடதுன்னு ஒருத்தரு கெளம்பி வந்தாரு. வெள்ளைக்கு ஒண்ணுமே புரியல. ஆனாலும் இதை அப்படியே விடக் கூடாதுன்னு பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு பண்ணினான். அந்தக் கதைக்காக தான் பட்ட பாடெல்லாம் சொன்னான். ஒரு பாட்டில் ரத்தத்தை வித்து ஒரு பாட்டில் மை வாங்குனத சொன்னபோது, எளகுன மனசு கொண்ட ஓரிரு செய்தியாளர்கள் கர்சீப்பால் கண்களைத் தொடச்சுக்கிட்டாங்க.

தன்னோட பேட்டிய டிவியில பாத்த வெள்ளைக்கு சட்டென்று பல்பு எரிந்தது, அடுத்த படத்துல தானே கதாநாயகனா நடிக்கணும்னு முடிவுபண்ணிட்டான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

17 mins ago

சினிமா

38 mins ago

தமிழகம்

45 mins ago

வலைஞர் பக்கம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்