திருப்பதி அருகே மூட நம்பிக்கையால் 2 மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர்

By என்.மகேஷ்குமார்

வீட்டிலேயே 2 மகள்களை நரபலிகொடுத்த நன்கு படித்த தம்பதியைஆந்திர போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் சித்தூ மாவட்டம், திருப்பதி அடுத்துள்ள மதனபள்ளி அரசு மகளிர் கல்லூரி துணை முதல்வராக பணியாற்றுபவர் புருஷோத்தம் நாயுடு (56), இவரது மனைவி பத்மஜா (53). இவர் தனியார் கல்லூரி முதல்வராக பணிபுரிகிறார்.

இவர்களுக்கு அலக்யா (27), சாய் திவ்யா (22) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். அலக்யா போபாலில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார். இவர் கரோனா தொற்று விடுப்பில் வீட்டில் இருந்தார். சாய் திவ்யா, பிபிஏ படித்து முடித்து இசை பயின்று வந்தார். புருஷோத்தம் நாயுடுவின் குடும்பத்தினர் கடந்த ஆண்டு மதனபள்ளி சிவா நகரில் புதிதாக வீடு கட்டி குடியேறினர். பக்தி அதிகம் காரணமாக இவர்களது வீட்டில் அடிக்கடி பூஜைகள் நடப்பது வழக்கம். கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பூஜைநடைபெற்றுள்ளது. அப்போது, மகள்கள் இருவரும் அலறும் சத்தத்தை அக்கம் பக்கத்தினர் கேட்டுள்ளனர். ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை.

மறுநாள் காலை (நேற்று) மூத்த மகள் அலக்யாவின் வாயில்தாமிர சொம்பை வைத்து அடித்துகொலை செய்துள்ளனர். இளையமகள் சாய் திவ்யாவின் வயிற்றில்சூலத்தால் குத்தி படுகொலை செய்துள்ளனர். இவர்கள் இருவரும் பூஜை அறையில், பூஜைபொருட்கள் அதிகமாக உபயோகிக்கப்பட்ட இடத்தில் நிர்வாணமாக விழுந்து இறந்து கிடந்தனர்.

இதுகுறித்து புருஷோத்தம் நாயுடு, தனது கல்லூரியில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு போனில் தகவல் கொடுத்துள்ளார். அவர் மதனபள்ளி போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் டிஎஸ்பி மனோகராச்சாரி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால், போலீஸாரையோ, அங்கு கூடிய பொதுமக்களையோ, வீட்டுக்குள் விடமாட்டேன் என புருஷோத்தம் நாயுடு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதன் பின்னர் புருஷோத்தம் நாயுடு, பத்மஜா ஆகியோரை போலீஸார் வீட்டிலேயே கைதுசெய்து, மகள்களின் சடலங்களைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

‘‘பிள்ளைகளுக்கு நல்ல ஆரோக்கியம், நல்ல வருங்காலத்தை கொடுக்கவே சிறப்புமந்திர பூஜைகள் செய்தேன். எங்களது மகள்கள் இறக்கவில்லை. விரைவில் அவர்கள் தூங்கி எழுந்து விடுவார்கள். அதுவரை அவர்களை எரிக்கவோ அல்லது புதைக்கவோ செய்ய வேண்டாம்’’ என போலீஸாரிடம் இருவரும் கெஞ்சினர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

மனநல பாதிப்பு அல்ல.. மனநோய்..

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை இயக்குநர் பூர்ண சந்திரிகா கூறியதாவது: மூடநம்பிக்கைக்கும் படிப்புக்கும் தொடர்பு இல்லை. படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரிடத்திலும் மூடநம்பிக்கை உள்ளது. ஆனால், தனது குழந்தைகளை நரபலி கொடுப்பது மூடநம்பிக்கையின் உச்சக்கட்டம். இதை மனநல பாதிப்பு என்பதைவிட, மனநோய் என்று சொல்வதே சரியானது. குழந்தைகளை கொன்றுவிட்டு, குழந்தைகள் இறக்கவில்லை. மீண்டும் வருவார்கள் என்று சொல்வதைப் பார்த்தால், அமெரிக்காவில் மீண்டும் உயிர்த்தெழுவோம் எனக் கூறி உயிரிழந்தவர்கள்தான் நினைவுக்கு வருகிறது.

இதுபோன்று மக்கள் மூடநம்பிக்கையில் இருக்க விழிப்புணர்வு இல்லாததே முக்கிய காரணம். பணக்காரர் ஆக வேண்டும், அனைவரும் நம்மை பாராட்ட வேண்டும் போன்றவை உடனடியாக நடந்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதுபோல் உடனே நடக்காது என்று தெரிந்தாலும் முயற்சியை கைவிடுவதில்லை. தவறான நபர்களிடம் சென்று பூஜை, பரிகாரம், நரபலி போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

உலகம்

57 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்