குஜராத் சென்ற ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலை, போலீஸார் தடுப்புக் காவலில் வைத்து பின்னர் விடுவித்தனர்.
இதைக் கண்டித்து டெல்லியில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் திரண்டனர். அப்போது பாஜகவினருக்கும், ஆம் ஆத்மி கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது.
தொண்டர்களை வன்முறைக்கு தூண்டியதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் ஷாஜியா இல்மி, அசுதோஷ் மற்றும் பேராசிரியர் அனந்த்குமார் உட்பட பலர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 145, 147, 149, 37, 353 மற்றும் 427 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அவர்கள் அனைவரையும் வியாழக்கிழமை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து டெல்லி போலீஸார் விசாரணை நடத்தினர்.
ஷாஜியா இல்மி செய்தியாளர்களிடம் கூறுகையில், “எப்.ஐ.ஆரில் என் பெயர் உள்ளதால் என்னிடம் விசாரிக்கப்பட்டது. போராட்டம் நடந்த போது அங்கு என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். கல்வீச்சை முதலில் துவங்கியது ஆம் ஆத்மியினர் என்பது பொய். கல்வீச்சு நடத்திய பாஜகவினர், போலீஸாரின் கண்களுக்கு தெரியவில்லை” எனக் குற்றம் சாட்டினார்.
தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், “அராஜகத்தையும், வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று தேர்தல் ஆணையத்திடம் பாரதிய ஜனதா கட்சி கோரியுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் மற்றும் தேர்தல் ஆணையர்களை வியாழக்கிழமை நேரில் சந்தித்து பாரதிய ஜனதாவின் துணைத்தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் அக்கட்சியின் தலைவர்கள் குழு மனு அளித்துள்ளது.
பின்னர், செய்தியாளர்களிடம் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது: “தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த முதல்நாளிலேயே ஆம் ஆத்மி கட்சியினர் வன்முறையிலும், அராஜகத்திலும் ஈடுபட்டுள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க அக்கட்சியினர் முயற்சிக்கின்றனர். இத்தகைய வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் சில வெளிநாட்டு சக்திகள் உள்ளன.
ஆம் ஆத்மி கட்சி குறித்து குடியரசுத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கும் புகார் அனுப்பியுள்ளோம்” என தெரிவித்தார்.
இதற்கிடையே, பாஜக. தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி, ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி காவல்துறை துணை ஆணையர் மற்றும் டெல்லியின் தேர்தல் அதிகாரியான அமேயே அபயாங்கர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தபின், அரசியல் நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் முன்கூட்டியே தெரிவிக்காதது ஏன் எனவும், இதற்காக ஆம் ஆத்மி கட்சி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
46 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
3 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago