பொன்னியின் செல்வன் பாடல் அனுபவம் 3 | ராட்சஸ மாமனே - அழகால் ‘வதம்’ செய்யும் குந்தவை

By குமார் துரைக்கண்ணு

'பொன்னியின் செல்வன் பாகம் - 1' படத்தின் 3-வது பாடலாக வெளிவந்தது இந்த 'ராட்சஸ மாமனே' பாடல். ஒரே நேரத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியிட்டபட்டது. இந்தப் பாடல். கிருஷ்ணன் பாட்டு என்பதால் மட்டுமின்றி, சோகத்தின் சாயலும் களிப்பின் மெருகும் கலந்தோடியிருந்த கொடும்பாளூர் இளவரசியான வானதியின் அழகையும் சுபாவத்தையும் இசையால் விவரிக்கிறது இப்பாடலின் துவக்கத்தில் வரும் குழலிசை.

கம்சனை கிருஷ்ணர் வதம் செய்வதற்குமுன், அவரை கிண்டலடித்து அவருடைய கோபத்தை தூண்டும் வகையில் சுமார் 4.49 நிமிடங்கள் வரும் இந்தப் பாடல் ஒரு ஃபோக் சாங். கவிஞர் கபிலன் இந்தப் பாடலை எழுதியுள்ளார். ஸ்ரேயா கோஷல், பாலக்காடு ஸ்ரீராம் மற்றும் மகேஷ் விநாயக்ராம் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் வெளிவந்த நாள் முதலே ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

கம்சனை வதம் செய்வதற்காக தேவகி வசுதேவரின் மகனாக பிறந்தார் கிருஷ்ணர். தேவகியின் அண்ணன் கம்சன், கிருஷ்ணரின் தாய்மாமன். தேவகிக்கு 8-வதாக பிறக்கும் குழந்தை கம்சனை வதம் செய்யும் என்ற அசரீரியின் வாக்கால் அச்சம்கொண்ட கம்சன், தேவகிக்கு பிறக்கும் குழந்தைகளைத் தொடர்ந்து கொன்று வந்தான். இறுதியில் கிருஷ்ணர் பிறந்து கம்சனை வதம் செய்வார்.

இதனை அடிப்படையாக கொண்டு இந்தப் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. பாடலின் தொடக்கத்தில் இருந்தே, கம்சனை கேலி செய்யும் வகையிலான வார்த்தைகள் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

"முத்தத்துல சித்தத்துல
தித்தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள
புத்தி வைக்க வந்தேன்

ராட்சஸ மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேர புத்திதான் " என்று பாடலின் பல இடங்களில், கம்சனை கேலி செய்யும் வகையிலான சொற்களை கபிலன் பயன்படுத்தியிருக்கிறார்.

அதேபோல், தன்னைப்பற்றி கம்சன் பாடும்போது,

"அண்டங்களின் அண்டங்களின்
துண்டுகளை
கண்டங்களை கண்டங்களை
வென்றெடுத்து
கொண்ட ஒரு கொண்ட ஒரு
கோமகன் நான்

என்னிகரை என்னிகரை
விண்ணுலகில்
மண்ணுலகில் மண்ணுலகில்
தந்திரனாய் மந்திரனாய்
வந்தவனே யார்

கத்துங்கடல் கத்துங்கடல்
எட்டுத் தொட
சூரியனை சூரியனை
போட்டு இட வடமதுரை
வலம் வருவேன் நான்"

இந்த வரிகளில், உலகில் உள்ள கண்டங்களை எல்லாம் துண்டுத் துண்டாக வென்ற அரசன் நான், விண்ணுலகிலும் மண்ணுலகிலும் தந்திரங்களும், மந்திரங்களும் தெரிந்த எனக்கு நிகரானவன் யார், கடலும் வானமும் சேரும் இடமிடத்தில் சூரியனை தொட்டு வட இந்தியாவின் மதுராவை வலம் வருபவன் நான் என்று தனது வீரதீர பெருமைகள் குறித்து கம்சன் பாடுவது போல எழுதப்பட்டிருக்கிறது.

இதையெல்லாம் கேட்டும் அசராத கிருஷ்ணர்,

"எண்ணமில்லையா, திண்ணமில்லையா
நான் சின்ன பிள்ளையா
நீ கூச்சலிட்டு ஆட்சி செய்ய

தொல்லை செய்வதா
பிள்ளை வைவதா
பல்லை கொய்வதா
நீ காட்டு முள்ளில்
வேட்டி போல
மாட்டிக் கொள்வதா "

என்னை சின்ன பையன் என்று நினைத்து கொண்டாயா, காட்டு முள்ளுச் செடியில் வேட்டி மாட்டிக்கொண்ட கதையாக நீ தான் என்னிடம் சிக்கியிருக்கிறாய் என்று பதிலளிக்கும் வகையில் எளிமையான சொற்களைக் கொண்டு பாடல் எழுதப்பட்டிருக்கிறது.

கிருஷ்ணன் போல் வேடமணிந்து வானதியும், கம்சனாக வந்தியத்தேவனும் நடனமாடும் வகையில் இந்தப் பாடல் எடுக்கப்பட்டுள்ளது. வானதியும் வந்தியத்தேவனும் இடம்பெற்றுள் இந்தப் பாடலின் வதம் நடக்கும் காட்சிகளுக்காக பாடலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள கொன்னக்கோல் சிறப்பாக அமைந்திருக்கிறது.

இந்த நாட்டிய நிகழ்ச்சியைக் காண வரும் குந்தவை, செம்பியன் மாதேவியுடன் அமர்ந்து நாட்டியத்தைக் கண்டு ரசிப்பது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குந்தவையின் அருகில் சேந்தன் அமுதன் அமர்ந்திருப்பது குறித்து சமூக ஊடகங்களில் பலரும் டிகோடிங் செய்து வருகின்றனர்.

சோழ தேசத்து மக்களின் முக்கிய பொழுதுப்போக்காக பண் கேட்பதும், நாடகம் பார்ப்பதும் இருந்தன. வாய்ப்பாட்டுக்கு குழலும், யாழும், வீணையும் பக்க வாத்தியங்களாக இருந்தன. காப்பியங்களில் கூறப்பட்ட யாழ் வகைகளும், பண் வகைகளும் பயிற்சியில் இருந்தன. இடையர் ஏறு தழுவும்போது ஏறங்கோள் என்ற தனிப்பறையை முழங்கினர்.

வாத்தியங்கள் உருவாக்குவதில், செய்முறைகள் இருந்தன. மட்கிய மரம், வாளால் வெட்டுண்ட மரம், இடி விழுந்த மரம் ஆகியவற்றைக் கொண்டு வீணை செய்யத் தடை விதிக்கப்பட்டது. வீணை வாசிக்கும்முன் அதற்கு மலர் சூட்டப்பட்டது. இசைக்கலையும், கூத்தையும் விளக்கமாக கூறப்பட்ட நூல்கள் பல இருந்தன.

சாந்திக் கூத்து, ஆரியக்கூத்து, சாக்கைக் கூத்து, தமிழகக் கூத்து, தெருக் கூத்து என்று ராஜராஜன் காலத்தில் கூத்துகளில் சில வகைகள் உண்டு. சில கூத்துகளில் ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டார்கள். இவர்கள் கூத்தப்பெருமக்கள் என்று அழைக்கப்பட்டார்கள். கோயில்களில் மட்டுமில்லாமல் மடங்களிலும் கூத்துகள் நடைபெற்றதாக குறிப்புகள் கூறுகின்றன.

கம்சனை வதம் செய்ய கிருஷ்ணர் அவதரித்தது அனைவரும் அறிந்ததுதான் என்றாலும், இதன் வழியே இயக்குநர் மணிரத்னம் 'பொன்னியின் செலவன்-பாகம் 1' திரைப்படத்தில் சொல்லப்போகும் சுவாரஸ்யம் என்ன என்பதை அறிய இன்னும் 9 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

இணைப்பு : ratchasa mamaney - Lyric Video

முந்தைய அத்தியாயம் : பொன்னியின் செல்வன் பாடல் அனுபவம் 2 | சோழா சோழா - போர்க்களத்தில் துளிர்க்கும் நந்தினியின் நினைவுகள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்